Total Pageviews

Thursday, June 16, 2022

பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பைக் கொடுப்பது முக்கியம் !

எனது மன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன, அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்படவைத்தது"

முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து

என் எதிரே பரிதாபமே உருவெடுத்து வந்தது போல ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தார் வழக்கு தொடுத்தவரும் அவரே!



ஐயா எங்களுக்கு ஒரே மகள், என் வீட்டுக்காரருக்கு கைகால் வராது, நான் நாலைந்து வீட்டில் வீட்டு வேலை செய்து அதில் வரும் சம்பாத்யத்தில்தான் கணவரையும் மகளையும் காப்பாற்றி வந்தேன்,வருகிறேன்.


மகளை கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன் பலரது கால்களில் விழுந்து நல்ல பள்ளியில் படிக்கவைத்தேன் வேலை செய்யும் வீட்டில் நல்ல உணவு கொடுத்தால் அதை சாப்பிடாமல் மகளுக்கு கொண்டுவந்து கொடுத்து அவள் சாப்பிட்டு சந்தோஷப்படுவதை பார்த்து மகிழ்வேன், அதே போல யார் யாரிடமோ கெஞ்சி வேலையும் வாங்கிக் கொடுத்தேன். அவள் இப்போது சம்பாதிக்க துவங்கிவிட்டாள் எங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும் இனி அவள் எங்களை பார்த்துக் கொள்வாள் எனறு நினைத்த போது அவள் காணாமல் போய்விட்டாள், அவளை அவளது விருப்பமின்றி யாரோ மயக்கும் வார்த்தை கூறி கடத்திப் போயிருப்பதாக சந்தேகப்படுகிறேன், ஆகவே எப்படியாவது என் மகளை கண்டுபிடித்து சேர்த்துவைக்க வேண்டும் என்ற கேட்டிருந்தார்.


நீதிமன்றத்தின் உத்திரவுப்படி அவரது மகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


மிக அலட்சியமாக நின்றிருந்த அந்த இளம் பெண், ‛யாரும் என்னைக் கடத்தவில்லை! நான் மேஜரான பெண், எனக்கு பிடித்தவருடன் வாழ்வதற்காக நானேதான் விரும்பிச் சென்றேன்' என்றார்.நல்ல ஆங்கிலத்தில் பேசிய அந்த பெண்ணிடம் சம்பாதிக்கும் தோரணையும் இருந்தது.


சரிம்மா..அதுக்காக உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கிவிட்ட பெற்றோரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அம்போன்னு விட்டுட்டு போய்ட்டியேம்மா என்ன நியாயம் என்று கேட்டேன்


அந்த இளம் பெண்ணிடம் இருந்து பதில் ஏதுமில்லை


இதற்கு மேல் சட்டத்திலும் இடமில்லை


ஆனால் என் மனம் கேட்கவில்லை ஏதாவது ஒரு ‛ட்விஸ்ட்' நடக்கும் என்று நினைத்தேன்


ஏனேனில் இது சினிமாவில் வரும் நீதிமன்றம் அல்ல, நிஜமான நீதிமன்றம் இங்கே உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு, எல்லாமே எந்திரத்தனமாக நடந்துவிடாது


‛சரிம்மா.. உன்னை ஒண்ணும் சொல்லலை, உன் கூட உன் அம்மா கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்கிறார், ஒரு மணி நேரம் பேசிவிட்டு வாருங்கள்' என்றேன்


இருவரும் பேசும் போது அந்த தாயின் பாசம் மகளின் அடிமனதை நிச்சயம் தொடும், பழசை நினைத்துப் பார்ப்பாள், கொஞ்சமாவது பாசத்தோடு ஏதாவது செய்ய முற்படுவாள் என்பது என் எண்ணம்.ஆனால் அவர்கள் பேசி முடித்துவந்த போது நான் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை


‛ஐயா உங்களுக்கு எல்லாம் நிறைய சிரமம் கொடுத்துட்டேன், என் மகள், அவ விருப்பப்படி விரும்பினவங்ககூடயே இருக்கட்டும், அவ சந்தோஷமா இருந்தா சரி' என்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டு,‛ ஒரே ஒரு வேண்டுகோள்தான்யா, இவ மேலே இவங்க அப்பனுக்கு கொள்ளை உசிரு, மகளை பார்க்கிறதுக்காக வந்துருக்காரு, அந்த மனுஷன்ட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகச் சொல்லுங்கய்யா' என்றார்.


‛எங்கம்மா உன் வீட்டுக்காரர்' என்று கேட்டேன்


அந்தம்மா கை காட்டிய இடத்தில் சுவரோடு சுவராக ஒருவர் சாத்திவைக்கப்பட்ட நிலையில் இருந்தார், அவருக்கு கைகால் வராது என்பதால் துாக்கிக் கொண்டுவந்து சுவற்றில் சாத்திவைத்துள்ளனர் கோர்ட்டில் நடப்பதை எல்லாம் பார்த்து அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.


அந்த ‛அன்பு' மகளை நோக்கி என்ன செய்யப்போகிறாய் என்பது போல பார்த்தேன்..அந்த பெண்ணோ இதை எல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல்,‛ நான் கிளம்பலாமா?' என்று கேட்டுவிட்டு வெளியே காருடன் காத்திருந்த காதலன் அல்லது கணவனுடன் சிட்டாக பறந்து சென்றுவிட்டார்.


‛சரிங்கய்யா நாங்க புறப்படுறோம்' என்ற அந்த பெண்ணின் தாயாரிடம் ‛ஊருக்கு எப்படி போவீங்க' என்று கேட்டபோது ‛சொந்த ஊருக்கு போக எப்படியும் நாற்பது ரூபாய் தேவைப்படும், பஸ்ஸ்டாண்ட் போய் பிச்சை எடுப்பேங்கய்யா, கூடுதலா கிடைச்சா இரண்டு பேரும் சாப்பிடுவோம்யா, அப்புறம் ஊருக்கு போய்ட்டா வீட்டு வேலை செய்யற இடத்துல உதவி கிடைச்சுடும் பிழைச்சுக்கவும் ஐயா' என்றார்.


நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேருக்கும் துாக்கிவாரிப்போட்டது


‛இந்தாம்மா நீ பிச்சை எடுக்க வேணாம், என்னோட அன்பளிப்பா ஏத்துக்குங்க 'என்று சொல்லி பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்


நான் கொடுத்ததைப் பார்த்த நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் என்று ஆளாளுக்கு கொடுத்ததில் நாற்பதாயிரம் ரூபாய் சேர்ந்தது
அதை அந்த அம்மாளிடம் கொடுத்து உங்கள் கவலைக்கு இது மருந்தல்ல ஊருக்கு போவதற்கான சிறு தீர்வுதான் என்று சொல்லிக்கொடுத்தேன்பெற்றவர்களைப் புரிந்து கொள்ளாத இப்படிப்பட்ட பிள்ளைகளும் இருக்கிறார்களே என்று அன்று முழுவதும் மனம் வேதனைப்பட்டது


பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பைக் கொடுப்பது முக்கியம் என்பதை உணருங்கள் என்ற வேண்டுகோளுடன் முன்னாள் நீதிபதியான சா.நாகமுத்து தனது உருக்கமான பேச்சை முடித்தார்.


சென்னை வாணிமகாலில் நடந்த மறைந்த அமிழ்தன் எழுதிய முப்பால் உரை என்ற நுால் வெளியீட்டு விழாவில்தான் இப்படியொரு உரை நிகழ்த்தப்பட்டது.

(படித்ததில் பகரிந்தது)

Tuesday, June 7, 2022

வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தை பாதுகாக்க !

நாட்டில் கடந்த சில நாட்களாக சைபர் குற்றங்கள் அதிக அளவு அதிகரித்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 பாஸ்வேர்ட்டில் எச்சரிக்கை:

நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மிக எளிதாக வைத்திருந்தால் ஹேக்கர்கள் எளிதில் உங்கள் ஆன்லைன் பேங்கிங்கை அணுகலாம். மிகவும் வீக்கான பாஸ்வேர்டுகளுக்கு உதாரணமாக, password, qwerty, 123456 போன்றவற்றைக் கூறலாம். இதனைத் தவிர உங்களின் மொபைல் எண் மற்றும் பிறந்த நாள் உள்ளிட்டவையும் உள்ளது. எனவே உங்களின் பாஸ்வேர்ட் தனித்துவமான மற்றும் யாரும் எளிதில் அறிந்து கொள்ளாத வகையில் இருப்பது நல்லது. யாரிடமும் பாஸ்வேர்டை ஷேர் செய்ய வேண்டாம்.

தனிப்பட்ட விவரங்களை பகிர கூடாது:

உங்களின் தனிப்பட்ட விவரங்கள், அடையாளச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை முன்பின் தெரியாதவர்களிடம் பகிரக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் பணத்திற்கு ஆபத்து. பிறந்த தேதி, திருமண தேதி, குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் கையெழுத்து போன்ற உங்களின் விவரங்களைப் பயன்படுத்தி மோசடி நபர்கள் நெட் பேங்கிங் லாகின் செய்து அக்கவுண்டில் உள்ள பணத்தை திருட நேரிடும். அதனைப் போலவே மொபைலுக்கு வரும் ஓடிபி யாரிடமும் பகிர கூடாது. எந்த விவரங்களையும் தரவேண்டாம்.

வங்கியின் பாதுகாப்பு ஆலோசனைகள்:

வழக்கமாக உங்கள் வங்கிகள் இ-மெயில் மற்றும் சோசியல் மீடியாக்கள் மூலம் தகுந்த பாதுகாப்பு ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கிவருகின்றன. மோசடிகளை தவிர்த்து வாடிக்கையாளர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி அறிவுரை வழங்கப்படுகிறது. எனவே அதனை கவனமாக பின்பற்றுங்கள்.

பேங்க் ஸ்டேட்மெண்ட், மெசேஜ்களை செக் செய்தல்:

வங்கிகள் பரிவர்த்தனைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் மூலமாக தகவல்களை அனுப்பி வைக்கின்றனர். அதனால் உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட் மற்றும் பேங்க் மெசேஜ்களை தவறாமல் செக் செய்வது நல்லது.

பாதுகாப்பான நெட்வொர்க்கில் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்துதல்:

ஹோட்டல்கள்,உணவகங்கள் போன்ற பொது நெட்வொர்க்கில் இன்டர்நெட் பயன்படுத்தும் போது ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை நீங்கள் அவசரத்திற்கு பொது நெட்வொர்க்கை பயன்படுத்தி பேங்க் அக்கவுண்ட் நீங்கள் அணுகினால், பாதுகாப்பான நெட்வொர்க்கை பெற்றவுடன் உங்கள் பாஸ்வேர்டை மாற்றி விடுவது நல்லது.

செக்புக் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துதல்:

உங்களது செக் புக்கை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் உங்கள் கார்டு பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. மேலும் pos மெஷினை பயன்படுத்தும் போது ஏதேனும் அசாதாரண இணைப்புகள் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை நீங்கள் பின்பற்றினால் உங்கள் வங்கிப் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

Friday, May 20, 2022

வாழ்க்கை கற்றுக்கொடுக்கும், அனுபவம்!

 

வாழ்க்கை கற்றுக்கொடுக்கும், அனுபவம், நாம் கற்றுக்கொள்ளாததையும் பெற்றுக் கொடுக்கும். அனுபவம், முதிர்ச்சியின் அடையாளம்.



கருவறை முதல் கல்லறை வரை அனுபவத்தின் ஆளுமை தொடர்கிறது.

தேவையற்றதைத் தேவையில்லாத நேரத்தில் வாங்கினால், தேவையானதை விற்க வேண்டிவரும் என்று கற்றுத்தரும் ஆசான் அனுபவமே. பேசவேண்டிய நேரத்தில் எங்கு எதை எப்படிப்பேச வேண்டும் என்று உள்ளத்திற்கு உணர்த்தும் உள்ளுணர்வு அனுபவமே.


கடலில் கலங்கித் தவிப்பவனுக்குக் கலங்கரை விளக்குக் கரையில் நின்று எவ்வாறு வழிகாட்டுமோ, அதைப்போலப் பிறவிப் பெருங்கடலில் கரைசேர, அனுபவம் நமக்கு வழிகாட்டுகிறது.

 நம்மை அழகுபடுத்தும் அழகான உடை அனுபவமே. அனுபவம் வீண்பழி நீக்க நமக்கு வழிகாட்டுகிறது. பல்கலைக் கழகங்களில் கூடப்படிக்க முடியாத படிப்பை, ஆசிரியராய் அமர்ந்து ஆற அமரக் கற்றுத் தருகிறது. வாழ்க்கை எனும்பட்டறையில் நாம் பட்ட அடிகளே அனுபவமாய் நின்று நம்மைப் பக்குவப்படுத்துகின்றன.


நாம் வருந்துமளவு, வாழ்வு ஒன்றும் வாள் வீசிநம்மைச் சேதப்படுத்திவிடவில்லை. பக்குவமும் வயது முதிர்ச்சியும் சகமனிதர்களைப் புரிந்து கொள்ள வைக்கிறது. குயில் இட்ட முட்டையைத் தன் முட்டையாய் கருதி அடைகாக்கும் அப்பாவிக் காகமாக, போலிகளைப் போற்றிக்கொண்டு உண்மையை உணராமல் நாம் பல நேரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேரில் ஊற்றிய நீரை, உச்சியில் இனிமையான இளநீராகத் தரும் தென்னை மரம் மாதிரி சிலர் எப்போதும் உயர்ந்த செயல்களைச் செய்து கொண்டே இருப்பார்கள்.
செருப்பாய் உழைத்தாலும் சிலர் சரியான நேரத்தில் கழட்டி விட்டுப் போய்விடுவார்கள்.

 

 இத்தனை வயதான பின்னரும் கூட உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரை அடையாளம் காணும் அனுபவம் வரவில்லையே என்று வருந்துவோரும் நம்முடன் உண்டு. இன்னல் வந்து நம் வீட்டுச் ஜன்னலில் எட்டிப்பார்த்தாலும், அனுபவம் ஆற்றலாய் நின்று நம்பிக்கைகொடுக்கும். எதை இழந்தாலென்ன நம்பிக்கையை நாம்இழக்கவில்லையே! எது நடந்தாலும் நாம் கலங்கத் தேவையில்லை என்ற உண்மையை உரக்கச் சொல்வது அனுபவம் தான். சந்தேகம் சாய்த்து விடும்
வீட்டைப் பூட்டி விட்டு வீதிக்கு வந்தபின்னும் ஒழுங்காகப் பூட்டி விட்டோமா என்று இன்னொரு முறை சென்று இழுத்துப் பார்ப்போர் நிம்மதி இழக்கிறார்கள். சந்தேகம் நம் தேகத்தைப் புண்ணாக்கும். அனுபவத்தின் ஆற்றல் அதிகமாகிவிட்டால் சந்தேகம் வந்த வழியோடும். கோடைகாலத்துக் கானல் நீர் தாகம் தீர்க்குமெனக் கருதி நம் கால்கள் அதை நோக்கி நடந்து, ஏராளமான ஏமாற்றங்களைச் சந்தித்துவிட்டன.

 
பதினோருவகை நடனங்களைக் கற்றுத்தேர்ந்த மாதவி இயல்பாய் பாடிய பாடலைத் தவறாகப் புரிந்துகொண்ட கோவலன், அவள்மீது ஊடல்கொண்டு அவளை விட்டுப் பிரிகிறான். யாரோ யாருக்கோ சொன்னதை நம்மை நோக்கி நமக்கே சொன்னதாகத் தவறாகக் கருதி, அற்புதமான உறவுகளையும், அற்புதமான அழகு வாழ்வையும் நரகமாக்கிக் கொண்டிருப்போர் எத்தனைப்பேர்!


மார்கோனி வானொலியைக் கண்டறியும் முன்பே பாரதியார், ”காசி நகர்ப்புலவன் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற் கோர் கருவி செய்வோம்” என்று பாடியதுஅனுபவ முதிர்ச்சிதான்.

அனுபவம்தரும் ஆன்மஞானம் இருளில் இருந்த உலகைத் தன் கண்டுபிடிப்பால் வெளிச்சத்தைத்தந்து ஒளியில் ஆழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன், பலநுாறு முறை முயன்று தோற்று மனம் தளராமல் மின் விளக்கைக் கண்டுபிடித்தார்.


அவரைப் பொறுத்தவரை அந்த தோல்வியின் தோள்களில் ஏறியே, எட்டாக் கனியாய் இருந்த வெற்றியின் கிளைகளை அவர் தளராமல் எட்டிப்பிடித்தார். 99 சதவீத உழைப்பு; ஒரு சதவீத அறிவு இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம்
என்று எடிசன் தன் வெற்றி அனுபவத்தின் ரகசியத்தை அடக்கத்தோடு சொன்னார். மூத்தோர்சொல்லை மதிப்போம் மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னர் கசக்கும், பின்னர் இனிக்கும்.

முதியவர்கள் எப்போதும் அறிவுரை கூறிக் கொண்டே இருப்பார்கள் என்று ஒதுங்குதலும் அவர்களின் நல்லனுபவங்களையும் புறக்கணிப்பதும் சரியான செயலன்று.


எனவே தங்கள் அனுபவங்களை யார் நமக்குத் தந்தாலும் மறுப்பின்றி ஏற்போம். மணிக்கட்டுகளில் கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு தவறான நேரத்தைச் சொல்வோருக்கு மத்தியில், வயற்காட்டில் நின்று கொண்டு வானத்தைப் பார்த்து சூரியனின் இருப்பைப் பார்த்து, மணி சொல்லும் விவசாயிகள் அனுபவம் எவ்வளவு உயர்வானது? எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் ஆழாக்கு, உழக்கு, கலம், நெய்க்கரண்டி, எண்ணெய்க்கரண்டி, பாலாடை, அவுன்ஸ் என்று முகத்தல் அளவையைக் கூறி, மனக் கணக்கில் அபாக்கஸ் அறிஞர்களைத் தாண்டுமளவு ஆற்றல் பெற்றிருந்தார்களே எப்படி? அனுபவம் எனும் படியில் ஏறிதானே!


ஏட்டுக்கல்வியைப் பல நேரங்களில் அனுபவக் கல்வி விஞ்சியிருக்கிறது.அனுபவம் எளிமையாகத் தானிருக்கும்;ஆனால் வலுவான சேதங்களிலிருந்து நம்மைக் காக்கிறது. திருவள்ளுவரின் தனிமனித அனுபவம் திருக்குறளாய் மாறும் போது, உலக அனுபவமாய் மாற்றுரு பெற்று உலகப் பொதுமறையாய் செம்மாந்து நிற்கிறது.


மகாத்மா காந்தியின் சத்திய சோதனை அனுபவங்கள், படிப்போருக்கு ஆத்ம ஞானத்தை அளிக்கின்றன. 'நான் யார்?' என்ற கேள்விக்கு தவத்தால் விடை கண்டறிந்த பகவான் ரமண மகரிஷியின் ஆன்ம நேயம் நம்மை மறுமை வாழ்வு குறித்து சிந்திக்க வைக்கிறது.


ஆயிரம் ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்க முடியாத பாடத்தை ஒரு நாளில் நாம் பெறும் அனுபவம் கற்றுத் தந்து விடுகிறது. தோல்விகளில் நாம் பெறும் அனுபவப் படிப்பினைகளே, வெற்றியை நோக்கிய நம் பயணத்தை விரைவுபடுத்துகின்றன.


வெற்றியில் பெற்றதை விட, தோல்வியில் கற்றது கல்லில் செதுக்கிய எழுத்தாய் நமக்குள் ஆழப்பதிகிறது. எனவே அனுபவ ஆசானிடம் அனுதினமும் பாடம் படிப்போம்.

Monday, May 16, 2022

வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன் ?

 


தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளனர். திருமணம் முடிந்து வீட்டிற்குள் வரும் மருமகளையும் முதலில் விளக்குதான் ஏற்ற சொல்லுவார்கள். வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் விளக்கேற்றி செய்வதுதான் தமிழக மக்களின் வழக்கம். விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது. இதில் சிலருக்கு ஒற்றை விளக்கு ஏற்றலாமா? அல்லது இரட்டை விளக்கு ஏற்றுவது தான் விசேஷமா? என்று சந்தேகம் இருக்கலாம்.

பொதுவாகவே, நம்மால் முடிந்த வரையில் அதிக எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறப்பைத் தரும். எனினும் எத்தனை விளக்கு ஏற்றுகிறோம் என்பதை விட விளக்கின் முகங்கள் எத்தனை என்பதைப் பொறுத்தே பலன்கள் மாறுபடும்.

ஒரு முகம் - சாந்தமான மன நிலையை தரும்.

இரண்டு முகம் - குடும்பத்தில் துயரங்கள் நீங்கும், செல்வம் தரும், சமூகத்தில் மதிப்பு - மரியாதை கூடும்.

மூன்று முகம் - செய்யும் செயல்களில் தடைகள் நீங்கும், வெற்றி கிடைக்கும், மனதில் நம்பிக்கை கூடும்.

நான்கு முகம்- சொத்து சுகங்கள் சேரும், ஆரோக்கியம் மேன்மை அடையும்.

ஐந்து முகம் - குறைவு இல்லாத நல் வாழ்க்கை தரும்.

இவை தவிர, வாரம் ஒரு நாள் பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது சாலச் சிறந்தது. எனினும், அதே சமயத்தில்... விளக்கு ஏற்றுவதற்கு என்று சில சம்பிரதாயங்கள் உண்டு. அதையும் அவசியம் பின்பற்ற வேண்டும். அப்போது தான் நீங்கள் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்...

1.
வீட்டில் விளக்கு ஏற்றுவதாக இருந்தால் பெண்கள் ஏற்றுவது சிறப்பு.

2.
ஒருவேளை, தீபம் ஏற்றும் பெண்மணி திருமணம் ஆன பெண்ணாக இருந்தால் வளையல், மெட்டி, புருவ மத்தியில் குங்குமம், நெற்றியின் வகிட்டில் குங்குமம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

3.
தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம், உடன் பூ சாற்றி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.

4.
தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை நினைத்து பிரார்த்திக்க வேண்டும். இது கூடுதல் பலனைத் தர வல்லது.

5.
விளக்கை மலை ஏற்றும் சமயத்தில் அதில் உள்ள தீயை வாயால் ஊதி அணைக்கக்கூடாது... மாறாக மலர்களை கொண்டு அணைக்கலாம் என்பது எல்லோரும் அறிந்த பொது விதி. அதே போல, விளக்கை பந்தம் போல புகை வரும் படியாக எரிக்கக் கூடாது. அது பாவம்.

6.
கடலை எண்ணெய்யில் விளக்கு ஏற்றுவது இன்னொரு மகா பாவம். இதனால் வீடு தொடைத்துப் போகும், வம்ச விருத்தி இருக்காது என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

இவை தவிர, தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீப முகம் இருக்கலாம். தீபத்தை தரையில் வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம் அல்லது பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள் கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும். குத்து விளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.


இதுதவிர, விளக்கில் இடும் திரிகளுக்கும் கூட பலன் உண்டு...

1.
சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து, திரியாக்கி, நிழலில் காயவைத்து, விளக்கேற்றப் பயன்படுத்தலாம். இதனால் மங்கலம் வளரும்.

2.
திருமணத் தடை உள்ளவர்கள், வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள், அதிக கடன் கொண்டவர்கள் சிவப்பு நூல் திரியினால் விளக்கேற்றலாம்.

3.
வீட்டில் துஷ்ட ஆவிகள் இருப்பதாக நினைத்தால், வெள்ளை எருக்கன் திரி ஏற்றிட, துஷ்ட சக்திகள் நீங்கி, மங்கலம் உண்டாகும்.

4.
மஞ்சள் நூல் திரியில் விளக்கேற்ற, அம்மன் அருள் கிடைக்கும்.

5.
குலதெய்வ சாபம் உள்ளவர்கள், தங்கள் குல தெய்வத்துக்கு வாழைத்தண்டு திரியில் தொடர்ந்து தீபம் ஏற்றினால், சாபத்திலிருந்து விடுபடலாம்.

6.
தாமரைத் தண்டு திரி, மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கச் செய்து, வாழ்க்கையில் மங்கலத்தை உண்டாக்கும். இது அதிர்ஷ்டத்தை தரும். இதனால் தரித்திர யோகம் கொண்ட ஜாதகம் கூட ராஜ யோகமாக மாறிவிடும்.

7.
வெள்ளை வஸ்திரத் துண்டுகளை பன்னீரில் நனைத்து, திரியாகத் திரித்து, உலர்த்தி விளக்கேற்றி வர, தெய்வக் குற்றங்கள் நீங்கும்.


திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...