Total Pageviews

Monday, May 18, 2020

உறவுகள் எப்படி இருக்க வேண்டும் ?




உறவுகள் எப்படி இருக்க வேண்டும்?

உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், குழந்தை, சொந்தபந்தம், பெற்றோர், பக்கத்து வீட்டுக்காரர் என்று தொடங்கி அவரது நண்பர், அவரது பகைவர், அனைவருமே அவருடைய உறவு வட்டத்திற்குள் வருபவர்தான். இத்தனை உறவுகள் எதற்காக என்ற கேள்வி எழலாம். ஒரு மனிதருக்கிருக்கும் விதம்விதமான தேவைகளை நிறைவு செய்வதற்காகவே விதம்விதமான உறவுகள் உருவாகின்றன. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, உலகியல் சார்ந்து மனிதனுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.

உங்கள் வாழ்வில் நிகழும் விதம்விதமான செயல்பாடுகளுக்கேற்ப விதம்விதமான உறவுகள் அமைகின்றன. இதில், ஒவ்வொரு நாளும் உங்கள் செயல்களின் தன்மை மாறிக்கொண்டே வருகிறபோது, அந்த செயல்களுக்கேற்ப ஏதாவது ஒரு குறிப்பிட்ட உறவிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறீர்கள். உங்கள் பங்குதாரரிடம் தொலைபேசியில் பேசுகிறீர்கள். அடுத்தநிமிடமே உங்கள் குழந்தையிடம் ஏதோ கேட்கிறீர்கள். அதற்கடுத்த நிமிடமே உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு பதில் சொல்கிறீர்கள். ஒவ்வோர் உறவையும் நீங்கள் ஒவ்வொருவிதமாகக் கையாள வேண்டியிருக்கிறது. உங்கள் குழந்தையை கையாள்கிற விதத்தில் உங்கள் கணவரை கையாள முடியாது. எனவே, இத்தனை உறவுகளையும் ஒருசேர கையாள்வதென்பது பந்துகளை ஒரே நேரத்தில் வீசிப்பிடிப்பதைப் போன்றது. உங்கள் கைகளில் ஒரேயொரு பந்து இருக்குமென்றால் எளிதாக இருக்கும். ஒரே நேரத்தில் பத்து பந்துகளை வீசிப்பிடிக்க வேண்டும், ஒன்றைக் கூட நழுவவிடக் கூடாது என்றால் அது எவ்வளவு சிரமமானது! ஒரே நேரத்தில் பல உறவுகளைக் கையாள்வதென்பது இப்படித்தான். ஒரு மனிதர் ஒரே நேரத்தில் பத்து பந்துகளை வீசிப் பிடிக்கும்போது அவரால் வேறெதிலும் கவனம் செலுத்தமுடியாது. நீங்கள் உறவுகளை கையாள்கிற சூழலும் இப்படித்தான் இருக்கிறது. உங்களுடைய சில தேவைகளை நிறைவு செய்வதற்காக உறவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், அந்த உறவுகளின் தேவைகளை ஈடுசெய்ய வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு இருக்கிறது.

இன்னொரு விதமாகவும் வாழலாம். அது எவ்விதமான உறவுகளும் இல்லாமல் வாழ்வது. தனக்குள்ளேயே முழு நிறைவைக் கண்டு வெளியே வேறு உறவுகளைத் தேட வேண்டிய தேவையில்லாமல் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால், இப்போதைய சூழலில் பிறருடன் நீங்கள் கொண்டிருக்கும் உறவுகள்தான் உங்கள் வாழ்க்கையின் தன்மையையே தீர்மானிக்கின்றன. எனவே, வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, வெளியிலும் சரி மிகவும் மேன்மையான உறவுகளை மேற்கொள்வது எப்படி என்று பார்க்க வேண்டும். உறவுகளின் ஆதார சுருதியே தேவைகள்தான் என்பதை முதலில் பார்த்தோம். விதம்விதமான உறவுகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க முயல்கிறீர்கள்.

நட்பை உருவாக்கிக் கொள்வது, திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது, தொழில் தொடங்குவது, இவையெல்லாமே மகிழ்ச்சியாய் இருப்பதற்கான முயற்சிகள்தான். இதையே வேறுவிதமாக சொல்வதென்றால், மனிதர்களை கசக்கிப் பிழிந்து மகிழ்ச்சியின் சாறெடுக்க முயல்கிறீர்கள். இதைச் செய்கிறபோதுதான் உறவுகள் உங்களுக்கு தொடர்ந்து தொந்தரவுகளையே தருகின்றன.

பெரும்பாலான மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உறவுகளிலேயே மிகவும் நெருக்கமானது ஆண், பெண் உறவுகள்தான். அவர்கள் சேர்ந்திருக்கும் நேரங்களில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பிரித்து வைத்தீர்கள் என்று சொன்னால் 24 மணிநேரத்திற்கு மேல் அவர்களால் பிரிந்திருக்க முடியாது. மறுபடியும் சேர்த்து வைத்தால் 10 நிமிடங்களுக்குள் சண்டையைத் தொடங்கி விடுவார்கள். அவர்களால், சேர்ந்தும் இருக்க முடியாது, பிரிந்தும் இருக்க முடியாது. பிரச்சினையே இதுதான். இது அவர்களுக்குள் இருக்கும் ஒருவிதத் தேவையின் காரணமாக ஏற்படுகிற மோதல். தங்களுக்குள் மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ அவர்கள் உணரவில்லை. ஒருவர் இன்னொருவரிடமிருந்து மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ பிழிந்தெடுக்கப் பார்க்கிறார். ஆனால், இதுவொரு போராட்டமாகத்தான் இருக்கும். நெருக்கமான உறவுகளில் இருக்கும் இத்தகைய இரண்டு பேர் ஒருவரையொருவர் கொலை செய்துவிடப் போவதில்லை. ஆனால், ஒருவரையொருவர் வெவ்வேறு விதங்களில் சித்ரவதை செய்து கொள்வார்கள். இது ஓர் ஒப்பந்தம். ஏனெனில், இன்னொருவரை கொலை செய்துவிட்டால் அவருக்கு வேறு போக்கிடம் இல்லை.

எனவே, மேன்மையான உறவுகள் மலர வேண்டுமென்றால், ஒரு மனிதர் உறவு கொள்வதற்காக இன்னொருவரைத் தேடுவதற்கு முன் தனக்குள் ஆழமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் ஆனந்தத்திற்கு நீங்களே மூலமாக இருக்கும்போது, உங்கள் உறவுகள் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் வழியாக இருக்கும்போது, உறவுகளைக் கசக்கிப் பிழிய வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. எல்லோரோடும் மிக அற்புதமான உறவுகளை உங்களால் மேற்கொள்ள முடியும்.

மனிதர்களுக்கு உறவுகள் வழியே சிக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? அவர்கள், தங்கள்
வாழ்வை மேம்படுத்திக்கொள்ள உறவுகளைப் பயன்படுத்தாமல், வாழ்க்கையிலிருக்கும் இடைவெளிகளை நிரப்புவதற்கே உறவுகளைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வருத்தமாக இருந்தாலும் அதனை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வீதிமுனைகளில் நின்று கவனிப்பீர்களேயானால், நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கானவர்கள் உங்களைக் கடந்து செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாடிய முகங்களுடன்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னாயிற்று? இத்தனைக்கும் உங்கள் முன்னோர்களைக் காட்டிலும் ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறீர்கள்.  உறவுகளை நிர்வகிக்க அது உதவுவதில்லை. உங்கள் உறவு என்பது பக்கத்திலிருக்கும் மனிதருக்கான ஓர் அர்ப்பணிப்பாக விளங்குமென்றால் அது மிகவும் அற்புதமாக இருக்கும்.

உலகியல் சார்ந்த தேவைகளைப் பொறுத்தவரையில் அனைவருமே ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால், உங்கள் அனுபவத்தின் தன்மையைப் பொறுத்தவரை நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் அனுபவம் உங்கள் அளவில் முழுமையானதாக இருக்கலாம். உலகமே துன்பமயமாக இருந்தாலும், உள்நிலை அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கிற வாய்ப்பு எப்போதுமே இருக்கிறது. உங்கள் அனுபவங்கள் வெளிச்சூழலுக்கு அடிமையாக்கப்பட்டோ, அடகு வைக்கப்பட்டோ இருந்தால்தான் அது சாத்தியமில்லை.
 நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருந்தால் எல்லோரும் உங்களோடு உறவுகொள்ளத் தான் விரும்புவார்கள். யாரிடமாவது எதையாவது கசக்கிப் பிழிய வேண்டும் என்று நீங்கள் கருதினால், நேற்று உங்களை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவர்கள் கூட இன்று உங்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புவார்கள். வாழ்க்கை பலரையும் சார்ந்திருக்கிறது என்பதால்தான் உறவுகளையே நீங்கள் உருவாக்கினீர்கள். உங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களையும் நீங்களே கையாள முடியாது. உங்களைச் சுற்றி மனிதர்கள் வேண்டும். அதற்காகத்தான் உறவுகள். ஆனால், எல்லோரிடமிருந்தும் நீங்கள் எதையாவது பெற்றுக் கொண்டே இருக்க விரும்பினால், உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஓர் அந்நியருடன் இருப்பதை விடவும் எச்சரிக்கையாக உங்களிடம் நடந்து கொள்வார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

உறவுகளை இனிமையானவையாய் வைத்துக் கொள்வதும், சிக்கல்மிக்கதாய் உருவாக்கிக் கொள்வதும் உங்களைப் பொறுத்துதான் இருக்கிறது. நெருக்கமானவர்கள் என்றால் அவர்களுடனான மனத்தடைகள் உடைந்திருக்க வேண்டும். ஆனால், அந்நியர்களிடம் இயல்பாய் இருக்கிறீர்கள், நெருக்கமானவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்கிறீர்கள் என்றால் அது உங்கள் அதீத எதிர்பார்ப்பையே காட்டுகிறது. ஒருவரோடொருவர் நெருங்கியிருக்கும் போதே ஒருவரிடமிருந்து ஒருவர் தற்காத்துக் கொள்ள தேவைகள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழலில் உங்களால் உங்களுடன் உறவுகொண்டிருப்பவர்களோடு சேர்ந்திருப்பதும் சாத்தியமில்லை, விலகியிருப்பதும் சாத்தியமில்லை. இந்த உலகத்தில் வாழ்கிறபோது உறவுகளைப் பொறுத்தவரையில் உங்களுக்கு தேர்வுகள் ஏதும் கிடையாது. நீங்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கலாம். குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், யாருடனும் உறவுகளை வளர்த்துக் கொள்ளாமல் இருக்க சாத்தியமில்லை. ஆனால், உறவுகள் மேன்மையானவையாக இருக்க வேண்டுமா? சிக்கல் உள்ளவையாக இருக்க வேண்டுமா? என்று தேர்வு செய்வது உங்களால் முடியும்.

வாழ்க்கை எப்போதுமே நேர்கோடாக இருப்பதில்லை. வாழ்வை நடத்துவதற்கென்று எத்தனையோ விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் புரிதலை நீங்கள் கைவிட்டால் உங்கள் செயல்திறனை நீங்கள் இழக்கிறீர்கள். தனிப்பட்ட உறவாகட்டும், தொழில்முறை நிர்வாகமாகட்டும், எல்லா இடங்களிலும் அடிப்படைத் தேவையென்னவோ ஆழமான புரிதல்தான்.

மண்ணின் மக்கள் " வேலை வழங்கு வாரியம்' அமைத்திடுக!




புலம்பெயர் தொழிலாளிகள் தங்களது சொந்த மாநிலத்துக்கே திரும்பிப் போய்விட்டால், இங்கு திறக்கப்படவுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கும், பெருந்தொழிற்சாலைகளுக்கும் தேவையான தொழிலாளிகளுக்கு என்ன செய்வது? என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில், 'மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்' அமைக்கக் கோரி தமிழக முதல்வருக்கு தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

''கரோனா போன்ற பேரிடர் காலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் தாய் மண்ணில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புவது தற்காப்பு உணர்வு சார்ந்த உளவியல் உந்துதல் ஆகும். எனவே, வெளி மாநிலங்களில் பணிபுரிந்த தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதும், தமிழ்நாட்டில் சிக்கிக் கொண்டுள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர் தாயகப் பகுதிக்கு அனுப்பி வைப்பதும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கட்டாயக் கடமையாகும்.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர் தொழிலாளிகள் போய்விட்டால், இங்கு திறக்கப்படவுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கும், பெருந்தொழிற்சாலைகளுக்கும் தேவையான தொழிலாளிகளுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும். தமிழ்நாட்டு மண்ணில் மக்களின் மனித வளம் அதிகம். இப்போது வெளி மாநிலங்களிலிருந்து வந்து சேரும் தமிழ்த் தொழிலாளிகளும் இந்த மனித வளத்தில் கூடுதலாகச் சேர்ந்து கொள்வார்கள். ஏற்கெனவே தமிழ்நாட்டுத் தொழில் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் பல லட்சம் பேர் வேலையின்றி இருக்கிறார்கள். உள்ளூர் வேலைகளைத் தவிர்த்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறானவர்களை உள்ளூர் வேலைகளுக்கும், தமிழ்நாட்டு வேலைகளுக்கும் ஈர்க்கும் தனி முயற்சியை அரசு எடுக்க வேண்டும்.

இவர்கள் அனைவருக்குமான ‘தமிழ்நாடு அமைப்பு சாராத் தொழிலாளர் வேலைவாய்ப்பு வாரியம்’ ஒன்றைப் புதிதாகத் தொடங்கி மேலே சொல்லப்பட்ட ஆண் - பெண் தொழிலாளிகள் அனைவரையும் பதிவு செய்துகொள்ள வேண்டும். பல துறை வேலை வாய்ப்பிற்குரிய கல்வித் திறன் பெற்றவர்களும் உடல் உழைப்பாளிகளும், கட்டுமானத் தொழிலாளிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த வாரியத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

எல்லாத் தொழில் நிறுவனங்களும் இந்த வாரியத்திலிருந்து தங்களுக்குத் தேவையான தொழிலாளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டமியற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து தொழிலாளிகளை அழைத்து வரும் பணவேட்டைத் தரகர்களுக்குத் தடை விதிக்க வேண்டும். எந்தத் தொழில் நிறுவனத்திலும் 10 விழுக்காட்டிற்கு மேல் வெளிமாநிலத் தொழிலாளிகள் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. இந்தத் தொழிலாளிகளுக்கு வேலை நேரம், வேலைக்கேற்ற ஊதியம் அனைத்தையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கும்போது, தொழிலாளி கிடைக்கவில்லை என்ற சிக்கல் ஏற்படாது. வெளிமாநிலத் தொழிலாளிகளைக் கட்டாயப்படுத்தித் தங்க வைக்கும் உரிமை மீறல் தேவை இல்லை. தமிழ்நாட்டிலுள்ள வெளி மாநிலத் தொழிலாளிகள் தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல விரும்பும் நிலையில், அவர்களைத் தடுத்து இங்கேயே தங்க வைத்துக் கொள்ள தொழில் முனைவோர் சிலர் முயல்கிறார்கள்.

அடுத்து, கரோனா காலத்தில் ஒரு விடுமுறை போல் தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பித் தமிழ்நாட்டுக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்திலும் புலம்பெயர் தொழிலாளிகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஒரு சரியான முடிவெடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மிகை எண்ணிக்கையில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் நிரம்பியுள்ளனர். ஒடிசா மாநில அரசு, தங்கள் மாநிலத் தொழிலாளிகளுக்காக தமிழ்நாட்டில் சென்னையிலும், திருப்பூரிலும் அலுவலகம் திறந்துள்ளது. இப்பொழுதுள்ள புலம் பெயர் தொழிலாளிகளும், இதே எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் நிலைத்து மேலும் மேலும் வடமாநிலத் தொழிலாளிகள் இங்கு வந்து குவிந்தால் தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்குரிய வேலைகள் அயல் மாநிலத்திற்குப் பறிபோய்விடும். தமிழ்நாட்டு மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்திலும் வறுமையிலும் உழல்வார்கள். மேலும், இதே எண்ணிக்கையில் வட மாநிலத் தொழிலாளர்கள் வந்து குவியும்போது, தமிழ்நாட்டு மக்கள்தொகை விகிதத்தில் அயல் மாநிலத்தார் எண்ணிக்கை அதிகமாகி, தமிழர்கள் எண்ணிக்கை குறையும் அபாயமிருக்கிறது.

அரசமைப்புச் சட்டப்படி தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கம் சிதைந்து, கலப்பின மாநிலமாக மாறிவிடும். தமிழ் மொழி தமிழ்நாட்டில் பின்னுக்குத் தள்ளப்படும். தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு இருக்காது!

இந்த அபாயங்களை உணர்ந்து, மண்ணின் மக்கள் வேலைப் பாதுகாப்பு மட்டுமின்றி, தமிழர் தாயகப் பாதுகாப்பு என்ற நோக்கத்திலும் மேற்சொன்ன நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மிகக் குறைந்த கூலிக்காகவும், மிகை நேர வேலைக்காகவும் தமிழ்நாட்டு குடிமக்களைப் புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத் தொழிலாளிகளை வேலைக்குச் சேர்க்க முனைகின்ற தன்னலவாதத் தொழில் முனைவோரின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்.

எனவே, தமிழக முதல்வர் எங்களது மேற்கண்ட வேண்டுகோளைப் பரிசீலித்து, ‘மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்’ அமைத்திடவும், வெளி மாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கும் படியும் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்''.

Sunday, May 17, 2020

சுத்தம் வேண்டும் நித்தம்!

 சுத்தம் வேண்டும் நித்தம்!   


குளிக்கும் பழக்கம்

நாமும் தினமும் குளித்து குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம்-கை-கால்  மட்டுமே கழுவிக்கொண்டு செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து  நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள். தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத் துணியில் பாக்டீரியா வேகமாக  வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.. வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக்  குளிக்கவைக்கவும்.

கை சுத்தம்

சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப்  பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு  குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள். மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத்  தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற  இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.


பல் சுத்தம்

சொத்தை பல் பிரச்சனை குழந்தைகள் மத்தியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தினமும் இரண்டு முறை பல் துலக்கக் கற்றுக்கொடுக்காததே இதற்குக்  காரணம். தூங்கப்போகும் முன்பு கட்டாயமாக பல்லை சுத்தம் செய்ய கற்றுகொடுங்கள். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே பெற்றோர்களுக்கு மிகப்  பெரிய சவால்தான். பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க குழந்தைகளை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி  அனுப்பிவிடுகின்றனர். குழந்தைகளை சீக்கிரத்திலேயே எழுந்திருக்கவைத்து, நிதானமாகப் பல் துலக்கவையுங்கள். பல்லின் முன், பின், மேல், கீழ் என  எல்லாப் பக்கங்களிலும் துலக்கச் செய்வதால் பெப்பர்மின்ட் வாசம் தூக்கும். பளிச் எனப் பற்களும் பிரகாசிக்கும்.

காயங்களை மூட வேண்டும்

காய்ந்துவரும் புண்ணை பிய்க்கும் பழக்கமும் குழந்தைகளுக்கு இருக்கும். காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும்.  இதைத்  தவிர்க்க, காயம்பட்டவுடன் முதலில் ஆன்டிசெப்ட்டிக் திரவத்தால் காயத்தை சுத்தம்செய்து, காயங்களை பேன்டேஜ் போட்டு மூட வேண்டும். காயங்கள்  மீது கைகள் படக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். பள்ளிக்கூடம், வெளி இடங்களில் குழந்தைக்கு எந்த சிறிய காயம் பட்டாலும், உடனடியாகத்  தெரிவிக்கும்படி குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்

தும்மல் வந்தால் மூடிக்கொள்ளுங்கள்

தும்மல், இருமல் வந்தால், நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். ஒருவேளை  தும்மல் ஏற்படும்போது கையில் துணி ஏதும் இல்லை என்றால், முழங்கையின் முன்புறத்தால் மூடிக்கொள்ளச் சொல்லலாம். ஏனெனில், கையில்  தும்மல் பட்டால், அதில் கிருமிகள் பரவி, மற்ற குழந்தைகளைத் தொடுவதன் மூலம் இந்த கிருமி மற்றவர்களுக்கும் பரவும். ஆனால், முழங்கையால்  மூடித் தும்மும்போது கிருமியானது குறிப்பிட்ட சிறிய பகுதியில் மட்டுமே இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் குளித்தால் அந்தக் கிருமிகளும் இல்லாமல்  போய்விடும். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்னர், கைக்குட்டை ஒன்றை அவர்களது உடையின் மேல் 'பின்’ செய்து அனுப்புவது  நல்லது.

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...