Total Pageviews

Thursday, April 16, 2015

உடல் பருமனை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்.

உடல் பருமனாக உள்ளீர்களா?

 உடல் பருமனை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். அது இன்று, நோயின் அடையாளமாக மாறி போயிருக்கிறது.

‘கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக பெருகிவருகிறது. இது ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு அறிகுறி’ என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சித்த மருத்துவர் என். சந்திரகுமார் இங்கே விரிவாக விளக்குகிறார்.

‘இந்திய மக்கள் தொகையில், 15 சதவிகிதத்தினர் உடல் பருமனுடன் இருக்கின்றனர். தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதில், ஆண்கள் 20 சதவிகிதத்திற்கு மேலும், பெண்கள் 25 சதவிகிதத்திற்கு மேலும் உடல் பருமனால் பாதிப்புக்குள்ளாகி தவிக்கின்றனர்’ என்று புள்ளிவிவரங்களை அடுக்கியவர், பாதிப்புகளை பற்றி பேசினார்.

‘அதிக பருமனால், மிக விரைவிலேயே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உடலின் எடையை தாங்கமுடியாமல் எலும்பு மூட்டு தேய்மானம் ஏற்படலாம்.

இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் அதிக கொழுப்பு சேருவதால், பித்தப் பையில் கற்கள், வயிற்றுப் புண், வாயு தொந்தரவு, தோல் நோய், சுவாசக் கோளாறு, தூக்கமின்மை, அதீத தூக்கம் போன்ற பல நோய்கள் தாக்கக்கூடும். அதிக உடல் பருமனாக இருந்தால், தூக்கத்திலேகூட மூச்சு நின்று விடக்கூடிய அபாயம் இருக்கிறது. கர்ப்பப்பையில் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஆண், பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மை ஏற்படும்.

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலமாக உடல் பருமனை சரி செய்துவிட முடியும். ஆனால், உடல் பருமன் பிரச்னை அளவுக்கு மீறி முற்றி போய்விட்டால், உடம்பில் உள்ள கொழுப்பை ஊசி மூலம் உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஜாக்கிரதை!’ என்று எச்சரிக்கும் டாக்டர், உடல் பருமனை குறைப்பதற்கான டிப்ஸ்களை வழங்கினார்.

அதிகமாக எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.

தோல் மற்றும் கொழுப்பு நீக்கிய கோழி இறைச்சியைதான் சாப்பிட வேண்டும்.

ஆடு, மாடு இறைச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அரிசி சாதத்தின் அளவை குறைத்து, கோதுமை, கம்பு, கேழ்வரகு, ஓட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

பழங்கள், பழ ரசங்கள், காய்கறிகள் போன்ற நீர் சத்து நிறைந்த உணவை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும், இரவில் கோதுமை சப்பாத்தி, தோசை போன்ற டிபன்தான் சாப்பிடவேண்டும்.

தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். இதனால், உடலிலிருந்து அதிகஅளவு சிறுநீர் மற்றும் வியர்வை வெளியேறும்படி பார்த்துக் கொள்ளமுடியும்.

புடலங்காய் அல்லது வெண்டைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் பருமன் கணிசமாக குறையும்.

கொத்தமல்லி விதை (தனியா) தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்ட கொதிக்க வைத்து, காலை மற்றும் மாலை வேளையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காபி, டீ மற்றும் பானங்களில் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து, கருப்பட்டி மற்றும் பனக்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.

இவையெல்லாம் தாண்டி, வீட்டை பெருக்குவது, தோட்ட வேலை, வாகனம் கழுவுதல், துணி துவைப்பது போன்று குனிந்து நிமிர்ந்து செய்யக்கூடிய அன்றாட வேலைகளே உடல் பருமனைக் குறைப்பதற்கான உன்னத பயிற்சிகள்தான்!

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...