Total Pageviews

Monday, February 29, 2016

அவசரம்! அறிவை இழக்க வைக்கும்!

அவசரம்! அறிவை இழக்க வைக்கும்!

எந்த ஒரு செயலையும் நிதானமாக பொறுமையுடன் அறிவுப்பூர்வமாக யோசனை செய்து செயல் படுத்த வேண்டும். அவசரமாக செய்யும் எந்த வேலையும்  ஆக்கப்பூர்வமாகவோ சரியாகவோ இருந்ததில்லை. இதனை பல நேரங்களில் நான் அனுபப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்.


ஒரு நாள் காலை 8.50 மணிக்கு மாதாந்திர மாத்திரைகள் வாங்குவதற்க்காக மருந்து கடை ஓன்றிக்கு சென்றிருந்தேன். அங்கே வாங்கும் மாத்திரைகள் மற்றும் மருந்து பொருட்களுக்கு  15 % தள்ளுபடி உண்டு எனவே காலையில் அதிக கூட்டமாக இருந்தது. இருப்பினும் ஓருவர் எனக்கான மருந்துகளை எடுத்துவிட்டு பில் செய்து கொண்டிருந்தார். பணத்தினை செலுத்தி விட்டு மணியை பார்த்தேன் மணி 9.05 ஆகி விட்டது. காலை 9 மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டுமே நேரமாகி விட்டதே என எண்ணி  சரியான பாதைக்கு பதில் சற்று உயரமான பகுதியில் இருந்து தாழ்வான இடத்தில் காலை வைத்து இடறி விழுந்து  காலில் மாவு கட்டுடன் 6 மாத காலம் அவஸ்த்தை பட்டேன். அவசரமானது! எனது அறிவை இழக்க வைத்து விட்டது !

அதே போல் ஒரு நாள் காலை 8.30 மணிக்கு அவசரம் அவசரமாக இரு சக்கர வாகனத்தை சர்வீஸ் செய்வதற்க்கு கொடுத்துவிட்டு 9 மணிக்குள் அலுவலகம் சென்றுவிட வேண்டும் என வேகமாக சென்று சர்வீஸ் செய்யும் நபரிடம் என்ன என்ன வேலைகள் செய்ய வேண்டும் என சொல்லிக்கொண்டு இருந்தேன். சார், உங்கள் சர்வீஸ் புத்தகத்தை தாருங்கள் என்றார். நானோ சர்வீஸ் புத்தகத்தை எடுத்து செல்லவில்லை, காரணம் அவசரம் ! அவசரமானது! எனது அறிவை இழக்க வைத்து விட்டது !  சர்வீஸ் புத்தகத்தை வீட்டில் வைத்து சென்றுவிட்டேன் !  பிறகு வேறு ஒரு நாள் சென்று சர்வீஸ் செய்தேன்.

எனவே நண்பர்களே நாளை என்ன வேலை செய்ய வேண்டும், அதற்க்கு தேவையான ஆவணங்கள், பொருட்கள் என்னென்ன போற்றவற்றை முதல் நாளே எடுத்து வைக்க பழகிக்கொண்டேன் நண்பர்களே !

 எனவே எந்த ஒரு செயலையும் நிதானமாக பொறுமையுடன் அறிவுப்பூர்வமாக யோசனை செய்து செயல் படுத்த வேண்டும்.

sithayan sivakumar, Madurai

சருமத்தில் உள்ள முடியை நீக்கும் குளியல் பவுடர் !

சருமத்தில் உள்ள முடியை நீக்கும் குளியல் பவுடர் !


இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பவுடர்...

பயத்தம் பருப்பு - அரை கிலோ,
சம்பங்கி விதை - 50 கிராம்,
செண்பகப்பூ-50 கிராம்,
பொன் ஆவாரம் பூ - 50 கிராம்,
கோரைக்கிழங்கு - 100 கிராம்.

இவற்றை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும்போது இந்தப் பவுடரை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thanks to Rani Krishna

காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?

காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கைகாய்

4. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

5. தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

6. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

7. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

8. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

9. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

10. பீர்க்கங்காய் : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது

11. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

12. கருணை கிழங்கு: முழுவதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள்புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

13. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

14. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

15. கத்திரிக்காய்: தோல் soft ஆக இருப்பது போல் பார்த்து வாங்கவும்

16. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

17. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

18. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

19. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

20. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு. நல்ல காய்

21. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்.

22. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

Thanks to Rani krishna

குங்குமப்பூ - இது தொண்ணூறு வகையான நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது

குங்குமப்பூ- இது தொண்ணூறு வகையான நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அடையாளம் கண்டு அவற்றை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.



சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும், படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி நம்பப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் பெண்கள் தங்களது கற்பகாலங்களில் காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை கலந்து தொடர்ந்து இரவு வேலையில் குடித்து வந்தால் பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதாகும்.

இது இன்றல்ல நேற்றல்ல சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள மக்களிடையே இந்த பழக்கம் ஒருவித நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டு வருகிறது, தமிழர்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குங்குமப்பூவை பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அட அவ்வளவு ஏன் வடமேற்கு இரானில் சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு வரையப்பட்ட ஓவியம் ஒன்று சமீபத்தில் கண்டறியப்பட்டது, அதில் குங்குமபூவின் பயன்பாடுகள் குறித்து வரையப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன், மக்கள் எத்தனை ஆண்டுகளாக இந்த குங்குமபூவை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்று.

சாப்ரன் குரோக்கஸ் (Saffron Crocus) என்ற தாவரத்தின் பூவிலுள்ள சூலகதண்டு, மற்றும் சூலகமுடிகள் ஆகியவை தனியே பிரிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்பட்டு பின்பு அதனை பொடியாக்கித்தான் குங்குமபூவை தயாரிக்கிறார்கள். இதனுடன் வேறு எந்த பொருளும் சேர்க்கபடுவதில்லை. தூய்மையான குங்குமபூ செம்மை கலந்த சிவப்பு நிறம் கொண்டது, இதனை காய்ச்சிய பாலில் கலக்கும் போது கலக்கப்பட்ட பால் தங்க நிறத்தை அடைகிறது. ஒரு கிராம் குங்குமபூ தயாரிக்க சுமார் நூற்றிஐம்பது பூவிலிருந்து நூற்றிஎழுபத்தைந்து வரையிலான சாப்ரன் குரோக்கஸ் பூக்கள் தேவைப்படும், ஆகையால்தான் நறுமண பொருட்களில் குங்குமபூ காலம்காலமாக விளையுயர்ந்த பொருளாக உள்ளது.

சரி உண்மையில் குங்குமப்பூவை கற்பஸ்திரிகள் பயன்படுத்தி வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்றால் அதில் துளி கூட உண்மையில்லை என்பதே உண்மை. குழந்தை சிவப்பாக பிறப்பதும், கருப்பாக பிறப்பது நமது பரம்பரையினர்களின் ஜீன்கள் சம்மத்தப்பட்ட விஷயம் தானே தவிர இதில் குங்குமபூவிற்க்கு எந்த பங்கும் இல்லை, ஆனால் இதனைகாட்டிலும் பல எண்ணற்ற பயன்களை கர்ப்பிணிப்பெண்களுக்கு தரக்கூடியது குங்குமபூ.

குங்குமபூவின் சூலகதண்டுகளும் சூலகமுடிகளும் இரெண்டு வகையான வேதிப்பொருட்களை உள்ளடக்கியது. ஒன்று குரோசின் மற்றொன்று பிக்குரோசின். குரோசின் என்ற வேதிப்பொருள் நிறமியாக செயல்படுகிறது இதுதான் குங்குமபூ கலக்கப்பட்ட உணவுப்பொருள் செம்மை கலந்த தங்கநிறம் அடைவதற்கு காரணம் ஆகும். மற்றொரு வேதிப்பொருளான பிக்குரோசின் ஒரு கிருமி நாசினியாகும். இது தொண்ணூறு வகையான நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அடையாளம் கண்டு அவற்றை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது, அதோடு மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. ஆகையால் கர்பிணிப்பெண்கள் குங்குமபூவை பாலுடன் சேர்த்து பருகிவந்தால் குழந்தை கர்ப்பப்பைகளில் வாழும் காலத்தில் கர்ப்பபைகளில் நிலவும் வெப்பம் குறைக்கப்பட்டு கர்ப்பபைகளின் வழியே பரவும் நோய்களின் தாக்குதல் இன்றி குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் சூழலை ஏற்படுத்துகிறது.

குங்குமபூவின் மருத்துவ குணங்கள் பற்றி சமீபத்தில் ஆராய்ந்த மருத்துவக்குழு ஒன்று, குங்குமபூ மாலைக்கண் நோயின் தாக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது என்று தெரிவித்துள்ளது. மேலும் பிரகாசமான வெளிச்சத்தின் நேரடிதாக்குதலால் கண்களில் உண்டாகும் அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குங்குமபூவை பெண்கள் மட்டுமல்ல எல்லோரும் எல்லா காலங்களிலும் அவ்வப்போது பயன்படுத்தி வந்தால் எண்ணற்ற நோய்களின் தாக்குதல்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்...

Saturday, February 27, 2016

எந்த விலங்குக்கும் தொப்பையில்லை ..........................

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து


“சீ மிருகமே!”/
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே
கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்
கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை
எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்
அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்
இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு
மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
நீ மாண்டால் …
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
**
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது


” சீ மனிதனே !”


Thanks to Srinivasan Krishnamoorthy

திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:

திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:
=============================

திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம்.மணம் மலரினின்று தோன்றுவது.திரு என்பது இங்கு அடைமொழி.மணத்தை நுகர்வோன் மணமகன்.மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:
=====
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்கு தாலி என்ற பெயர் வந்தது.தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்
தாலி செய்ர்.

அருகு-மணை எடுத்தல்:
==================

தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்துக் கூறுவர். முற்காலத்தில் அருகம் புல்லை மணமக்கள் மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ
வாழ்வீர் என்று வாழ்த்துவர்.

"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம்.இதன் உட்பொருள் அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும். மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழை பெய்தால் மீண்டும் தழைத்து வளரும்.இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.

பிற்காலத்தில் அருகுதூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத்தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள்
ரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.

ஆயினும் மணமக்கள் மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

முகூர்த்தக்கால் நடுதல்:
========================

முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர்.ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல்:
========================

மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல்.அதாவது அரச மரத்தின் கிளையையும் பேய்க் கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச்செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும் மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும்,விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்து போய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச் செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:
============================

கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன.உலக வாழ்விற்கு இரு கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

திருமண வேள்வி:
==============

அத்தி,ஆல்,அரசு,மா,பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும்.மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூடத் தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக்கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள்
சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

பாலிகை இடுதல்:
=============

நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று.அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்:
==========================

இது மிகத் தொன்மையான பழக்கமாகும்.கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன் வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள் என்பதே இதன் பொருள்.

அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல்
போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.

சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:
============================

மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச் சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும் மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப் பூவுலகைக் குறிப்பதாகும்.

வெற்றிலைபாக்கு மாற்றுதல்:
=======================

மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்கு கொடுக்கின்
மகனுக்கு என இருவிட்டாரும் கூறி ஏ ழு பாக்கு கள் ஏழு வெற்றிலைகள் வைத்து மாற்றுதல் எழுவகை பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலர் முன்னிலையில் உருதியளிப்பதாகும் .

உறவின் முறை விளக்கம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~

கணவன், கொழு
ந்ன்
~~~~~~~~~~~~~~~~~~
கண் அவன் பெண்ணுக்கு கண் போன்றவள் என்பதாகும் .நம்மை நல்வழிசெல்லும் கண்ணைபோல் பெண்ணை நல்வழி படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவள் கணவன் என்பதாகும்
கொழுந்ன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும் .கோடி படர்ந்து உயர்வதற்கு கொழு கொம்பு எப்படி இன்றி அமையாததோஅதே போல் பெண்மைக்குப் பாதுகாவளுக்குரிய ஆண்மகன் என்பதாகும்

மனைவி
~~~~~~~~

மனைவி துணைவி இல்லாள் இச்சொற்கள் இல்லநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனாவாகும் மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்

சைபர் க்ரைம்-டெக்னாலஜியை மிக மிக மிகக் கவனமாகப் பயன்படுத்துவதுதான்...

உங்கள் அந்தரங்கம் ஊருக்கே வெள்ளிச்சம் திடுக்கிட வைக்கும் டெக்னாலஜி பயங்கரம் - ஒரு எச்சிரிக்கை பதிவு !

சென்னையைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தலைவிக்கு, தெரியாத எண்ணில் இருந்து தொடர் மொபைல் அழைப்பு. ‘நீங்க இன்னிக்கு ரெட் கலர் புடவையில சூப்பரா இருந்தீங்க’, ‘வெள்ளை சுடிதாரில் நீங்க தேவதை மாதிரி இருந்தீங்க’, ‘இன்னிக்கு ஏன் டல்லா இருக்கீங்க?’, ‘ஒருநாள்கூட உங்களைப் பார்க்காம என்னால் இருக்க முடியல’ என்று அந்த எண்ணில் வழிந்த ஆண் குரல் இவர் நிம்மதியைப் பறிக்க, கணவரிடம் விஷயத்தைச் சொல்லி, தம்பதி காவல் நிலையம் சென்றனர். சைபர் க்ரைம் செல்லில், அவர்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் அட்டெண்டர் அவன் என்பது தெரிய வந்தது. குற்றவாளி கைதானான். தொழில்நுட்ப வளர்ச்சியால், பெண்கள் கண்ணுக்கே தெரியாத காமக் கள்வர்களும் எளிதில் தொடர்புகொள்ளும் வெளிக்கு வருகிறார்கள்!’’

- இந்த விஷயத்தை நம்மிடம் பகிர்ந்தவர், ‘நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ்' எனும் தனியார் நிறுவனத்தின் கூடுதல் பொது இயக்குநர் அமர் பிரசாத் ரெட்டி. இங்கே, தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதுகாப்பின்மையை, இன்னும் பல உண்மைகளுடனும், உதாரணங்களுடனும் விளக்குகிறார். ஒவ்வொன்றும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அனுபவம்!

எங்கே பிரைவஸி ?

‘‘நம் எண்ணில் இருந்து இன்னொரு எண்ணுக்குப் பேசும் அழைப்போ, அனுப்பும் குறுஞ்செய்தியோ, பகிரும் புகைப்படமோ... நமக்கும் அந்த நபருக்கும் இடையே மட்டுமேயான தகவல் தொடர்பு என்று நினைத்தால், அது முட்டாள்தனம். நம் எண்ணில் இருந்து மற்றொரு எண்ணுக்குத் தொடர்புகொள்ளும் செய்தி, முதலில் சம்பந்தப்பட்ட நெட்வொர்க்கின் தரவுதளத்துக்குச் செல்கிறது. அங்கிருந்துதான் அது, அந்த எண்ணுக்குச் செல்கிறது. அந்த நெட்வொர்க்கில் பணிபுரியும் நபர் நினைத்தால், அதை உலகின் கண்களுக்குத் தெரியச் செய்யலாம். அழைப்பு, மெசேஜ், சாட் போன்ற தன் வாடிக்கையாளர்களின் நெட்வொர்க் தகவல்களை, அரசாங்கம் கேட்டால் ஒழிய, தனியாருக்கு எந்த நெட்வொர்க் நிறுவனமும் வழங்கக்கூடாது என்பதுதான் விதி. ஆனால், தவறு செய்ய நினைப்பவர்கள் யாரும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.

தொழில்நுட்பத் தகவல் திருட்டில் தடைசெய்யப்பட்ட கருவிகள் இன்று கள்ளப் புழக்கத்துக்கு வந்துவிட்டன. இதன் மூலம், இரு மொபைல் எண்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகள் தொடங்கி, அந்த மொபைல்களில் உள்ள தகவல்கள் வரை அனைத்தையும் எளிதாகத் திருட முடியும். இப்போது சொல்லுங்கள்... பிரைவஸி என்ற ஒன்று இங்கிருக்கிறதா என்ன?!

ஹைடெக் திருட்டு!

‘கீ -லாக்கர்’ என்று சொல்லக்கூடிய மிக மிகச் சிறிய வைஃபை டிவைஸ் ஒன்றை, துப்புரவுப் பணியாளர் மூலம் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ கணினியின் கீ-போர்டில் பொருத்திவிட்டார்கள் மோசடி நபர்கள். மறுநாள் காலை சி.இ.ஓ தன் கணினியை ஆன் செய்ய, அந்த அலுவலகத்துக்கு வெளியே ஒரு காருக்குள் இருந்தபடி, அவர் தன் கணினியில் டைப் செய்யும் ஒவ்வொன்றையும் தாங்கள் பொருத்திய வைஃபை டிவைஸ் உதவியோடு இங்கே தங்கள் கணினியில் பார்த்தது அந்த திருட்டுக் கும்பல். உடனே அவரது தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, ‘சார்... உங்க நெட் பேங்கிங் பாஸ்வேர்டை உடனே மாத்திடுங்க... ஃபார் செக்யூரிட்டி பர்பஸ்’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள். அவரும் உடனே வங்கி வலைதளப் பக்கத்துக்குச் சென்று யூசர்நேம், பழைய பாஸ்வேர்டு, புதிய பாஸ்வேர்டு போன்றவற்றை டைப் செய்ய.. அது அப்படியே இவர்களது கணினியில் தெரிய... அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த அனைத்துப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு தப்பிவிட்டது திருட்டுக் கும்பல். ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-வின் செக்யூரிட்டியே இந்த நிலையில் இருக்கும் போது, நம் கணினியின் செக்யூரிட்டியை என்ன வென்று சொல்ல?!

`வலை' குழந்தைகள்!

இன்று குழந்தைகளுக்காக ஆன்லைனில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிஃப்ட் காம்படிஷன், மதர் சர்ப்ரைஸ் கிஃப்ட் போன்ற அந்தப் போட்டிகளில் ஈர்க்கப்பட்டு பரிசுக்காக விளையாடும் குழந்தைகள் மூலமாகவே, அவர்கள் நண்பர்களையும் அங்கு வரவழைக்கிறார்கள். ‘அப்பா, அம்மா விவரங்கள், தொடர்பு எண்கள், ஸ்கூல், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ டைம் ஹாபி, அவுட்டிங்’ போன்ற தகவல்களை கேட்டுப் பெற்று, அவர்கள் பெற்றோரின் தொழில் சம்பந்தமான பிசினஸ் விளம்பரங்களை அவர்களுக்கு அனுப்புவது தொடங்கி, குழந்தை கடத்தல் வரை திட்டமிடப்படுகிறது என்பது அதிர்ச்சியான உண்மை.

நம் பிள்ளைகளை இணையத்தில் இருந்தும், இணையத்தால் விஷமாகிப் போன சகாக்களிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டிய நம் பொறுப்பைத்தான் அதிக மாக்கிக்கொள்ள வேண்டும்.

எச்சரித்தாலும்...

ஒரு கல்லூரிப் பெண்ணின் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் 4 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ‘இவர்கள் அனைவரையும் உனக்குத் தெரியுமா’ என்றால், அசட்டை யாக தோளை உலுக்குகிறாள். தான் நான்காயிரம் பேரால் கண்காணிக்கப்படுவதில், அதில் உள்ள அயோக்கியர் களின் எண்ணிக்கையை, அவர்கள் அவளுக்கு விளைவிக்கக்கூடிய ஆபத்தையெல்லாம் அவள் சிந்திக்கவில்லை. ‘ஜஸ்ட் ஃபார் ஃபன்’ என்கிறாள்... ஒருநாள் வீட்டில் யாருமில்லாதபோது, ‘சிங்கிள் அட் ஹோம்...’ என்று ஸ்டேட்டஸ் தட்டிய ஒரு பெண்ணை, அவள் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் இருந்த ஓர் அந்நியன் சீரழித்த கதை தெரியாமல்.

ஆளே இல்லை!

ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணைப் பற்றிய ஆபாச, அவதூறு வீடியோ பரவினால், அதை உடனடியாகத் தடுக்க புகார் அளிக்க, இந்தியாவில் ஒரு நபரைக்கூட ஃபேஸ்புக் நிறுவனம் நியமிக்கவில்லை. அயர்லாந்தில் உள்ள ஃபேஸ்புக் மையத்தில்தான் புகார் அளிக்க முடியும். அதற்கு முன்பு நம் நாட்டு நீதிமன்றத்தில் ஆர்டர் வாங்க வேண்டும். அதை அவர்கள் நாட்டு நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இதையெல்லாம் செய்துமுடிக்க குறைந்தது 15 நாட்கள் ஆகும். சில நிமிடங்களில் பல்லாயிரம், பல லட்சம் ஷேர்களை நிகழ்த்தும் நம் ‘நல்லவர்கள்’ தேசத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கையே அந்த வீடியோ வால் முடங்கிவிடும். இதை எல்லாம் உத்தேசித்துதான், ‘எங்கள் நாட்டுக்குள் ஃபேஸ்புக்கே வரக்கூடாது’ என்ற முடிவெடுத்த சீனா, இன்றுவரை ஃபேஸ்புக்கே இல்லாத நாடாக இருக்கிறது.

ஆபாச வீடியோக்கள்... அரசின் நடவடிக்கை என்ன?

வலைதளங்களைவிட, செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்கள் தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். அரசு நினைத்தால், நெட்வொர்க் நிறுவனங்களின் கடி வாளத்தை இறக்கி, ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதற்கு தடை விதிக்கலாம், தடுக்கலாம். ஆனால், அதிக மெமரி கொண்ட ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்வதன் மூலம், அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்வொர்க் நிறுவனங்கள், அதில் ஒரு பங்கை அரசுக்கும் கொடுத்து அதை ‘ஆஃப்’ மோடில் வைத்திருக்கின்றன. ஆக, நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் அரசும் மறைமுகமாக துணை போகிறது என்பதே உண்மை.''

போதிய வசதிகள் இல்லாத சைபர் க்ரைம்!

இணைய அட்டூழியங்களுக்குத் தண்டனை கொடுக்க காவல்துறையில் சைபர் க்ரைம் எனும் பிரிவு இருக்கிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்ப விவரங்கள் தெரிந்தவர்கள் இங்கே போதுமான அளவில் பணியமர்த்தப்படுவதில்லை. 7 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் தற்போது ஆயிரத்தில் மட்டும் சைபர் க்ரைம் போலீஸார் இருந்தால், பிரச்னைகளை எப்படி விரைந்து முடிக்க முடியும்?

ஆக, சமூக வலைதளங்களுக்கான கடிவாளத்தின் சாத்தியத்தன்மை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. பாதுகாப்பு எல்லைக்குள் நம்மை நிலைநிறுத்தும் பொறுப்பும், நம் கைகளிலேயே! எனவே, டெக்னாலஜியை மிக மிக மிகக் கவனமாகப் பயன்படுத்துவதுதான்... நமக்கிருக்கும் ஒரே பாதுகாப்பு!

பாதுகாப்பு டிப்ஸ்!

இ-மெயில் பாஸ்வேர்டு, டெபிட் கார்டு பாஸ்வேர்டு போன்றவற்றை பொது இடத்தில் அலைபேசியில் சொல்வது, செல்லில், மெயிலில் பதிவது வேண்டாம். எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் சிக்கலான பாஸ்வேர்டாக வைப்பதுடன், அடிக்கடி அதை மாற்ற வேண்டும்.

மொபைலில் தேவையற்ற ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம். சில ஆப்ஸ்கள் மிக எளிதில் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மொபைலில் உள்ள தகவல்களைத் திருடி அனுப்பும்.

புகைப்படங்கள் மார்ஃபிங்கால் சீரழிக்கப்படலாம் என்பதால், சமூக வலைதளங்களில் புகைப்படங் களை பதியாதீர்கள். பெர்சனல் விஷயங்கள் பற்றிய ஸ்டேட்டஸ் பதியாதீர்கள்!

மால், தியேட்டர், பொருட்காட்சி போன்ற இடங்களில், ‘குலுக்கல் பரிசு’ என்று உங்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்யச் சொல்லும்போது, தவிர்த்துவிடுங்கள்.

ஹோட்டல், மால், தியேட்டர் என்று இலவச வைஃபை இணைப்பு உள்ள இடங்களில் மிகக் கவனமாக இருங்கள். இதுபோன்ற இடங்களில் வைஃபையை ஆன் செய்தாலே போதும், உங்கள் கைபேசியில் உள்ள தகவல்கள், புகைப்படங்கள் அனைத்தும் திருடப்படலாம்.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...