Total Pageviews

Monday, July 24, 2023

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

sleepless 


நாங்கெல்லாம் பயத்துக்கே பயங்காட்றவங்க, தெரியுமாஎன்று சிலர் சினிமா பன்ச் பேசுவார்கள். ஆனால், உண்மையில், பயப்படாத மனிதர்கள் இருக்க முடியுமா? நம்மில் பலர் பகலில் சூப்பர்மேன் என்றால் இரவானால் பேட்மேனாக இல்லாமல், ‘காஞ்சனாராகவா லாரன்ஸ் போல மாறி விடுவோம். பேய், பிசாசு குறித்த கற்பனைகளை மட்டும் இங்கே பயமாக குறிப்பிடவில்லை. உயரமான இடத்தில் நிற்கப் பயம், பாம்பைப் பார்த்தால் பயம், பூச்சிகளைப் பார்த்தால் பயம், இருள் என்றால் பயம் என்று பயம் என்பது நம் அன்றாட வாழ்வில் எப்போதும் இருக்கும் உணர்வுதான் இது. திடீரென மின்சாரம் தடைப்பட்டால் கூட, ஏதோ ஓர் உருவம் வீட்டுக்குள் உலவுவது போன்ற பீதி ஏற்பட்டுவிடும். பலர் பயம் என்பதை ஒரு மனநோய் கணக்காக பில்ட்டப் செய்தாலும், இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சாதாரண பிரச்னைதான். பயத்தை ஒரு பிரச்னை என்று சொல்வதே தவறுதான் என்றாலும், பலர் இதிலிருந்து விடுபட முயற்சிப்பதால் இதை அப்படியே அணுகுவோம்.

பயம் ஏற்படக் காரணம் என்ன?

பயத்தின் முக்கியக் காரணி - அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத, புரியாத நிலையே! சுருக்கமாகச் சொன்னால், பயம் என்பது எதிர்காலத்தை நினைத்துத்தான். எதிர்காலம் என்பது இங்கே அடுத்த நொடி, அடுத்த நிமிடம், அடுத்த நாள், அடுத்தடுத்த வருடங்கள் என அனைத்துக்குமே பொருத்தும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க, உங்கள் எண்ணங்களோ எதிர்காலத்தில் இருக்கின்றது, அவ்வளவே!

ஓர் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, பயம் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த உணர்வு பயம் என்று பொதுமைப்படுத்தப்பட்டாலும் கவலை, அச்சம், பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக இது வெளிப்படுகிறது. மொத்தத்தில், பயம் என்பது முழுக்க முழுக்க நம் மன ஓட்டம் மட்டுமே. அது வெறும் விபரீதக் கற்பனையால் விளைவது. ஆபத்து என்பது கட்டாயமாக இருப்பது என்று எடுத்துக்கொண்டாலும், அங்கே பயம் என்பது, எப்போதும் தவிர்க்கக்கூடிய ஓர் உணர்வு மட்டுமே.

மருத்துவ அறிவியல் ரீதியாகப் பயம்குறித்து ஆராய்ந்தால், ஸ்டாத்மின் (Stathmin) என்ற மரபணுதான் பயம் உருவாகக் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதைக் கண்டறிய உதவியது வழக்கம் போல எலி ஒன்றை வைத்து நடத்திய சோதனைதான். எலிகள் பொதுவாக மிகவும் பயந்த சுபாவம் உடையவை. ஆபத்து பல கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது என்றாலே இங்கே பதற்றமாகி விடும். இந்த ஸ்டாத்மின் மரபணு நீக்கப்பட்ட எலிகள் மிகவும் வித்தியாசமாக செயல்படத் தொடங்கின. எலிகளைப் பொதுவாக பயப்பட வைக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியபோது, அதற்கு இந்த எலிகள் அஞ்சவேயில்லை. அதேசமயம், எலியின் மற்ற செயல்பாடுகள், உடலியல் மாற்றங்கள், இவற்றிற்கெல்லாம் எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அவ்வப்போது உருவாகும் மன அழுத்தம், ஆளுமைக் கோளாறு, கவலை மற்றும் அனைத்து வகை ஃபோபியாக்கள் குறித்துப் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியது. இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர், 2000-மாவது ஆண்டில், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். எரிக் கண்டெல்.

பயம் உருவாகும் அந்த நொடி

பயம் என்ற அந்த ஒற்றை உணர்வைத் தலைதூக்க வைக்க, நம் உடல் என்ன செய்கிறது? அது உருவாகும்போது, நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன?

ஓடி ஒளிதல் (hiding), செயல் முடக்கம் (freezing), நடுக்கம் (shivering), அழுகை (crying) எனப் பயம் பல வகைகளில் வெளிப்பட்டாலும், செயல் முடக்கம் என்பது மட்டுமே பெரும்பாலும் நடக்கும். பயம் ஏற்படுத்தும் ஒரு காட்சியோ, கற்பனையோ, தோன்றிவிட்டால், செயல் முடக்கம் இயல்பாக வந்துவிடுகிறது. இதற்குக் காரணம், நம் பெருமூளை புறணி (Cerebral Cortex). சிந்தனை மற்றும் செயலுக்குக் காரணமான மூளையின் இந்தப் பாகம், எப்போதும் நம் பாதுகாப்புகுறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். ஒரு சிறிய பள்ளத்தைத் தாண்டுவதற்கு கூட, அதனிடம் அனுமதி பெறவேண்டும். தாண்டிவிட முடியுமா என்று நீங்கள் மனதுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி, இந்தப் புறணி கேட்கும் கேள்விதான். இதற்கு ஆதரவாகச் செயல்படுவது மூளையின் மற்றொரு பகுதியான அமிக்டாலா (amygdala). இதுதான் நம் உணர்ச்சிகளின் ஒருங்கிணைப்பு மையம்.

ஓர் இருட்டான ஒற்றையடிப் பாதையை நீங்கள் தனியாக கடக்கும்போது, “இது பாதுகாப்பான வழி தானா?”, “எந்தப் பிரச்னையும் இல்லாமல் இதைக் கடந்துவிட முடியுமா?”, “இருட்டில் கண் ஒழுங்காகத் தெரியுமா?” என்று நமக்குள் பல கேள்விகளை இந்தப் புறணி எழுப்பும். அந்தக் கேள்விகளில் ஏதோ ஒன்றிற்கு விடை இல்லையென்றாலும், உங்கள் இதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமாக துடிக்கத் தொடங்கும். அண்ணீர் எனப்படும் அட்ரினலின் (Adrenaline) உடலில் வேகமாக சுரக்கத் தொடங்கும். இது எல்லாம் உங்களை அந்தப் பாதையில் செல்ல விடாமல் தடுக்க உங்கள் மூளை நடத்தும் நாடகங்கள். அதையும் மீறி நீங்கள் அந்த இருட்டான பாதையில் மெதுவாக நடக்கத் தொடங்கினால், கை, கால்களில் நடுக்கம் ஏற்படத் தொடங்கும். அதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்தால், இப்போது மூச்சு விடுவதுகூட சிரமமாகத் தோன்றும். இருட்டில் ஏதோ ஓர் உருவம், வித்தியாசமான ஒலி, அல்லது ஒருவித சலசலப்பு ஏற்படுவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும். நீங்கள் ஓடி விடலாமா என்று எத்தனிக்க, உங்கள் தோலிலுள்ள ‘pores’ எனப்படும் சிறுதுளைகள் திறந்து பயம் என்ற உணர்வை உடல் முழுவதும் பரப்பி, நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. பேய், பிசாசு என்று பயம் ஏற்படுவதும் இதுபோன்ற ஒரு சமயத்தில் தான். இந்தப் பேய் பயம் தான் நம் பெருமூளை புறணியின் டிரம்ப் கார்டு! அந்த எண்ணம் உதித்தவுடன் அந்த இருட்டில் நடந்து போக முடியாமல் பின்வாங்க வேண்டியதுதான்.

பயமில்லாத மனிதர்கள் உண்டா?

பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கும் பயம் என்ற இந்த உணர்வு, உலகிலேயே அரிதிலும் அரிதாக வெறும் 400 பேர்களுக்கு இல்லையெனக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்குக் காரணம் ஒருவித அரிதான மரபணுக் கோளாறு. அதன் பெயர் Urbach–Wiethe Disease. சமீபத்தில், அமெரிக்காவில் SM என்ற குறியீடுடன் அழைக்கப்படும் ஒரு பெண்ணை குறித்து ஒரு செய்தி வந்தது. இவரின் அமிக்டாலா (amygdala) சேதமடைந்துவிட்டதால், இவரால் பயம் என்ற ஓர் உணர்வை உடல் முழுவதும் கடத்தவே முடியவில்லை. துப்பாக்கி, கத்தி என எந்த ஆயுதத்தை வைத்து மிரட்டிய போதும், உயிருக்கு ஆபத்தான பல சம்பவங்கள் அரங்கேறிய போதும், இவருக்குப் பயம் என்பதே ஏற்படவில்லை. அவரின் கணவர், அவரைக் கொடுமைப்படுத்தி சாவின் விளிம்புவரை சென்றபோது கூட, இவர் அசைந்து கொடுக்கவேயில்லை. சில சமயம், மூளையிலுள்ள திசுக்கள் அதிக வலுவடைவதால்கூட இந்தக் கோளாறு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சரி, இப்படி பயமில்லாமல் இருப்பவர்கள் சூப்பர்ஹீரோக்கள் போன்று கொண்டாடப்பட வேண்டியவர்கள் தானே? பின்பு ஏன், இதை ஒரு நோயாக, ஒரு குறைபாடாக பார்க்கிறோம்? காரணம், பயம் என்ற உணர்வு, மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா வகை உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமானது. அதுதான்  நம்மை ஆபத்தை நோக்கி நகரவிடாமல் காக்கிறது. தொடர்ந்து வாழவைக்கிறது. எனவே, பயம் மிகவும் அவசியமானது. அதீத பயமும், ஃபோபியாக்களும் தான் பிரச்னையே!

எது எப்படியோ, கட்டுரையை ஆரம்பித்த இடத்திலேயே முடித்துவிடுவோம். பேட்மேன் என்ற கற்பனை சூப்பர்ஹீரோ இரவில் நகரைக் காப்பவன். பேட் எனப்படும் வௌவால் உருவத்தை இவன் தேர்ந்தெடுக்க காரணம் என்ன தெரியுமா? சிறு வயதிலிருந்தே இவனுக்கு வௌவால் என்றால் மிகவும் பயம், அதிலிருந்து விடுபட இவன் தன்னை வௌவாலாகவே மாற்றிக்கொள்கிறான். ஊரையே காக்கிறான். அப்படி நம் பயம் என்னவென்று கண்டறிந்து அதைக் கடந்து செல்ல முயற்சி செய்வோம்!

Thanks to Vikatan! 

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...