Total Pageviews

Thursday, May 26, 2016

“நான் இவ்வளவு சிறப்பானவனா..?

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது  இடைவெளியுடன் !

மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -

“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள் காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”

மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு  தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும் ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்

அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.

மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –

அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !

அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
 

பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து, மரணம் அடைகிறான்.

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.

இறுதிச் சடங்கில்,

கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.

ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார். பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு  டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத் தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -

“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.


இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.

அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.

ஆமாம் – பல வருடங்களுக்கு முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -

“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை வருடங்களும் அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம் பிக்கையும்,  பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து கதறி அழுகின்றனர்..,

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.

இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.

நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டி ருந்தால், நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக, அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை - அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத் தவறி விடுகிறோம்.

கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல் நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !

இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !

நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.

தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.

மனிதர்களை மேலும் நல்லவர்களாக
உருவாக்க இது உதவும்..

Thanks to C.Malathi

கடல்!




கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.

கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.

அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.

ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.

பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது.

பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.

இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.

உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ
அழித்துவிடாதே.

நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.

சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாளு..

Thanks to R.P.Karthik

Wednesday, May 25, 2016

கல்வியின் பேரால் ஜோராய் கறக்கலாம் !

கல்வியின் பேரால் கறக்கலாம் ஜோராய்!
 By: Shankar Published: Wednesday, May 25, 2016, 11:28 [IST] 
 
இது மாணவர்களைக் குறைசொல்லும் கட்டுரையல்ல. இன்றைய கல்விமுறை எந்த அளவு தனியார் பெருமுதலாளிகளின் கல்வி வியாபாரத்துக்கு தோன்றாத் துணையாக உள்ளது...
 
 பெற்றோர்களின் மூடத்தனம் எந்த அளவு உச்சத்தில் உள்ளது என்பதைச் சொல்லவே! இத்தனை சிக்கலான சூழலில் தேர்ச்சி பெற்ற அனைத்து ப்ளஸ் டூ / பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் முதலில் வாழ்த்துகள்... 
 
 ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட கல்வியில் முன்னணியில் இருந்தவை சென்னை - வேலூர் மாவட்டங்கள்தான்... தென் தமிழகத்தில் எப்போதும்போல திருநெல்வேலி! வசதி படைத்த பிள்ளைகளுக்கு ஊட்டி, ஏற்காடு கான்வென்டுகள்!
 
 ஆனால் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு திடீரென கரூர், நாமக்கல் மாவட்டங்களில் கல்வி வியாபாரம் களைகட்ட ஆரம்பித்தது. யாரைப் பார்த்தாலும் அல்லது யார் சொல்லக் கேட்டாலும், ஏதாவது ஒரு விகாஸ், மந்திர், வித்யாலயா.. அல்லது ஏவிஎம் மாதிரி மூன்று இனிஷியல்களில் ஏகப்பட்ட பள்ளிகள். இப்போது இந்த மாவட்டங்களுடன் கிருஷ்ணகிரி (ஊத்தங்கரை), ஓசூரும் சேர்ந்து கொண்டுள்ளன. இந்த பள்ளிக் கட்டடங்களைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள். ஏதோ பன்னாட்டு தொழிற்சாலை வளாகத்தைப் போல அத்தனை பிரமாண்டம். ஒவ்வொரு பள்ளிக்கும் நான்கைந்து பிராஞ்சுகள் வேறு. நாமக்கல்லில் ஒன்று, ராசிபுரத்தில் ஒன்று, திருச்செங்கோட்டில் ஒன்று, காரமடை சாலையில் ஒன்று என வளைத்து வளைத்து கட்டியிருக்கிறார்கள். 
 
 School education becomes too costly today!
 
 ராசிபுரம் பாலத்தைத் தாண்டியதும், அருமையான வயல்கள் ஆயிரம் ஏக்கரை வளைத்து மிகப்பெரிய கட்டடத்தைக் கட்டியிருக்கிறார்கள். அந்த பிரமாண்ட கட்டடங்களையொட்டி, பச்சைப் பசேல் நெல் வயல்கள், வேர்கடலை சாகுபடி, கரும்புத் தேட்டங்கள்... இந்தப் பக்கம் கரூரிலும் இதற்கு நிகராக தனியார் பள்ளிகள். 30-க்கும் மேற்பட்ட கார்ப்பொரேட் லெவலில் இயங்கும் பெரிய தனியார் பள்ளிகள். கோடிகளில் பணம் புழங்கும் கல்வி யாவாரிகள்தான் உரிமையாளர்கள். இன்றைக்கு சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த கல்வி தொழிற்சாலைகளில் போய் தள்ளிவிட்டு வந்துவிடுவதில் குறியாக உள்ளனர். 
 
 இதற்காக இவர்கள் படும் பாடுகள், சேர்த்த பிறகு இவர்களை அந்தப் பள்ளிகள் படுத்தும் பாடுகள் இருக்கிறதே... கொடுமை! கடவுள் குறித்த மூடத்தனத்தை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டதைப் போல, இந்தக் கல்வி மூடத்தனத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வரமாட்டாரா என வாய்விட்டுக் கதறுவீர்கள் ஒரு முறை அனுபவப்பட்டால்! இந்தப் பள்ளிகளில் சேர படும் பாட்டை முதலில் பார்ப்போம்... 
 
 
கீழ்வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு இவர்கள் வைக்கும் தேர்வைப் பார்த்தால் ஐஐஎம்முக்காக நடத்தப்படும் CAT தேர்வு கூட தோற்றுப் போகும்... அத்தனை ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்ட்டு!! எட்டாம் வகுப்பு சேர வரும் ஒரு பையனுக்கு வெக்டார்ஸ் பற்றி கேள்வி. அவன் இதற்கு முன் கேள்விப்பட்டிராத பல பாடங்களிலிருந்து தேர்வுத் தாள் தயாரித்திருப்பார்கள். இப்படித் தயாரிப்பது தவறு என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன... தெரியும். ஆனால் இப்படியெல்லாம் கஷ்ட்ட்டமான கேள்வியை வைக்கக் காரணம்... அதிகபட்ச பேரத்துக்காகவே. உதாரணத்துக்கு.... கரூரில் XXX என்று ஒரு பள்ளி. இதில் உங்கள் பிள்ளையை 9-ம் வகுப்பு சேர்க்க வேண்டும் எனப் போகிறீர்கள். அவர்கள் வைத்த உலக மகா தேர்வில் பையன் தேறாமல் போகிறான். அப்போதுதான் உங்களுக்கு எப்படியாவது இந்த உலகத் தரமான பள்ளியில் பையனை / பெண்ணை சேர்த்துவிட்டால் போதும்... அத்தோடு அவன் வாழ்க்கையே பெட்ரோமாக்ஸ் லைட் போட்ட மாதிரி ஜெகஜ்ஜோதியாக இருக்கும் என்று தீர்மானித்து விடுகிறீர்கள். அடுத்து உள்ளூரில் உள்ள ஏதாவது ஒரு கட்சிப் பிரமுகரிடம் போவீர்கள்... 
 
‘நான் இன்னார்... என் பக்கத்துத் தெருவில் உங்க கட்சி வட்டச் செயலாளர் எனக்கு வேண்டப்பட்டவர்... என் பையனுக்கு சீட் வேணும்... 
கொஞ்சம் பாத்துப் பண்ணிக்குடுத்தா நல்லாருக்கும்....' என கெஞ்ச ஆரம்பிப்பீர்கள். அவரும் அங்கிருந்து போன் செய்வார்....
 
 ‘நம்மாளுதாங்க... கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க' என்பார். உடனே நம்பக்கம் திரும்பி, செலவு கொஞ்சம் ஓவரா ஆகும்... ஓகேன்னா தரச் சொல்றேன். எனக்கு எதுவும் நீங்க தர வேண்டாம்...
 
 
 ஸ்கூல்ல கேக்குறதைக் கொடுத்துடுங்க," என்பார். "ஆகட்டும் சார்.... எப்படியாவது புரட்டி கட்டிடுவேன்.." பையன் அப்போதே எஞ்ஜினீயர் அல்லது டாக்டராகி கால் மேல் கால்போட்டு சம்பாதிக்கும் கனவில் மூழ்கிவிடும் பெற்றோர், கடன் வாங்கி, நகையை விற்று எட்டாம் வகுப்புக்கு மட்டும் விடுதிக்கும் சேர்த்து 6 மாதங்களுக்கு கட்டும் கட்டணம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் வரும். அடுத்த ஆறு மாதங்களுக்கு இன்னொரு 60 ஆயிரம். புத்தகம் - சீருடைக்கு தனியாக சில ஆயிரங்கள். அப்புறம் அந்தப் பிள்ளையை விடுதியில் சேர்க்கும் முதல் நாளன்று, ஏதோ தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு சீர் செய்வது போல கட்டில், மெத்தை, தலையனை, வாளிகள், பெட்டிகள், தின்பண்டங்கள்...
 
 
 School education becomes too costly today!
 
 ப்ளஸ் ஒன் சேரும் பிள்ளை / அல்லது பையனுக்கு இந்த செலவு இருமடங்காக இருக்கும். அதன் பிறகு வாரம் ஒரு முறை சென்னையிலிருந்தோ மதுரை - கோவையிலிருந்தோ போய் வந்துகொண்டிருக்க வேண்டும். எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கும். பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வரும்வரை. அதன் பிறகு பள்ளிகள் காட்டும் சுயரூபம் வேறு மாதிரி இருக்கும். அதுவரை உங்கள் பையன் நன்றாகப் படிக்கிறான். திருப்திகரமான மதிப்பெண்... என்றெல்லாம் தொடர்ந்து வீட்டுக்கு கடிதங்கள் வரும் பள்ளி தாளாளரிடமிருந்து. அரையாண்டு தேர்வு முடிவு வந்ததும்... இந்த கடிதத்தின் தொனி தலைகீழாக மாறிப் போகும்! 
 
‘அவசரம்... உடனே வந்து தாளாளர், செயலர் அல்லது தலைமையாசிரியரைப் பார்க்கவும்' என்று ஒற்றை வரியில் தந்தி வரும்... செல்போன், இமெயில் சமாச்சாரங்கள் பெருகிவிட்ட இந்த நேரத்திலும், இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் தந்தியைத்தான் உபயோகிப்பார்கள் (தந்தி இல்லாததால் இப்போது எஸ்எம்எஸ்). உளவியல் தாக்குதல்! தூக்கம் தொலைத்து அடித்துப் பிடித்துக் கொண்டு நாமக்கல்லுக்கோ கரூருக்கோ மட்ட மத்தியானம் போய் நின்றால்.. ‘என்னங்க இவ்ளோ லேட்டா வர்றீங்க... கரஸ்பாண்டன்ட் வீட்டுக்குப் போயிட்டார்... திரும்ப நாளைக்குதான் வருவார்... எதுக்கும் நான் தகவல் சொல்றேன்... 
 
மாலையில் ஒரு வாட்டி வந்து பாருங்க' என்பார் அங்குள்ள உதவியாளர். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது அப்படி. அவரைத் திட்டி என்ன ஆகப் போகிறது. மாலை வரை பிள்ளையோடு பேசலாமா என்றால்... ‘ம்ஹூம், அவர்களுக்கு வகுப்பு இருக்கிறது. விசிட்டிங் அவர்ஸ் கிடையாது. நாளைக்குதான்,' என்பார்கள். 'இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்து என்னத்தடா கிழிச்சீங்க' என்று கேட்கும் திராணியின்றி, கரூர் அல்லது ராசிபுரத்தில் உள்ள லாரி ஷெட்டுகள், பெட்ரோல் பங்குகள், புழுதி பறக்கும் பஸ் நிலையங்களைப் பராக்குப் பார்த்துவிட்டு மீண்டும் மாலையில் போனால், அமர்த்தலாக உட்கார்ந்திருப்பார் கரஸ்பாண்டன்ட்! தயங்கிக் தயங்கி பெற்றோர் உள்ளே நுழைந்ததும், அந்த ஆண்டிறுதி நாடகத்தின் அதிரடி க்ளைமாக்ஸை இப்படி ஆரம்பிப்பார் அந்த ஆசாமி! எதிரில் உள்ள லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இப்படியும் அப்படியும் தட்டிக் கொண்டு, உதட்டை நான்கு முறை சுழித்து... "ம்ம்... என்னங்க இது... உங்க பிள்ளை இப்படி கவுத்திட்டானே... ரொம்ப மோசம்... தேர்றது கஷ்டம்.. ம்ம்... என்ன பண்ணப் போறீங்க... எங்க ரிசல்ட்டையே கெடுத்துடுவான் போலிருக்கே... வெளிய அனுப்பிடலாம்னு செக்ரட்டரி கூட சொல்றார்... எங்க ஸ்கூல் பேருதான் முக்கியம்... " "சார் சார்... என்ன சார் இப்படி சொல்றீங்க... நீங்கதானே சொன்னீங்க... எப்படி படிச்சாலும் பரவால்ல நாங்க குறைஞ்சது 1000 மார்க்குக்கு உத்தரவாதம்னு... இப்படி சொன்னா எப்படி... அவனைத்தான் நம்பியிருக்கோம்... என்ன வேணும்னாலும் செய்யறோம்," என்ற கதற ஆரம்பிப்பார்கள் பெற்றோர். 
 
  வழிக்கு வந்துவிட்டார்கள் என்பது புரிந்ததும், அடுத்த அதிரடியை சாவகாசமாக ஆரம்பிப்பார் கரஸ்! "சரி.. ஒரே ஒரு வழியிருக்கு. நீங்க என்ன பண்றீங்க... ஒரு நாலு மாசம் உங்க பையன் / பெண்ணை கூட்டிட்டுப் போய், பக்கத்துல எங்காவது ஒரு ரூம் எடுத்து தங்கி பார்த்துக்க முடியுமா... கூடவே ட்யூஷனுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. ஒவ்வொரு சப்ஜெக்டும் தனித்தனியா இந்தப் பள்ளி் ஆசிரியர்களே கூட இருக்காங்க. இதுக்கு நீங்க தயாராக இருந்தா சொல்லுங்க.." வேறு வழியே இல்லாமல் மண்டையை ஆட்டுவார்கள் பெற்றோர்கள். அடுத்த வாரமே, ஹாஸ்டலிலிருந்து மீண்டும் தனி வீட்டுக்கு மாறுவார்கள் மாணவர்கள். ஏதோ ஒரு பையனுக்கு, அல்லது பெண்ணுக்கு இந்த நிலை என்று நினைத்துவிட வேண்டாம். பல மாணவ மாணவிகளுக்கு இதே ட்ரீட்மெண்ட்தான்.
 
 ராசிபுரத்தைச் சுற்றிச் சுற்றி எக்கச்சக்கமாய் புதுப் புது ப்ளாட்கள் முளைத்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு கையில் பையனை அல்லது பெண்ணை அழைத்துக் கொண்டு ராசிபுரம் தெருக்களில் பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்து பாருங்கள்... ‘வாங்க சார்.. ஸ்டூடன்ட்டா.... வீடுவேணுமா... சிங்கிள் பெட்ரூம்... ரூ 7000 வாடகை... டபுள் பெட்ரூம் கூட இருக்கு... அதுக்கு ரூ 10000 ஆகும். ஓகேவா?' என்று அடுத்தடுத்து குரல்கள் கேட்கும். ஏதோ ஒரு வீட்டைப் பிடித்து, இவர்களுக்காகவே ப்ளாக்கில் விற்கும் கேஸ் கனெக்ஷன் வாங்கி தற்காலிக தனிக்குடித்தனத்தை அங்கு ஆரம்பித்தாக வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிவரை போய் வர ஷேர் ஆட்டோ உண்டு! அடுத்து ட்யூஷன்... ஒரு பாடத்துக்கு ரூ 10000. தமிழ் தவிர மற்ற 5 பாடங்களுக்கும் சேர்த்து ரூ 50000! ஒரு நான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான்... எல்லாமே பக்கா செட்டப் என்பது புரியும். 
 
 மாணவனை வெளியில் அனுப்பும் பள்ளி, வீடுதரும் ‘பினாமி ஹவுஸ் ஓனர்கள்', ட்யூஷன் எடுப்பவன், கேஸ் விற்பவன், ஷேர் ஆட்டோ ஓட்டுபவன், எல்லாருக்குமிடையே ஒரு பிரிக்கமுடியாத உறவு இருப்பது புரிய வரும். புரிந்து என்ன பயன்... பல்லைக் கடித்துக் கொண்டு கடைசி தேர்வு வரை ராசிபுரம் வாசியாகவே, கரூர்வாசியாகவோ காலத்தைத் தள்ளுவார்கள் பெற்றோர். ரிசல்ட் நாளன்று பையன் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்ததைக் கொண்டாட வாயில் ஸ்வீட்டை வைக்கும்போது, நடந்ததை நினைத்தால் ரொம்பவே கசக்கும்! 
 
 இது யாரோ ஒருவரின் தனிப்பட்ட அனுவபம் அல்ல... பலரது அனுபவங்களின் சாம்பிள்! எனக்குத் தெரிந்த ஒரு அரசு மருத்துவர் தனக்கு நேர்ந்தே இதே அனுபவத்தைச் சொல்லி முடித்தபோது அழுதேவிட்டார்! ஒரு முறை ராசிபுரத்தின் அந்த பிரபல பள்ளிக்குச் சென்றிருந்தோம் உறவுக்கார பெண்ணைக் காண. பள்ளி ஹாஸ்டல் பகுதி கட்டடத்தின் ஓரத்தில் எங்கள் காரை நிறுத்தினோம். ஒரு சில நிமிடங்களுக்குள் ஒரு பெரும் மாணவிகள் கூட்டம் அத்தனை ஜன்னல்களிலும் எட்டிப் பார்த்தது. ‘அங்கிள் டிசிதானே வாங்க வந்தீங்க... தயவு செய்து கூட்டிட்டுப் போயிடுங்க... நேத்துகூட மூணு பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்க...
 
  ஒரு பெண் தற்கொலை பண்ணிக்குச்சு. எங்க பேரன்ட்ஸுக்கு தகவல் சொல்ல முடியுமா... இந்த நம்பருக்கு கொஞ்சம் போன் பண்றீங்களா...' என்று அடுத்தடுத்து கேட்டு துண்டுச் சீட்டுகளைத் தூக்கி எறிந்தனர். உடனே வாட்ச்மேன் ஓடிவர, அந்த மாணவிகள் தலைகள் மாயமாகிவிட்டன. அந்த சீட்டுகளை எடுத்துக் கொண்டோம். கலாய்க்கிறார்களா... கவலையில் சொல்கிறார்களா என்று தெரியாமல் பள்ளி வளாகத்துக்கு வெளியே இருந்த ஒரு கடையில் பேச்சுக் கொடுத்தோம்... 
 
"ரொம்ப கொடுமை நடக்குது சார்... இப்ப துண்டுச் சீட்டு வீசின பசங்கள்லாம் தனியா வீடு எடுத்து படிக்க முடியாத நிலையில் உள்ளவங்க. அவங்களைப் படுத்தி எடுப்பாங்க இந்த பள்ளியில். ஏன் இன்னும் வெளிய போகாம இருக்கீங்க... போங்க என்பார்கள். ஆனால் அவங்க பேரன்ட்ஸால வர முடியாததால மாணவ மாணவிகளுக்கு வேறு வழி தெரியாம இந்தக் கொடுமையை சகிச்சிட்டு படிக்கிறாங்க...," 
 
என்றபோது, அதிர்ந்து போனோம். இரண்டு நம்பர்களுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னபோது, ‘ஆமா சார், எங்களையும் தனி வீடு பார்க்கச் சொன்னாங்க. ராமநாதபுரத்தில் இருந்து வந்து அப்படியெல்லாம் பாத்துக்க முடியல.
 
 ‘பிள்ளைகளை 1000 மார்க் வாங்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. கடைசி நேரத்தில் எங்களை நிர்பந்தம் செஞ்சா எப்படி?'ன்னு கேட்டுட்டுதான் வந்தோம். பெயிலானா எங்களைக் குறை சொல்லாதீங்கன்னு சொல்லி அதோட விட்டுட்டாங்க. எதுக்கும் வந்து பாக்குறோம் சார்," என்றார்கள். வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை! ‘என்ன நடக்குது... இந்த கொள்ளையை தட்டிக்கேட்க ஆளே இல்லையா?' ம்ஹூம்... இல்லை! 

நுகர்வோர்க்கான விழிப்புணர்வு !




அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் நுகர்வோராய் இருக்கும் நாம் வியாபாரிகளை பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சொல்வோம் ஆனால் நுகர்வோரின் கடமைகள் என்ன? என்று நமக்குத் தெரியுமா? இது பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை இதோ...
 
முக்கியப் பேருந்து நிலையங்கள் போன்ற, அவசரகதியாக மக்கள் கூடும் இடங்களில் அமைந்திருக்கும் கடைகளில் சென்று பொருட்களை வாங்கும் போது பார்த்தால், பெரும்பாலும் இரண்டு மூன்று ரூபாய் அதிகம் விலை வைத்தே விற்பனை செய்கிறார்கள். என்னது இது? எம்.ஆர்.பி இவ்வளவு தானே, ஏன் அதிகமான விலைக்கு இந்த பொருட்களை விற்கிறீர்கள் என்று கேட்டு விட முடியாது. அப்படிக் கேட்பின் சுற்றி நிற்பவர்களும், கடைக்காரரும் நம்மைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே... கொடுமை. அத்தனை ஏளனம் இருக்கும். நாம் வாங்குகின்ற பொருளுக்கு காசு குடுக்கின்ற நாம் எஜமானர்கள் கிடையாது. இது தான் நடப்பில் உள்ள நிதர்சனமான உண்மை.

சரி, அதட்டித்தான் கேட்க வேண்டாம், "என்ன சார் இது? இப்டிப் பண்றீங்களே" என நியாயமான முறையில் கேட்டாலும் கூட... அதான் எல்லாரும் வாங்கிட்டுப் போறாங்களே.. உனக்கு மட்டும் என்னய்யான்னு துரத்தாத குறையாக, ஒரு அலட்சியப் பதில் வரும். ஏன் இந்த நிலை? எப்படி நாம் இந்த சூழலுக்குத் தள்ளப் பட்டோம்?நம் மனமும் இது போன்ற அநியாயங்களுக்கு வேறு வழியின்றி இசைந்து,சகித்துக் கொள்ளப் பழகி விட்டது போலும்... மற்றவர்களும் வாங்கி விட்டுத் தானே செல்கிறார்கள். நமக்கு மட்டும் என்ன? என்று போகவும் மனமில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வாங்கிவிட்டுச் செல்லும் அத்துனை பேர்களும் 1% அளவாவது எரிச்சல் படாமல் இல்லை. இது தான் நம் தலையெழுத்து போலும். நாம்(சாமானியர்கள்) ஒடுக்கப்படும் போது, எங்குமே குரல் எழுப்பக் கூட முடியாதபடி தான் நம் குரல்வளைகள் குடும்பம் என்ற கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன.சரி.. ஒரு சாமானிய மனிதனாக... இதை எப்படித் தட்டிக் கேட்பது? இல்லையென்றால் யாரிடம் புகார் அளிப்பது என விசாரித்ததில் கிடைத்த தகவலைப் பார்ப்போம்.

MRP -ஐ விட பத்து பைசா அதிகம் வாங்கினாலும் அதற்கான பில்லை முதலில் வாங்குங்கள். அப்படியே சென்று நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் ஒரு புகார் செய்தால் போதும். மற்றவை தானாகவே நடந்துவிடும். அல்லது உங்கள் ஊரில் உள்ள நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் உணவுகலப்பட தடுப்புப் பிரிவில் சென்று புகார் தாருங்கள். ஏனெனில் அவர்கள் தான் இதை ஆய்வுசெய்து கண்டுபிடிக்க கடமைப் பட்டவர்கள். எனவே புகார் அளிப்பதற்கு ரசீது(பில்) வேண்டும். அது சரி.. நம் நாட்டில் எல்லாக் கடைகளிலும் பில்லிங் வசதி உண்டா? அதையும் பார்ப்போம்..விற்பனைவரி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காத ஒரு சிறு அல்லது சாலையோரக் கடைகளில் மட்டுமே பில் இருக்காது. மற்றபடி பதிவு செய்யப்பட்டிருக்கும் கடைகள் அனைத்திலும் பில் கண்டிப்பாக இருக்கவேண்டும். இப்பொழுது கேள்வி என்னவென்றால் அனைத்துக் கடைகளிலும் பில்லிங் வசதியைக் கட்டாயப் படுத்தினால் தான் என்ன? இது சாத்தியமா? இதனால் உண்டாகும் நன்மைகள் என்ன? என ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

பில்லிங் முறையை அனைத்துக் கடைகளிலும் கட்டாயப்படுத்தினால் என்ன நன்மை? நிச்சயமாக பில் போட்டு வாங்கினால் தான் அந்த பொருளுக்கான வரி அரசாங்கத்திற்குச் செல்லும். அரசாங்கம் நினைத்தால் எதுவுமே சாத்தியம் தான். ஆனால் சிறு, குறு மற்றும் நடைபாதைக் கடைகள் வரிவிதிப்பில் கொண்டுவந்தால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர். மிகப்பெரிய லஞ்சத்திற்கு வழிவகை செய்யும். விலைவாசி மிகக்கடுமையாக உயரும்.

இதையெல்லாம் சரி செய்ய வரிவிதிப்பில் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அது மிகவும் எளிமையாகவும், வியாபாரிகளுக்கும் அரசுக்குமான நேரடி தொடர்பில் நடக்க வேண்டும். வியாபாரிகளை தாமாக வரிகட்ட முன்வரவைக்க வேண்டும். இது மிகவும் சாத்தியம் தான். அரசுக்கும் இப்பொழுது உள்ளதை விட அதிக வருமானம் கிடைக்கும், விலைகளும் பெறுமளவில் குறையும். வியாபாரிகளும் நிம்மதியாக மக்களுக்கு இன்னும் பல வசதிகளுடன் கூடிய சேவையைத் தருவார்கள். ஆனால் இதையெல்லாம் அரசியல் வாதிகளும்அதிகாரிகளும் செய்ய மாட்டார்கள். காரணம் அவர்களது தனிப்பட்ட வருமானம் நின்று போகும்.
சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், ஸ்மக்லிங் ப்ராடக்ட்ஸைத் தவிர்ப்பதற்கும், கடைகள் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருத்தல் நலம். இது நன்மையா என அலசி ஆராய்ந்து பார்ப்போம். சரி, எல்லாக் கடைகளையும் விற்பனை வரி அலுவலகத்தில் பதிவு செய்துகொள்வது நல்லதா என்றால் அது யாருக்கு நல்லது? என்ற உப கேள்வியோடு இருக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட மூன்று பிரிவினருக்கான நல்லது கெட்டதுகளைப் பற்றிச் சொல்லவேண்டும்.
1. கடைக்காரர்கள், 2. அரசாங்கம், 3. மக்கள்
பதிவு செய்யாமல் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் தெருவோர சிறுகடைக் காரர்களுக்கும், கிராமத்து கடைக்காரர் களுக்கும் இது நல்லது அல்ல. அதனால் அந்தக் கடைகளின் வாடிக்கையாளர்களான தினக்கூலி வாங்கிப் பிழைக்கும் மக்களுக்கும் இது நல்லது அல்ல. 
ஏனென்றால், தெரு வோரக்கடை வைத்திருப்பவர்கள் யாரும் மாடி வீட்டில் வாழ்வது இல்லை தான்! அவர்கள் வயிற்றில் நாம் ஏன் அடிக்க வேண்டும்? வேறு வழியே இல்லை என்கிறபோது - இந்த நிலை எப்பொழுது வரும்? ஒரு குக்கிராமத்திலோ, காட்டுப்பகுதியிலோ, மக்கள் தொகை மிக மிக குறைவாக (அதிக வியாபாரத்திற்கு வழியில்லாத பகுதிகளிலோ ) உள்ள பகுதிகளிலோ தான் இந்த மாதிரி கடைகள் இருக்கும்.
அங்குள்ள சொற்பமானவர்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் காத தூரம்போக வேண்டும். அதற்கான செலவைப் பாருங்கள். அதிக வியாபார வாய்ப்பு இல்லாத இடங்களில் ஒருவனுக்கு எப்படி பிரேக் ஈவன் வரும்? அப்படி அதையும்தாண்டி லாபம் என்ற ஒன்றை அவன் பார்க்க வேண்டும் என்றால் இப்படி விலையைக் கொஞ்சம் அதிகம் வைத்துத் தான் விற்க வேண்டி வரும். ஒரு உதாரணத்திற்கு உங்கள் தெருவில் ஒரு சிறிய பலசரக்கு கடை இருக்கும், அதில் மளிகை, காய்கறி, கூல்ட்ரிங்க்ஸ் உட்பட அனைத்துமே இருக்கும். ஆத்திர அவசரத்திற்கு தினமும் ஏதாவது ஒன்றை அங்கு தான் வாங்கவேண்டியிருக்கும்.இல்லையென்றால் கொஞ்சம் தூரம் அதிகம் சென்று வாங்க வேண்டியிருக்கும். 
அந்த மாதிரி கடைகள் கொஞ்சம் அதிகம் விலை வைத்து விற்பதுவாடிக்கையான விஷயம் தான். அவர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுத்தால் என்ன ஆகும்? நீங்கள் தினமும் அவசர ஆத்திரத்திற்கு உங்கள் வீட்டுக்காரரையோ அல்லது பிள்ளையையோ தொலைதூரத்திற்கு அனுப்பவேண்டிவரும்! அவர்களுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும். இது ஒரு சிச்சுவேசன்.
ஆனால், இதை அப்படியே.. டி.நகர் போன்ற பெரிய பசார் தெருக்களில் உள்ள சிறு சிறு கடைகளை மனதில் இருத்திப் பார்ப்போம். இங்கே எப்படி வியாபரம் நடக்கிறது? தி.நகரில், நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை, வேறு எங்கும் வாங்குவதை விட குறைவாகத்தான் இருக்கும். நெருக்கடியான சந்தை,அல்லது மக்கள் அதிகம் வந்து விற்பனையாகும் பகுதிகளில் உள்ள கடைகள்(ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் தவிர்த்து - இங்கெல்லாம் மக்களின் முன் திட்ட மிடாமையையும், அவசரத்தையும் அவர்கள் பயன்படுத்திக் காசாக்குகிறார்கள்) நிச்சயமாக எம்.ஆர்.பி ஐ விட அதிகமாக விற்கமாட்டார்கள். சொல்லப்போனால் அதைவிடக் குறைவாகத்தான் விற்பார்கள்.சரி தான்.. ஆனால் பொருட்களின் தரம் மற்றும் அரசுக்கு வரும் வருவாய் இழப்பீடு(வரி) இவற்றைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும்? இது எப்படி மேற்கூறிய கிராமங்களில் இருக்கும் கடைகளின் சிச்சிவேசனோடு ஒத்துப் போகும்?
அடுத்ததாக அரசாங்கம். அனைத்து கடைகளையும் பதிவுசெய்ய வலியுறுத்தினால் அரசுக்கு 100 ரூபாய் வருமான அதிகரிப்பு ஏற்படும் என்று கணக்கிட்டால் அதில் 80 சதவிகிதத்தை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், மற்றும் உயரதிகாரிகள் முதற்கொண்டு, கடைநிலை ஊழியர் வரையிலும் தான் சாப்பிடுவார்கள். வெறும் 20 ரூபாய் வருமானத்திற்காக, வியாபாரிகளிடம் பெறுமளவிலான அதிருப்தியையும், விலை யேற்றம் காரணமாக மக்களிடம் பெரிய அளவிலான எதிர்ப்பும் தான் மிஞ்சும். இதனால் விலைவாசி கடுமையாக உயர்வதோடு, பல சிறு, குறு வியாபாரிகளும், தெருவோரக் கடைக்காரர்களும்,தொழிலை
விட்டு வெளியேறும் அவலங்களும் ஏற்படும்.
அடுத்ததாக மக்கள். ஒரு வரிவிதிப்பு அல்லது அனைத்து கடைகளுக்கும் வரிகட்டும் அவசியமாதல் நடைமுறைக்கு வந்தாலே, உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படப்போவது பொது மக்கள் தான். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்களின் வாழ்க்கை படு திண்டாட்டமாகிவிடும்.
எவை நம் நாட்டில் அதிகம் இருக்கின்றன? எங்கு வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது? அரசுக்கு இதனால் எவ்வளவு வரி இழப்பு. அதை விட இன்னும் கொடுமைகள் பெரிய பெரிய கடைகள் வைத்திருந்தாலும், பில்லிங் வசதி இருந்தாலும், அங்கும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் அதிகம். அவர்களும் வரியை ஒழுங்காக கட்டுகிறார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். வரிக் கட்டுதலும் நம் ஜனநாயகக் கடமைகளில் ஒன்றெனெக் கொள்வோம். பில் போடாமல் பொருள்(உதாரணத்திற்கு தங்கம்) வாங்கினால் அதற்கு ஒரு விலை. அரசைக் குறை சொல்லும் நாம், இவை எல்லாம் நம் ஜனநாயகக் கடமை எனவும், ஒரு வகையான ஒழுக்கம் எனவும் உணர்தல் வேண்டும். வேறு வழியாகவும் இந்த வரி வசூலித்தல் பற்றி யோசித்துப்பார்க்கலாம்.
மாத்தி யோசி: பொருட்களுக்கு வரி போடக் கூடாது. வியாபாரிகளின் விற்பனை அளவிற்கு ஏற்றார் போல குறைந்த பட்சம் ஒன்றிலிருந்து அதிக பட்சமாக 5 வரையிலும் வரிவிதிக்க வேண்டும். அதாவது மாதம்1000 ரூபாய் விற்பனை செய்பவர் 10 ரூபாய் வரி கட்ட வேண்டும். 5000 ரூபாய் விற்பனைசெய்பவர் 250 ரூபாய் வரி கட்ட வேண்டும். அப்படியிருந்தால் அனைத்து வகையான கடைகளுக்கும் நேராகவே வணிகவரி அலுவலர் வந்து அவர் விவரங்களைக் கேட்டு வாங்கி கையோடு பதிவுச் சான்றிதழை வழங்க வேண்டும். ஒருகடைக்காரர் பதிவு செய்யப்படவில்லை என்றால் அது அவரின் குற்றமாக ஆகாது, மாறாக அது அந்த வணிக வரி அலுவலரின் குற்றமாகக் கருதப்படும். அதேப்போல் அவரே மாதாமாதம் வந்து வரியையும் வசூல் செய்துவிட்டுப் போய்விடவேண்டும். 

இப்படிச் செய்தால் அனைவரும் வரிகட்டுவார்கள். மக்களுக்கும் விலையேற்ற பிரச்சினை வராது. அரசாங்கத்திற்கும் இப்பொழுது உள்ளது போல நூறு மடங்கு வருமானம்அதிகரிக்கும்.

காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு !

 காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு September 4, 2014 ____________________________________________________________ 


சென்னை மாநகர காவல்துறையின் சார்பில் கூறப்பட்டுள்ளதாக சென்னை DAV உள்ளிட்ட சில பள்ளிக்கூடங்களில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, வேலைக்கு தனியாக செல்லும் பெண்களின் கவனத்திற்கு : சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தனியாக சிறு குழந்தை அழுது கொண்டிருந்தால், அதனை உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைக்கவும். மாறாக அந்தக் குழந்தை சொல்லும் முகவரிக்கு அழைத்துச் சென்று ஒப்படைக்க முயல வேண்டாம். பெண் கடத்தல், கற்பழிப்பு, விபசாரக் கும்பல்களின் புது விதமான டெக்னிக் இது. எனவே அவர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம். இந்தத் தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும். 

காதுக்குள் பூச்சி நுழைந்தால்...???

காதுக்குள் பூச்சி நுழைந்தால்...???

காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன செய்வெதன்று தெரியாமல் திணறுவோம்.

அதற்கு ஒரு எளிய வழி உள்ளது.

அதாவது, காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் உடனடியாக காதினுள் எண்ணையையோ (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்) உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.

இதனால், காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். பிறகு அதனை எடுத்து விடலாம்.

சிலர், பூச்சி காதுக்குள் போனதும் வெறும் தண்ணீரை ஊற்றுவார்கள். ஆனால், பூச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் தண்ணீரிலும் இருப்பதால் சில பூச்சிகள் இறப்பது இல்லை.

அதே போல, குழந்தைகளுக்கு காது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வது சற்று கடினமான வேலை தான்.

சில குறிப்புகளை வைத்து குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.

காது கேட்பது மட்டுமே பிரச்சினை அல்ல. காதில் வலி, சீழ் வடிவது, கிருமி தொற்று போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

இதனை கண்டறிய சில குறிப்புகள் :

தேவையில்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்தால் அதற்கு ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்கக் கூடும் என்று தெரிந்து கொள்வீர்கள். ஆனால் காதில் பிரச்சினை இருக்கிறது என்பதை, காதுக்கு அருகே உங்களது கைகளை வைத்து லேசாக வருடி விடுங்கள். அப்போது அழுகை குறைந்தால் பிரச்சினை காதில் என்பதை கண்டறிந்து விடலாம்.

காது என்பது மூக்கு, வாயுடன் தொடர்புடையது என்பதால், இவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் கூட காதினை பாதிக்கலாம். எனவே, மூக்கு மற்றும் வாயில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.

குழந்தை பிறக்கும் போது காதுகளின் உள் இருக்கும் மெல்லிய எலும்புகள் மூடியிருக்காது. குழந்தை பிறந்த பிறகு காதுகளை உலர்வாக வைத்திருந்தால்தான் அவை மூடுகின்றன. அதில்லாமல் எப்போதும் சளிப்பிடித்து காதுகள் ஈரமாக இருக்கும்பட்சத்தில் அவை மூடுவதற்கு காலதாமதம் ஏற்படும். இந்த சமயத்தில் தான் குழந்தைகளுக்கு தொற்று பிரச்சினை ஏற்படுகிறது. காதுக்குள் தொற்று பரவும் போது காதில் சீழ் வடிகிறது.

இந்த பிரச்சினை உள்ள குழந்தையை குளிக்க வைக்கும் முன் பஞ்சினை தேங்காய் எண்ணெயில் நனைத்து காதுகளில் வைத்துவிட்டால் குளிக்கும் போது தண்ணீர் காதுக்குள் செல்வதை தவிர்க்கலாம்.

அதிக சப்தம் கேட்கும் இடங்களில் குழந்தைகளை வைத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

வகுப்பறையில் கவனம் செலுத்தத் தவறினால் குழந்தையை அடிப்பதையோ, திட்டுவதையோ விட்டுவிட்டு அவர்களுக்கு காதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதாக என்று கண்டறியலாம்.

குழந்தைகள் தாங்களாகவே பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை காதில் போட்டு குடைவதை தவிர்க்க வேண்டும்.

மெல்லிய டவலின் நுனிப் பகுதியை லேசாக காதுகளில் விட்டு அருகில் உள்ள நீர்த்தன்மையை போக்கலாமேத் தவிர, குழந்தைகளின் காதுகளில் பட்ஸ்களைப் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டாம்.

காதுகளில் இருந்து மோசமான நாற்றம் வருமாயின் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்பதை உணருங்கள்.

செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக செய்யவேண்டியது என்ன ?



செல்போன்களின் எண்ணிக்கை, செல்போன் வாங்குவோரின் எண்ணிக்கை மற்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை எப்படி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதோ அதேபோலத்தான் செல்போன் தொலைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. சில போன்கள் திருடப்படுகின்றன. சில செல்போன்களை நாமாகவே தொலைத்துவிடுகின்றோம். அப்படி செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக செய்யவேண்டியது என்ன என்பதையே இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.

சாதாரண செல்போன் காணாமல் போனால் கூட அதிக கவலை இல்லை. ஸ்மார்ட்போன்கள் எனப்படுகின்ற அதிநவீன, விலையுயர்ந்த செல்போன் காணாமல்போனால் என்ன செய்ய? ஸ்மார்ட்போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும் அது தரும் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த தவறுகிறார்கள். தகவல்கள் கீழே!

செல்போன் பாதுகாப்பு: 

ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும். பின் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல கடவுச்சொற்கள் முறையானது உங்கள் செல்போன் அல்லது ஸ்மார்ட்போனை மற்றொருவர் பயன்படுத்துவதற்கெதிராக செயல்படும்.

மொபைல் டிராக்கிங்: 


மொபைல் டிராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விபரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்குமாறும் அமைக்கலாம்.

மொபைல் இன்ஷூரன்ஸ்:
பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனுக்கான இன்ஷூரன்ஸ் வெறும் நூற்று சொச்ச ரூபாய்கள் தான். போலீஸில் புகார் கொடுத்ததற்கான சான்றோடு, மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விபரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ, தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும்.

சிம்கார்டை பிளாக் செய்க:
மொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள். பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

காவல் நிலையத்தில் புகார்:
சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பின்னர், 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள்.

மொபைல் பேங்கிங் வசதியை முடக்குங்கள்:
ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை. மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான். இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு கோரலாம்.

அந்தரங்க படங்களை தவிருங்கள்: 


தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம்.

ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள்: 

நீங்கள் பயன்படுத்தும் செல்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுவதாக இருந்து, உங்கள் போனில் அதிநவீன வசதிகள் இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் பயன்படுத்தியும் பாதுகாக்கலாம்.

சாதாரண செல்போனாக இருந்தால்,

1. அது தொலைவதற்கு முன்பே, அந்த போனில் இருந்து *#06# என்ற எண்ணுக்கு போன் செய்யுங்கள்.

2. உங்கள் செல்போனில் 15 டிஜிட் நம்பர் வரும்,

3. இந்த நம்பர் தங்கள் செல்போனின் IMEI (International Mobile station Equipment Identity) number ஆகும்.

4. இதனை தாங்கள் டைரியிலோ அல்லது வேறு இடத்திலோ குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5.மொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள். பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

6. அதன்பிறகு , உடனே இந்த (IMEI) நம்பரை cop@vsnl.net - க்கு மெயில் அனுப்ப வேண்டும்.

7. தங்களது செல்போன் இருக்குமிடம் 24 மணி நேரத்துக்குள் GPRS (General Pocket Radio Service) மூலம் கண்டறியப்படும்
Thanks to Dora Edward

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...