Total Pageviews

Monday, April 2, 2012

தமிழகத்தில் மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும்

தமிழகத்தில் மின்சாரம் குறைவாக இருக்கிறது என்பது பொய்!" என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம். இவர், ஹரியானா மாநில மின்சார வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்து, பல முன்னெடுப்புகளை எடுத்துச் சென்றவர்.

"
மின்சாரம் என்பதும் ஒரு பண்டமாற்றப் பொருள் போன்றதுதான். உற்பத்தி செய்தால் மட்டும் போதுமா? அதை எப்படிச் சரியாக விநியோகித்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதும் தெரிய வேண்டும். எந்த அடிப்படையில் இவர்களுக்கு இன்னும் பல மெகாவாட் மின்சாரம் தேவை என்று கோரிக்கை வைக்கிறார்கள்?

16,000
மெகாவாட் மின்சாரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான தேவை என்ன? அரசுத் துறையில் இருந்து இதுவரை யாராவது ஆராய்ந்து இருக்கிறார்களா? இல்லை.

இப்போது இருக்கும் மின்வெட்டைச் சமாளிப்பதற்கு மேலும் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பது சரியான தீர்வாக அமையாது. அடிப்படையாகச் சில விஷயங்களைச் சீர்திருத்தினால் ஓரளவு சமாளிக்க முடியும்" என்றவர், அரசுக்கு முன்வைக்கும் 10 யோசனைகள்:

1.
மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு துறைக்கும் வேறு வேறு தேவைகள் இருக்கின்றன. இந்தத் துறைகளில் அதிக மின்சாரம் தேவைப்படுவது தொழில் துறைக்கும், விவசாயத்துக்கும்தான்.

தொழில் துறையை எடுத்துக் கொண்டால், ஒரு ஷிப்ட், இரண்டு ஷிப்ட், மூன்று ஷிப்ட் மற்றும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கக் கூடிய தொழிற்சாலைகள் என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில் சுமார் 70 சதவிகித தொழிற்சாலைகள் ஒரே ஷிப்ட்டில் இயங்குபவைதான். ஆனால், மூன்று ஷிப்ட்டில் இயங்குபவையாகக் கணக்கு காட்டுகின்றன. இதை முதலில் அரசு கெடுபிடியுடன் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டாலே பாதி பிரச்னைகள் குறையும்.

2.
மின் விநியோகம் தேவைப்படுகிற தொழிற்சாலைகள், வீடுகள், மருத்துவ மனைகள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் ஒரே வரிசையில்தான் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதைத் தவிர்க்கலாம். 24 மணி நேரமும் மின்சாரம் தேவைப்படுகிற வீடுகள், மருத்துவமனைகள் போன்றவற்றை ஒரே வரிசையிலும், மற்ற துறைகளுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் மின்சாரம் வழங்குகிற வகையிலும் வரிசைப்படுத்தி வைக்கலாம்.

3. 'தேவையின் அடிப்படையில் ஆற்றல் மேலாண்மை' என்ற கருத்தின்படி நாம் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் விநியோக நடைமுறை என்பது 'ஆர்பிட்ரரி ரேஷனிங்' எனும் மனம்போன போக்கில் விநியோகிக்கப்படுவதாகத்தான் இருக்கிறது. இந்தத் துறைக்கு இவ்வளவு, அந்தத் துறைக்கு இவ்வளவு என்று சொல்லி தேவையைப் பார்த்து மின் விநியோகம் செயல்படுத்தப் படுவதில்லை. கேட்கும் நிறுவனங்களுக்கு எல்லாம் இஷ்டத்துக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றன என்பதுதான் இன்றைய நிலைமை.

4.
தமிழகத்தில் எல்லா லைனிலும் 24 மணி நேரமும் மின் விநியோகம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மின்சாரம் தேவைப்படாத நேரங்களில் அந்த லைனில் உள்ள மின் விநியோகத்தை நிறுத்தி வைக்கலாம்.

5. மானியங்களை நிறுத்த வேண்டும். அல்லது, அதைக் குறைக்க வேண்டும். இதுதான் இன்று தமிழக மின்சார வாரியத்தையே குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. இலவச மின்சாரம், குறைந்த விலையில் மின்சாரம் என்பது எல்லாம் யாருக்காகக் கொடுக்கப்பட்டது? விவசாயி களுக்கும் ஏழை மக்களுக்கும் தானே? ஆனால், இந்த மானியங்களைப் பெரு நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன!

6.
கடந்த 2003-ல் ஏற்படுத்தப்பட்ட மின்சாரச் சட்டம் முழுவதுமாக செயல் படுத்தப்படவில்லை. அந்தச் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிற முறைப்படி எந்தெந்த துறைக்கு எத்தனை சதவிகித மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று கணக்கிடப் படவில்லை.

7.
பரவலான முறையில் மின் உற்பத்தி செய்தல். அதாவது, மின்சாரத்தை உற்பத்தி செய்ய நீர், அனல் என்ற மரபுசார்ந்த வழிகளை மட்டும் யோசிக்காமல், சூரிய சக்தி, காற்றாலை போன்ற மரபுசாரா மாற்று எரிசக்தி மூலம் மின் உற்பத்தியைப் பெருக்குவதையும் சிந்திக்க வேண்டும். இன்றைய தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்ததும், 'சூரிய சக்தி மூலம் மின்சாரம்' என்று சொன்னார். இதோ ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. அதில் என்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது இப்போது வரை தெரியவில்லை.

8.
மின் கடத்தப்படுகிற போது ஏற்படும் மின் இழப்பைக் குறைக்க வேண்டும். 'Transmission & Distribution Loss' என்பது மிகவும் தவறான கருத்து. 'டிரான்ஸ்மிஷன்'னின்போது ஒன்று அல்லது இரண்டு சதவிகித மின் இழப்பு ஏற்படத்தான் செய்யும். அது ஹை-வோல்டேஜ் ஆக இருப்பதால் அதை யாரும் திருடவும் முடியாது. மாறாக, 'Distribution & Delivery Loss' என்பதுதான் சரியாக இருக்கும். விநியோகம் மற்றும் இறுதிப் பயனாளியான நுகர்வோர்க்கு மின் வழங்குதல் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. அதைச் சரிசெய்யவும் இன்று தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.

9 '
இந்தப் பொருள் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும்' என்று குறிப்பிடும் 'Energy Efficiency Labelling' முறை கட்டாயமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பொருட்களைப் பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

10.
ஒவ்வொருவர் வீட்டிலும் 'ப்ரீபெய்டு மீட்டர்' பொருத்த அறிவுறுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்யும்போது, ஒவ்வொரு நுகர்வோர்க்கும் தான் எத்தனை யூனிட் மின்சாரம் பயன் படுத்துகிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதுடன், அதைச் சிக்கனமாகவும் பயன் படுத்தத் தொடங்குவர்.

இந்தப் பத்து விஷயங்களைச் செய்தால் இப்போதிருக்கும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்!" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார், தேவசகாயம்!

Sunday, April 1, 2012

எலும்பு தேய்மானம் ஏற்ப்படுத்தும் நோயின் தீவிரம்


உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. மனிதன் தன் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அதனை உபயோகப்படுத்தி கொள்ளும் வகையில் கடவுள் நமக்கு அதனை உருவாக்கியுள்ளார். இந்த அனைத்து எலும்புகளும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு தனது பங்கை செவ்வனே செய்துவருகிறது.  
  
    நாம் இந்த மொத்த எலும்புகளையும்  பாதுகாப்பற்ற  நாம் எடுத்து கொள்ளும் உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மிக முக்கிய ஒன்றாகும். இந்த மொத்த எலும்புகளும் உடம்பில் உள்ள பகுதிகளுக்கு ஏற்ப தங்களை வடிமைத்து கொண்டு மனிதனுக்கு உடல் கட்டமைப்பை கொடுக்கிறது. எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் உள்ள மிக உறுதியான பகுதிகளாகும். மற்ற உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகள் மிக முக்கிய பணிய செய்து வருகின்றன.அதாவது எடுத்துக்காட்டாக மூளைஇருதயம்,  சிறுநீரகம்,  சுவாசப்பை போன்ற பகுதிகள் எலும்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட கூடுகளில் மிக பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன.

    அதனால் தான் மனிதன் எலும்புகள் மட்டும் சேர்ந்தவற்றை மனித எலும்பு கூடு என்கிறோம். அதாவது மூளை மண்டை கூட்டிற்குள்ளும்இருதயம்சுவாசப்பை நெஞ்சு கூட்டிற்குள்ளும்   வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இது போன்ற பாதுகாப்புகளை நமக்கு அளிக்கின்ற எலும்புகள் விபத்துக்களின் போது சில நேரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உடைவதை மருத்துவர்கள் பிராக்ட்ச்சர்(Fracture) என்கிறார்கள். இதனை பெரும்பாலும் குணப்படுத்த நவீன மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை எளிதில் சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும்.

    இதனை போன்று இன்னும் பல்வேறு நோய்கள் மனித எலும்புகளை பாதிக்கின்றன. அதில் சமீப காலமாக அனைவரையும் பயமுறுத்தி வரும் பாதிப்பு எலும்பு தேய்மானம். அதாவது இதனை ஆங்கலத்தில் மருத்துவர்கள் osteoporosis என்பார்கள். இதை ஒரு நோய் என்பதை விட குறைபாடு என்பது மிக பொருந்தும். அதாவது மனிதன் முதுமை அடையும் போது ஏற்படும் உடல் மாற்றங்களில் இந்த எலும்புகளும் சேதம் அடைய தொடங்கிவிடுகின்றன. அதாவது இதனை நாம் நம் கண்களால் காண முடியாது. மிக மெதுவாக தேய தொடங்கும் எலும்புகள் பிற்காலத்தில் ஏற்ப்படுத்தும் நோயின் தீவிரம் ஆளைக் கொல்லும் வலிமை உடையது.

    அதாவது முதுமையில் பொதுவாக நாட்ப்பதை (40) வயதை தொடும் பொழுது மனித எலும்புகள் தனது வலுவை இழக்க தொடங்கிவிடுகின்றன. இதனை தான் மருத்துவர்கள் எலும்பு தேய்மானம் என்று பொதுவாக விளக்கம் அளிக்கிறார்கள் .

இது பொதுவாக பெரும்பாலும் பெண்களை அதிகமாக அவதிகுள்ளாக்கிவிடுகிறது. பெண்களில் 40 வயதில் முதல் இந்த நோயின் தாக்கம் ஏற்பட தொடங்கி அவர்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திகிறது.

    எலும்புகளுக்கு தேவையான முக்கியமான ஒன்று கால்சியம் என்ற தாது உப்பு. இந்த தாது உப்பை எலும்புகள் நாம் உண்ணும் உணவில் இருந்து எடுத்துகொள்ளும் தன்மை கொண்டுள்ளது. இந்த குணம் பொதுவாக நாம் முதுமையை நெருங்கும் பொழுது மெதுவாக மாறியும் மறைந்து போய்விடுவதால் எலும்பு தேய்மானம் வருகிறது. அதாவது முக்கியமாக பெண்களில் உதிரபோக்கு நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்ப்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள்  வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது.

இதனால் ஏற்ப்படும் முக்கிய சில பக்கவிளைவுகள்

1 . எலும்பு முறிவு

2 . மூட்டு வலி

3 . மூட்டு வாதம்

4 . கழுத்து எலும்பு தேய்மானம்

5 . முதுகு எலும்பு தேய்மானம்

6 . முதுகு வலி

7 . உடல் சோர்வு

8.  அசதி

9 . முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல்

10 .  நடையில் தளர்வு
  

    இது போன்ற பக்க விளைவுகளால் பெண்கள் தனது 40 வயது முதல் மிகுந்த சிரமதிர்க்குள்ளகிறார்கள். எல்லாம் நோய்களையும் நம்மால் குணப்படுத்துவதை  விட எளிதாக தடுக்க முடியும் என்பது எல்லோராலும் அறியப்பட்ட உண்மை.


தடுப்பது ஒன்றே சரியான தீர்வுஅதை எப்படி செய்வது?

1 . எலும்புகள் தன்மையை அதன் உறுதியை பாதுகாக்க தினமும் உடற்பயற்சி செய்வது  மிக முக்கிய தடுப்பு முறையாகும்.

2 . வலி வந்து விடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள் இது மிகவும் தவறானது. இது நோயின் வீரியத்தை இன்னும் அதிக படுத்தும். அதாவது குறைந்தது ஒரு மணி நேரம் நடை பயற்சி செய்வது மிக முக்கியம்.

3 . நடை பயற்சி செய்வதை முறையாக செய்வது நல்லதுஅதாவது சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றை தவிர்க்கலாம்.

4 . மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க செய்யுங்கள்.

5 . குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுவது அவசியம். அதாவது இதன் மூலம் எலும்புகளுக்கு தேவையான  வைட்டமின் டி தோல் மூலம் உறிஞ்சப்படும்.

6 . கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால்கீரைதானியங்கள் போன்றவற்றில் தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

7 . பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள்.

8 . சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள்.

9 . காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லதுஇது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.

10 . மீன்களை தினம்தோறும் சேர்த்து கொள்வது நல்லது.

11 . புகைபிடிப்பதுமது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றில்லும் தவிர்ப்பது நல்லது.

12 . பால் இரவில் அதிகம் எடுப்பதை விட மாலை அல்லது காலை வேளைகளில் எடுத்து கொள்வதால் தூக்கம் தடைபடுவதை தவிர்க்கலாம்.

13. கால்சியம் இப்பொழுது மாத்திரை வடிவில் கிடைக்கிறதுஇதனை  உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துகொள்வது நல்லது.

     முதுமை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்றுஇதனை நாம் சரி செய்து கொள்ள மேலே சொன்ன அறிவுரைகளை பின்பற்றுவது மூலம்  எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இது போன்ற பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.



-செந்தில் குமார்

Friday, March 23, 2012

பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன் மாதிரியாக விளங்க வேண்டும்.



குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போலச் செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புவது போல வளரவேண்டும் என்றும் நினைக்கின்றனர். குழந்தைகள் நமது கையில் இருக்கும் களிமண் போல. அதை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வளைக்க முடியும். அதற்கு முக்கியமான கீழ்க்கண்ட பத்து விஷயங்களைக் உற்று நோக்கவேண்டும். 

1) பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன் மாதிரியாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள் வாங்கியே குழந்தை வளரும். தினமும் தன் தந்தையிடம் பணப்பையைக் கேட்டு அடம்பிடிக்கும் ஒரு குழந்தையிடம் தந்தை பையை தூர எறிவது போல நடித்துக் காட்டுவது வழக்கம். இதை உற்றுநோக்கி வளர்ந்த குழந்தை. ஒரு நாள் தொடர் வண்டியில், பயணம் சென்று கொண்டிருந்தபோது தந்தையின் பணப்பையை எடுத்து சன்னல் வழியே எறிந்து விட்டது.

குழந்தைகள், பெற்றோரின் செயல்களை உள்வாங்கிச் செயல்படும் என்பதற்கு இந்தச் சிறு நிகழ்வை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். குழந்தைகளுடன் அமைதியாகவும், தெளிவாகவும், அன்பாகவும் பேசுங்கள். குழந்தைகளும் அதையே பின்பற்றும். குழந்தைகளிடம் நீங்கள் சினத்துடனும் எரிச்சலுடனும் பேசினால் குழந்தைகளும் அவற்றையே கற்று வளரும்.

2) குழந்தைகளின் செயல்கள் உங்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதை அமைதியாகவும், தெளிவாகவும் அவர்களுக்கு உணர்த்துங்கள். மூன்று வயதான ஒரு குழந்தை உங்கள் இடத்திலிருந்து உங்கள் மனநிலையைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தைப் பெற்று விடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். "நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் தொந்தரவு செய்யாமல் போய் விளையாடு" என்று சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் மனநிலை அந்தச் சிறு வயதிலேயே குழந்தைக்கு வந்து விடுகிறது.

3) குழந்தைகள் செய்யும் சிறு சிறு செயல்களுக்கும் அவர்களைப் பாராட்ட வேண்டும். ஆறுமுறை பாராட்டினால் ஒரு முறை தவறைச் சுட்டிக் காட்டலாம் என்னும் கணக்கு சிறந்தது என்கின்றனர் வல்லுநர்கள். கூடுதலான எதிர்மறைக் கருத்துக்கள் குழந்தைகளைப் பாதிக்கும். ஆனால் பெற்றோர் தங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைவிட திட்டுவது மேல் என்று குழந்தைகள் நினைக்கின்றனவாம்.

குழந்தைகளைக் கண்டு கொள்ளாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தால் குழந்தை ஓடிச் சென்று தொலைக்காட்சியை அணைப்பது இதனால்தான். எப்படியேனும் அவர்தம் நோக்கை தன்பக்கம் திருப்ப வேண்டும் எனும் குழந்தையின் ஆதங்கம்தான் அது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே குழந்தையின் செயல்களை ஆழமாக உற்று நோக்குங்கள் ஒவ்வொரு சரியான செயலையும் தவறாமல் பாராட்டுங்கள்.

4) குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு இறங்கிச் சென்று குழந்தையோடு குழந்தையாக உரையாடுவதே சிறந்தது. அவர்கள் தரையில் அமர்ந்தாலும் வெளியே மணலில் புரண்டாலும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்து உரையாடுங்கள்.

குழந்தைகள் பேசுவதைக் கவனத்துடன் கேட்டு பதிலளியுங்கள். அதைக் குழந்தைகள் மிகவும் அதிகமாக விரும்புகின்றனவாம். குழந்தைகளின் பேச்சுகள் கவனிக்கப்படாமல் போகும்போது அவர்கள் மனரீதியான பாதிப்பை அடைகின்றனர்.

5) நீங்கள் கொடுக்கும் உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். அது மிகமிக இன்றியமையாதது. குழந்தைகளுக்கு உங்கள் சொற்களின் மீது நம்பிக்கை எழவும், உங்களிடம் குழந்தை பாதுகாப்பை உணரவும் அது வழி வகுக்கும்.
வெறுமனே உங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள். "ஒழுங்காச் சாப்பிட்டா கடைக்குக் கூட்டிப் போகிறேன்". "அமைதியா இருந்தா சாக்லேட் வாங்கித்தரேன்" என எது சொன்னாலும் அதை நிறைவேற்றுங்கள்.

நிறைவேற்ற வேண்டும் எனும் சிந்தனையில் நீங்கள் உறுதிமொழிகள் வழங்கும்போது உங்கள் உறுதிமொழிகளும் நேர்மையாய் இருக்கும். குழந்தைகளும் உங்களிடம் நம்பிக்கை வளர்க்கும்.

6) குழந்தைகளுக்குச் சில பொருட்கள் மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிந்திருக்கையில் கண்ணாடியைப் பிடுங்கி எறிவது குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்றால் கண்ணாடியை மறைவாக வைத்திருக்க முயலுங்கள். முடிந்த மட்டும்.

7) உங்கள் குழந்தை ஏதேனும் ஒன்றை ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருந்தால் அது உங்களைப் பாதிக்காத வரையில் கண்டு கொள்ள வேண்டாம். உங்கள் சட்டங்களை குழந்தைகளின் விளையாட்டில் வரையறை செய்ய வேண்டாம்.

குழந்தை ஒரு எறும்பைப் பின் தொடர்வதைப் பெரிதும் விரும்பினால் விட்டு விடுங்கள். அதை விடுத்து "அதெல்லாம் பண்ணாதே" என்ற அதட்டல் தேவையில்லை. குழந்தையின் போக்கில் குழந்தையை வளர விடுவது குழந்தையின்
தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பெற்றோருடன் அதிக கருத்து வேற்றுமை, மனவருத்தம் வருவதையும் தவிர்க்கும்.

8) குழந்தையிடம் "செய்யாதே" என்று ஒரு செயலை வலியுறுத்துகிறீர்கள் எனில் அதில் நீங்கள் உறுதியாய் இருங்கள். மனைவி "செய்யாதே" என்று சொல்ல, கணவன் செய்யட்டும் பரவாயில்லை" என்று சொல்லிக் குழப்பாதீர்கள். சொல்ல வேண்டியதை நேரடியாகவும், எளிமையாகவும் சொல்லுங்கள். செய்யாதே என்று சொல்லப்படுவதைச் செய்வதில் எல்லோரையும் விட குழந்தைகள் ஆர்வமாய் இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சில விஷயங்களைக் குழந்தைகளின் தவறுகளிலிருந்து குழந்தைகளே கற்றுக் கொள்வார்கள். அதைத்தடுக்க வேண்டாம். வீட்டுப் பாடம் எழுத ஒரு நாள் மறந்தால், அதற்குரிய தண்டனை பெறட்டும். மறு நாளிலிருந்து நினைவில் வைத்திருப்பார்கள்.

9) குழந்தைகள் முக்கியமானவர்கள் எனும் நிலையைக் குடும்பங்களில் உருவாக்க மறக்க வேண்டாம். சற்று வளர்ந்த குழந்தைகளை வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்தாய்வு செய்வதும், கலந்து பணிகளைச் செய்ய வைப்பதும் சிறந்தது. அது குழந்தைகளின் தன்னம்பிக்கையையும், இருப்பையும் வலிமையாக்கும். கிண்டல், காயம் இல்லாத நகைச்சுவை உணர்வைக் குடும்பத்தில் குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சேர்ந்து உண்பதும், சேர்ந்து சிரிப்பதும் வளமையான குடும்ப உறவின் பாலங்கள்.

10) குழந்தைகளுக்குத் தோல்விகளையும் பழக்குங்கள். கேட்பதை எல்லாம் கொடுப்பதோ, சொல்வதை எல்லாம் செய்வதோ மிகவும் தவறானது. அத்தகைய குழந்தைகள் திடீரென பள்ளித்தேர்வில் வரும் தோல்வியைக் கூட சந்திக்க முடியாமல் முடங்கி விடுவார்கள். தோல்விகளும் வெற்றிகளும் கலந்ததே வாழ்க்கை என்பது அவர்களுக்குப் புரிய வேண்டியது அவசியம். அது பெற்றோர்களாகிய உங்களிடம்தான் இருக்கிறது.

குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய



குழந்தைகளுக்காக ஒரு டைம் டேபிள் போட்டு, அதில் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் தனித்தனியாக நேரத்தை ஒதுக்கவும்.

 விளையாடும் நேரத்தில், அவர்களை விளையாட விடவும். படிக்க வேண்டிய நேரத்தில், அவர்களை படிக்கச் செய்யுங்கள்.

ஹோம் ஒர்க் செய்யும் நேரத்தில் டி.வி., ரேடியோ போன்றவற்றை போடாதீர்கள். குழந்தைகளின் கவனம் படிப்பின்மேல் செல்லாமல் திசை திரும்பக்கூடும்.

குழந்தைகளுக்காக ஒரு நோட்புக் தயார் செய்து அதில் அவர்கள் செய்த ஹோம் ஒர்க்கைப் பற்றி எழுதி வைக்கவும். அவர்கள் செய்யாத வேலை பற்றியும் குறித்து வைக்கவும்.

அடிக்கடி குழந்தைகளின் பள்ளிக்கு சென்று அவர்களைப் பற்றி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் படிப்பின் முன்னேற்றத்தை பற்றி தகவல் அறியுங்கள்.

உங்கள் குழந்தை எந்தப் பாடத்தில் வீக்காக உள்ளதோ, அதற்கு தனியே ட்யூஷன் வைக்கலாம்.

 அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னர் அந்தப் பாடத்தில் அக்குழந்தையால் முன்னேற்றம் அடைய முடியாது.

நாளை உங்கள் குழந்தை வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால், இன்றே அதற்கு அஸ்திவாரம் போடவும். உங்கள் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும்!

நாய்க்கடிக்கு தடுப்பு ஊசி


நாய்க்கடிக்கு நல்லா சோப் போட்டு கழுவ வேண்டும். இது ரொம்ப முக்கியம். கடித்த இடத்தில் ரேபிஸ் கிருமிகள் கோடிக்கணக்கில் இருக்கும். குறைந்தது 2 நிமிடங்கள் ஓடும் டேப் தண்ணீரில் கழுவவேண்டும். அதன் பின் ஆன்டிசெப்டிக் லோஷன் போட்டு கழுவலாம்.

கடி வாயை மூடக்கூடாது; தையல் போடக்கூடாது.

உடனே முதல் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

கடியின் வகைகள்:

நாயை தொடுதல், உணவு ஊட்டுதல், காயம் படாத தோலை நக்குதல்.

மருத்துவம்: தேவையில்லை

சிராய்ப்பு காயம், கவ்வுதல், குறைவான அளவில் ரத்தக்கசிவு

மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி மற்றும் ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி
ஏற்கனவே உள்ள காயத்தை நக்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட ஆழமான காயங்கள், நரி, ஓநாய், வவ்வால் கடி

மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி மற்றும் ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி மற்றும் இம்முயுனோக்லோபின் தடுப்பு மருந்து.

ஊசிகள்:

1. டிடி ஊசி - இது எந்த விலங்கு கடித்தாலும் போடவேண்டியது.

2. ரேபிஸ் ஊசி - அரசு மருத்துவமனையில் இது இலவசமாக போடப்படும். தனியாரில் ரூ 350-500 வரை ஆகும்.

3. இம்யுனொக்லொபின் - அதிகமான அளவில் உள்ள காயத்திற்கு கட்டாயம் போட வேண்டும். இதுவும் இலவசமாக கிடைக்கும்.

ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?



நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்:

* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது

ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.

* புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.

* முழு கவனம் மிக அவசியம்.

*நினைவுக் குறியீடுகள் வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்.

உதாரணம்: news - north, east, west, south

*படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்

* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.

* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும்.

*தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.

* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.

Monday, March 19, 2012

மனிதன் மகிழ்ச்சியாக இருக்க தூக்கம் அவசியம்.


உணவு, தண்ணீர் மற்றும் காற்று ஆகியவற்றைப்போல தூக்கமும் முக்கியம் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வி. கனகசபை கூறினார்.


 தூக்கம் குறித்த பொதுமக்களுக்கான மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை நடந்தது. இதில் டாக்டர் கனகசபை கூறியது:


 ஒரு மனிதன் தினமும் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். தூங்கும்போதுதான் மூளைக்கு அதிகளவில் ரத்தம் செல்கிறது.

 புத்துணர்வுடன் இருக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் தூக்கம் அவசியம். உணவு, தண்ணீர் மற்றும் காற்று போல தூக்கமும் முக்கியம்.

தூங்கும்போது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. சரியாகத் தூங்கினால் மருந்துகளே தேவைப்படாது.


 உடல் உழைப்பு குறைவு, அதிகநேரம் கணினி முன் வேலை செய்வது போன்ற காரணங்களால் தூக்கமின்மை ஏற்படுகிறது. உடல் உழைப்பை அதிகரித்து நன்றாகத் தூங்கினால் நலமுடன் வாழலாம் என்றார் டாக்டர் கனகசபை.


 நரம்பியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஆர்.எம். பூபதி கூறியது: அமைதியான மனநிலை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற தூக்கம் இன்றியமையாதது. பெண்கள் குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆண்களைவிட பெண்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர்.

 இதற்கு காரணம் ஹார்மோன் குறைபாடு. தூங்காமல் இருப்பதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை உண்டாகும். அதேபோல அதிக நேரம் தூங்குவதும் தவறு.


 இயற்கையோடு இணைந்த வாழ்வை மனிதர்கள் மறந்துவிட்டனர். அதன் காரணமாக உடல் உழைப்பு குறைந்து தூக்கமின்மை ஏற்படுகிறது. மன அமைதி, உடல் நலம் ஆகியவற்றுக்கு தூக்கம் அவசியம் என்றார் அவர்.

 மனநல மருத்துவப் பேராசிரியர் டாக்டர் கலைச்செல்வன், நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் வி. சுந்தர் ஆகியோர் தூக்கமின்மை குறித்த பொது மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்!




மனிதனுக்கு மனம்தான் அஸ்திவாரம். எல்லா விஷயங்களும் இங்குதான் ஆரம்பமாகிறது. மனிதனின் உடல் மரம் போன்றது. அதன் ஆணி வேர் மனம். மரத்தின் மேலே தெரியும் தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நன்றாக பார்த்துக் கொள்கிறோம். ஆனால் ஆணிவேர் மோசமாகிக் கொண்டே இருந்தால் மரத்தின் ஏதேனும் ஒரு பகுதி இலையோ, பூவோ, காயோ, கனியோ மோசமாகிக்கொண்டே தான் இருக்கும். நாம் பல நேரங்களில் இலை இலையாகப்பார்த்து, காய்காயாகப் பார்த்து, பழம்பழமாகப்பார்த்து தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறோம். வேரை கவனிக்காவிட்டால் ஒரு நாள் மரமே (மனமே) பட்டுப்போய்விடும்.

இன்று மனித மனம் பலகீனமாக இருந்து கொண்டிருக்கிறது. அதை பலப்படுத்தும் முயற்சிகளில் நாம் இறங்காமல், கூடுதலான வேலைகளையும், எதிர்பார்ப்புகளையும் அதற்கு கொடுத்து மென்மேலும் அதை பலகீனமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நமது உடல் பலகீனமாவது தெரிந்ததும், உடனே வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வு, மருந்து என்று சிந்திக்கிறோம். ஆனால் மனதை கவனிப்பதும் இல்லை. தேவைக்கு ஓய்வு கொடுப்பதும் இல்லை. அதனால் ஆர்வமற்ற நிலையில் வேலைகளை செய்யவேண்டியதாகி விடுகிறது. வேலையை ஆர்வத்தோடு அனுபவித்து செய்தால், அதிலே மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் ஆர்வமின்றி, கடனே என்று வேலையை செய்வதால், வேறு வழியில் மகிழ்ச்சியை தேடவேண்டிய கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

`பேலன்ஸ்செய்வது, அதாவது சமநிலையை கையாளுவதில் நமக்கு பக்குவம் குறைவு. வேலையாக இருந்தாலும், பொழுதுபோக்காக இருந்தாலும், நட்பாக இருந்தாலும், உறவாக இருந்தாலும் ஒன்று, அளவுக்கு மீறி ஆர்வம் காட்டுகிறோம். முக்கியத்துவம் கொடுக்கி றோம். நெருங்குகிறோம்.

இல்லாவிட்டால் அத்தனையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அதில் இருந்து முழுமையாக விலகி ஓடி விடுகிறோம். இதில் எல்லை என்பது நமக்கு தெரிவதில்லை.

மனதை சரி செய்தால்தான் நம்மால் எல்லையை உணர முடியும். எல்லையை உணர்ந்தால் தான் எல்லை வரை மகிழ்ச்சியை அனுபவிக்கவும், எல்லை மீறாமல் இருக்கவும் முடியும். மனதை சரிசெய்ய அதன் மீது கவனம்செலுத்த வேண்டும்.
தியானம் என்பது இன்று எல்லோரும் உச்சரிக்கும் சொல். தியானம் என்றால், கவனம் என்றுதான் அர்த்தம். உங்கள் கார் மீது, செல்போன் மீது, வீட்டின் மீது, உறவினர்கள் மீது கவனம் வைத்திருக்கிறீர்கள். அதுபோல் மனதின் மீது கவனத்தை முழுமையாக விஞ் ஞான ரீதியாக செலுத்துவதுதான் தியானம்.

`நீங்கள் யாரை எல்லாம் கவனிக்கிறீர்கள்?’- என்று உங்களிடம் கேட்டால், `வீடு, மனைவி, மக்கள், அலுவலகம்.. என்று பலவற்றை அடுக்குவீர்கள். `நான் என்னையும் கவனித்துக் கொள்கிறேன்என்றும் சொல்வீர்கள். `நான்என்று நீங்கள் உங்கள் உடலைத்தான் சொல்வீர்கள். மனதை சொல்வதில்லை.

மனதே சரியில்லை என்ற வார்த்தை இப்போது ரொம்ப மலிந்துபோய்விட்டது. கோவிலுக்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில் மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது. இரண்டு மணி நேரம் உபன்யாசம் கேட்கிறார்கள். நிறைய நல்ல விஷயங்களை கேட்கும் அந்த நேரத்தில், மனது நன்றாக இருக்கிறது அற்புதமாக இருக்கிறது என்று கைதட்டுகிறோம்.

 அங்கிருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே மீண்டும் பழைய குழப்பங்கள், பிரச்சினைகள், சச்சரவுகள். மீண்டும் போவோம்.. வருவோம்.. ஆனால் அங்கு வார்த்தைகளில் கிடைத்ததை, அவர்களால் வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை. ஏன் என்றால் வாழ்க்கை, குழப்பம் நிறைந்த மனதின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நாம், கவனம் செலுத்தி நம் மனதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், நம்மைச் சார்ந்த யார் மனதையும் நம்மால் கவனிக்க முடியாது. நமது மனைவி, குழந்தைகள் மனதைக்கூட கவனிக்க முடியாது.
இந்த உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் என்று சொன்னால், அது நல்ல ஆசை!
ஆனால்..
- உங்களிடம் உணவு இருந்தால்தான் அதை நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியும்.
-உங்களிடம் பணம் இருந்தால்தான் அடுத்தவர் களுக்கும் கொடுக்க முடியும்.
அதுபோல் உங்களிடம் மகிழ்ச்சி இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே நீங்கள் விரும்புகிறவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்க முடியும். அதனால் இந்த உலகம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் நீங்கள் முதலில் மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
விளக்கம்: சகோதரி ஜெயா, பிரம்மகுமாரிகள் இயக்கம்.

பித்த வெடிப்பு குணமாக



சிலருக்கு, என்னதான் சிகிச்சை பெற்றாலும் பாத வெடிப்பு சட்டென்று குணமாகாது. அப்படிப்பட்டவர்களுக்கு சில டிப்ஸ்…

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

*மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, அது தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

*விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர, பித்த வெடிப்பு சரியாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினாலும் பித்த வெடிப்புகள் சரியாகும்.

* இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கச் செல்வது நல்லது. இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* தினமும் குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...