Total Pageviews

Friday, April 19, 2013

எந்தப் பறவையும் பிச்சை எடுப்பதில்லை

பறவைகள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை!!

உணவு தானியங்களை விளைவிக்க வேண்டிய மனிதனே, இலவசங்களால் திக்குமுக்காடிப் போய், விதைப்பதை (உழைப்பதை) மறந்துவரும் காலகட்டத்தில் பறவைகளாவது விதைப்பதாவது? என்று என் நண்பர் ஒருவர் கேட்டார்.

எல்லா உயிரினங்களையும் படைத்த இறைநிலை, அவைகளுக்கான அனைத்து வசதிகளையும், வாழ்வாதாரங்களையும் உண்டாக்கிய பின்பேதான் படைத்துள்ளது.

“எந்தப் பறவையும் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை” என்ற இந்தச் சொற்கள் பைபிளில் உள்ளவை. இதன்பொருளை நாம் விரிவாய் காண்போம்.

பறவைகளை முட்டையிடும் மிருகம் என்று தான் உலகம் முழுதும் கூறுகின்றனர். இவற்றுக்கு ஐந்தறிவு உள்ளது. தொடு உணர்வு, சுவையுணர்வு, முகரும் திறமை, பார்க்கும் திறன், கேட்கும் சக்தி ஆகியனதான் இந்த ஐந்தறிவு. ஆனால், மிருகங்களுக்கு நான்கு கால்கள் உள்ள நிலையில், பறவைகட்கு முன் கால்கள் இரண்டும் இறக்கைகளாக மாற்றி அமைக்கப்பட்டுவிட்டன.


பரிணாம வளர்ச்சியில், உணவு தேடுதல், பாதுகாப்பு, இடமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னங்கால்கள் மறைந்து இறக்கைகள் உண்டாக்கப்பட்டன. இருகால்களிலும், ஒற்றைக்காலில் நின்றுகொண்டு, மற்றொரு காலை மடக்கி, இறகுகளுக்குள் வைத்துக்கொள்ளும் பழக்கமும் கொண்டவை இப்பறவையினம்.

சுமார் 10,000 வகையான பறவைகள் இந்தப் பூமியில் உள்ளன. ஆர்க்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா வரை எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் உயிர் வாழ்கின்றன. சுமார் 2” முதல் 9′ என்ற அளவு வரையிலான பறவைகள் உள்ளன. பறப்பதால் தான் பறவை என்ற பெயர் பெற்றன.


ஆனால், பறக்காத ஒரு பறவையும் உள்ளது. நியூசிலாந்தில் மோ (Moa) என்ற பெயருள்ள பறவைக்கு இறக்கைகள் இல்லை; பறக்க முடியாது. இறக்கைகள் உள்ள பெங்குயின் போன்றபறவைகளும் பறப்பதில்லை. இந்தப் பெங்குயின் இனத்தில் பெண் பறவை முட்டையிட, ஆண் பறவை அடைகாக்கும் விசித்திரம் நிகழ்கிறது.

பறவைகளில் புத்திசாலிப்பறவை கிளிகள். நாம் சொல்வதை கவனமாகக் கேட்டு, அதேபோல் சொல்லும் திறமை உள்ளவை. தற்போது கோவை அருகில் சோமனூரில் மைனா ஒன்று மிக அருமையாகப் பேசுவதாய் நாளிதழில் செய்தி வந்துள்ளது. புறாக்கள் முன்பு செய்திகளை எடுத்துச் சென்றன எனப் படித்துள்ளது நினைவுக்கு வரும். நிலத்தில் நடந்தால் பாதை உண்டாகும்; தெரியும். ஆனால், வானத்தில் பறந்தால், வழியே தெரியாதே.

சரியான திசையில் பறந்து, இலக்கை அடையும் திறமையுள்ளவைதான் புறாக்கள். பல தலைமுறைகளாக இப்பறவையினங்கள் தமது வாழ்க்கை முறையை, அப்படியே தம் சந்ததியினருக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் கொடுத்துவருகின்றன. இதை ஆங்கிலத்தில் “Cultural Transmission of Knowledge”என்று கூறுகின்றனர்.

இவைகளின் மொழி சப்தம். சிறிது இழுத்து சப்தம் போட்டால், அது பாட்டு. உணவுக்காகவும், முட்டையிடுவதற்காகவும் சில பறவைகள் தம் இடத்தை மாற்றிக்கொள்கின்றன. வருடம் ஒன்றுக்கு சுமார் 64,000 கி.மீ. தூரம் பறந்துசெல்லும் கடல் பறவைகள், நிறுத்தாமல் சுமார் 2500 கி.மீ. தூரம் பறந்து செல்லும் நிலப்பறைவகள், சுமார் 4000 கி.மீ. தூரம் பறந்து செல்லும் கடற்கரைப் பறவைகள் எனப் பல உள்ளன.

கழுத்தை 1800 பின்புறம் திருப்பி முகத்தை முதுகுப்பக்கம் கொண்டு செல்லும் தன்மை படைத்தவை பறவைகள். வௌவால் உட்பட பல பறவைகள் தலைகீழாகத் தொங்கும் சாதுர்யம் மிக்கவை. மனிதன் தோன்றிய காலம் முதலே மனிதனுக்கு பறவை இனத்துடனான உறவு இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.

முயற்சி திருவினையாக்கும்

“Early Bird Catch the Worm”,அதிகாலை எழுந்து பணிகளைத் துவக்கினால் வெற்றி நம்மைத் தேடிவரும். நேர நிர்வாகம் பறவைகளின் சிறப்புத்தன்மை. ஒவ்வொரு நாளையும் பிரித்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள” - குறள் 527

தனக்குக் கிடைத்த உணவை மறைத்து வைத்துத்தானே உண்ணாமல், தன் சுற்றத்தைக் கூவி அழைத்து, பகிர்ந்து உண்ணும். செல்வம் பெற்றவர்களும் இத்தகைய பண்புடையவர்களாகத் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்தனர். நாளைக்கு வேண்டும் என மறைக்காததால் பறவைகள் கவலையில்லாமல் வாழ்கின்றன.

பிச்சை எடுப்பதில்லை

எந்தப் பறவையும் உடல் ஊனம், மனநிலை சரியில்லை, இயற்கை பொய்த்துவிட்டது எனப் பிச்சை எடுப்பதில்லை. உடல் ஊனமுற்ற சில பறவைகள் கூடத் தம் உணவைத்தேடி பல இடங்களுக்குச் செல்வதைப் பார்க்கிறோம்.

சிறுகுஞ்சுகள் தமக்குத் தேவையான உணவைத் தேடிச்செல்லும் வரை, தாய்ப்பறவை, தன் அலகினுள் அவற்றுக்கு உணவை எடுத்துவந்து அன்புடன் அக்கறையாய் கொடுக்கிறது.



உன் நண்பனே உன் எதிரி

உன்னுள்ளே அல்லது வெளியே இருக்கும் எதிரிகளை இனங்கண்ட பின்னரும் சும்மாயிருக்கலாமா? உடனே செயல்படுங்கள்.

உன் நண்பனே உன் எதிரி

உன் வகுப்பில் உன்னோடு படிக்கும் சில நண்பர்கள் – உன்னைப் புகைக்க அழைப்பார்கள். இப்போது சொல் அவர்கள் உன் எதிரிகள் தானே?


இவர்களில் சிலர் மனதளவில் ஆர்வத்தைக் குலைப்பார்கள். இரண்டு மடங்கு ஆர்வத்தோடு படிப்பது தான் நீ இவர்களுக்குக் கொடுக்கும் பதிலடியாகும்.
 
சிலர் வகுப்புக்கு அல்லது பள்ளிக்கு வெளியே சண்டைக்கு இழுப்பார்கள். இவரோடு நேரடியாக மோதாதே. பழிக்குப் பழி என்றபோக்குத் தவறானது. என் கண்ணைக் குத்தினான். எனவே அவன் கண்ணைக் குத்தினேன் என்று இருவரும் குருடாகலாமா?
 
தாக்க வந்தால் பொறுமையாயிரு. உடனே தலைமையாசிரியரிடம் சொல். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒருபோதும் சட்டத்தை நீ கையில் எடுக்காதே.
 
கழுத்தைப் பிடித்து நெருக்கினால் பொறுமையாய் இருக்காதே. திருப்பித்தாக்கு. நமது உயிரை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான உரிமை (Right of Private Defense) நமக்குள்ளளது.
 
எனக்கும் இப்படிப் பட்ட நண்பர்கள் இருந்தார்கள். கொஞ்சம் சண்டையும் போட்டேன். பிறகு ஞானோதயம் வந்தது. அவர்களை ஒதுக்கி விட்டு, படிப்பில் இரண்டு மடங்குஆர்வம் காட்டினேன். அவர்கள் இன்றும் சிட்டுக் குருவிகளாக – ஆட்டோ ஓட்டுநராக, ஆட்டோ பழுதுநீக்குபவர்களாக இருக்கிறார்கள். நான் மேகங்களின் மேலே பறக்கும் பருந்தாக – காவல்துறை உயர் அதிகாரியாக வலம் வருகிறேன். இப்போது அவர்கள் என்னிடம் உதவி கேட்டு வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது நான்தான் அவர்களுடைய சிறந்த நண்பன் என இப்போது சொல்கிறார்கள்.
 
எனவே தீய நண்பர்களோடு சேராதே. அவர்களுடைய சொல்லுக்கு செவி சாய்க்க வேண்டாம். அவர்களைப் பழிதீர்த்துக் கொள்ள ஒரே வழி – இரு மடங்கு வெறித்தனத்தோடு படிப்பது தான். இதுதான் நான் சென்றவழி, உனக்கு சொல்லும் வழி; எதிரிகளை வெல்லும் வழி.
உனக்குள்ளே எத்தனை எதிரிகள்

உனக்குள்ளேயே இருக்கும் எதிரியைச் சமாளிப்பது சற்று கடினம்தான். அதற்கு அதீத துணிச்சலும், மிகுந்த கட்டுப்பாடும் வேண்டும். கூடுதலாக நிறைய சுயபரிசோதனை செய்ய வேண்டும்.


உன் நண்பன் உன்னை புகைப்பிடிக்கச் சொல்கிறான். சரி எனத் தலையாட்டும் முன் – கை நீட்டும் முன், ஒரு கேள்வி கேள்.

நான் புகைப்பதை என் தாய் விரும்புவாளா? நான் புகைப்பதைப் பார்த்தால் ஏற்றுக் கொள்வாளா?

தாய் விரும்பாத ஒன்றை, நீயும் விரும்பாதே, விட்டொழி. ஒரு எதிரியை வீழ்த்தியாயிற்று.
 
முதல் மதிப்பெண் பெறுகிறான் உன் நண்பன். அவனைப் பார்த்து உனக்கேன் பொறாமை? அவன் முதல் மதிப்பெண் பெற விலையாகக் கொடுத்தது அவனது வியர்வை. அதை உணராமல், பொறாமைப்படுவது, அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது காலவிரயம். அவனைப் போல் நானும் உழைப்பேன். மதிப்பெண் பெறுவேன் என்று எண்ணி பொறாமை என்னும் எதிரியை வீழ்த்து.

உன் செயல்பாட்டுக்கு உன் உடலே தடையாக இருக்கலாமா? கூடுதல் எடையா? கூடுதல் விழிப்புணர்வு தேவை.

‘ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கு’ என்று கூறினர் நம் முன்னோர். உண்பதைக் குறை ஆனால் மனதில் உறுதி வேண்டும். வருத்த வேர்க் கடலையைக் கைநிறைய கொடுத்தாலும் ஒன்றை மட்டும் கொரித்து விட்டுப் போதும் எனச் சொல்லும்
மன உறுதி வேண்டும்.

பீசா, பர்கர் போன்றவற்றை உண்பதை நீக்கி, காய்களையும் கனிகளையும் உண்டால், பாரதியார் விரும்பியவாறு வாள் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடல் கிடைக்குமே.

தினமும் உடற்பயிற்சி செய்க. அல்லது வாரத்தில் மூன்று நாள்களாவது ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் என்பதை வழக்கப்படுத்திக் கொள். எடை குறைந்து, நடையில் மிடுக்கு ஏற்படும். தோற்றப் பொலிவு உண்டாகும். உனக்குள் நம்பிக்கையும் உற்சாகமும் ஒருசேர ஊற்றெடுக்கும். மிதமான உணவும் முறையான உடற்பயிற்சியும் மருத்துவ செலவைப் பாதியாய் குறைக்கும். ஆம். உடற்பயிற்சி ஒரு தவம். அதன் பயன் உடல் நலம் என்னும் வரம்.

இந்த நல்ல செய்தியை உன் பெற்றோருக்கும் சொல்.
 
நம் அக எதிரிகள் மற்றும் புற எதிரிகளுக்கான போரை நிறுத்தவே கூடாது. வாழும் வரை இப்போரைத் தொடருவோம்.

 நன்றி: சைலேந்திர பாபு செ



Wednesday, April 17, 2013

கல்விக் கடன் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?


கல்விக் கடன் வாங்க முடிவெடுத்திருக்கிறீர்களா? என்னென்ன ஆவணங்களை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நீங்கள் மாத வருமானம் பெறுபவராக இருந்தால்

1. அடையாளச் சான்றிதழ்

நீங்கள் மாத மருமானம் பெறுபவராக இருந்தால், உங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, அரசு வழங்கும் ஏதாவது அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

2. வருமான சான்றிதழ்

நீங்கள் சம்பளம் வாங்குவதற்கான வருமான சான்றிதழ், அல்லது படிவம் 16 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

3. இருப்பிடச் சான்று

நீங்கள் குடியிருப்பதற்கான சான்றைத் தரும் வங்கி கணக்கு அறிக்கை, இறுதியாக மின் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, மொபைல் கட்டணத்தைச் செலுத்தியற்கான ரசீது, தொலைபேசிக் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, கிரெடிட் கார்டு அறிக்கை, இருக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். எந்த வங்கியில் உங்கள் சம்பளம் கிரெடிட் செய்யப்படுகிறதோ, அந்த வங்கியின் அறிக்கை மிகவும் முக்கியம்.

மற்ற பணிகளில் ஈடுபடுபவராக இருந்தால்

1. அடையாளச் சான்றிதழ்

பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

2. வருமான சான்று

நீங்கள் ஈட்டும் வருமானத்திற்கு 2 ஆண்டுகளுக்கான ஐடி ரிட்டர்ன்ஸ் மற்றும் 2 ஆண்டுகளுக்கான வருமான சான்று மற்றும் அதற்காக அரசு தணிக்கையாளர் அளித்த சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

3. இருப்பிடச் சான்று

வங்கிக் கணக்கு அறிக்கை, இறுதியாக செலுத்திய மின் கட்டண ரசீது, மொபைல் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, கிரெடிட் கார்டின் இறுதி அறிக்கை, குடியிறுக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த ரசீது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Thanks to One india.com

காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்



காற்று இல்லாமலே, காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரித்து செயல் வடிவம் காட்டியுள்ளார், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து வாலிபர்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, கண்டுபிடித்துள்ளார்.



இதற்கான முயற்சியில், மூன்று ஆண்டுகளாக ஈடுபட்ட அவர் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என, கண்டுபிடித்துள்ளேன். காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும்; மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின், இரு பக்கமும் உள்ள, இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது. ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்ட வேண்டும் என்பதால், என் சக்திக்கு தகுந்தவாறு காற்றாலை அமைத்து, அதில் சிறிய அளவில் மின்சாரமும் கிடைக்க செய்துள்ளேன். போதிய பணவசதி இல்லாததால், ஆராய்ச்சியை தொடர தடை ஏற்பட்டுள்ளது.நான் செய்த செயல் வடிவத்தை, மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில் ஒப்படைக்க உள்ளேன். ஐந்து பேர் சேர்ந்து பவர் விஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் ஆரம்பித்துள்ளோம். டிரஸ்ட்டுக்கு பணம் செலுத்த விரும்புவோர், 99944-97959 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to Dinamalar


Tuesday, April 16, 2013

சர்க்கரை நோய் உண்டாக்கும் சிக்கல்கள்

சர்க்கரை நோய் வந்தால் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  சர்க்கரை நோய்  வந்துவிட்டால் பயப்பட தேவையில்லை. அதே சமயம் பல சிக்கல்களுக்கு சர்க்கரை நோயே  காரணம் என்பதை தெரிந்து கொண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் உண்டாக்கும் சிக்கல்களை சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான விளக்கங்களை அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.

1. தாழ் நிலை சர்க்கரை

2.கேடோ அசிடோஸிஸ்

3. கண்கள் பாதிப்பு (Diabetic Retinopathy)

4. சிறுநீரக பாதிப்பு (Diabetic Nephropathy)

5. நரம்புகள் பாதிப்பு (Diabetic Neuropathy)

6. இதயம் மற்றும் ரத்த நாள பாதிப்புகள்

7. கால் பாதிப்புகள்

8. சர்ம நோய் பாதிப்பு இதர தொற்று நோய்கள்

9. பாலியல் கோளாறுகள்

10. வயிற்றுக் கோளாறுகள்

11. மூட்டுவலி

12. மனச்சோர்வு


அமெரிக்க டாக்டர் ஃபிரடெரி அல்லன் (Dr. Frederick Allen) சொல்வது. டயாபடீஸ் ஒரு குறைபாடுள்ள வளர்சிதை மாற்றம் (Faulty metabolism) மட்டுமல்ல; உடலின் உள் இருக்கும் வியாதிகள், கோளாறுகள் இவற்றின் மொத்த பிரதிபலிப்பு. டயாபடீஸ் உடலின் உள்ள எல்லா உறுப்புக்களையும் பாதிக்கும்.

இந்த பாதிப்புகள் டயாபடீஸ் வந்த சில மாதங்களில் கூட ஏற்படலாம் இல்லை சில வருடங்களிலும் உண்டாகலாம். பல சிக்கல்கள் மெதுவாக முன்னேறுபவை. ரத்த சர்க்கரை அளவை மருத்துவம் மூலம் ‘கன்ட்ரோல்’ செய்து கொண்டே வந்தால் இந்த பாதிப்புகளை தவிர்க்கலாம். அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு சுமார் 50,000 சர்க்கரை நோயாளிகள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இந்தியாவில் 1,00,000 என்று கருதப்படுகிறது.

நீரிழிவு நோயால் வரும் அபாயங்கள்

1. இறப்பு விகிதம் 2 – 3 மடங்கு அதிகரிக்கும்

2. இதய நோய், மூளைத்தாக்குதல் – 2- 3 மடங்கு அதிகரிக்கும்

3. கண்பார்வை இழப்பு, மற்றவர்களை விட, நீரிழிவு நோயாளிகளுக்கு 10 மடங்கு அதிகம்.

4. கால்கள் பாதிப்பு மற்றும் இழப்பு, மற்றவர்களை விட, நீரிழிவு நோயாளிகளுக்கு 20 மடங்கு அதிகம்.




Friday, April 12, 2013

எங்கே செல்கிறது மதுரை நிலத்தடி நீர்மட்டம் ?

மதுரையில் இதுவரை காணாத வகையில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவமழை பொய்த்து வருவதால் நீர்நிலைகள் வறண்டு விட்டன. விவசாயத்திற்கு வழியின்றி வயல்களில் புல், பூண்டு கூட கருகி விட்டன.

கால்நடைகளுக்கு தீவனம் இல்லை. நிலத்தடி நீர் அதல, பாதாளத்திற்கு செல்வதால் கிணறுகள் வறண்டு வருகின்றன. எனவே, கிணற்றுப்பாசனம் மூலமும் விவசாயப்பணிகள் நடக்க வாய்ப்பில்லை. மழை வரும்

என நம்பி, மானாவாரியாக விதைக்கப்பட்ட நெல் மற்றும் பயிறு வகைககள் "சாவி'யாகிப்போனது. 2012ல் மழை பெய்திருந்தால் தான் 2013ல் விவசாயம் செய்ய முடியும். 2012ல் மழை இல்லாததால் 2013ல் விவசாயம் செய்ய இயலாது. இதனால், உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயரும் ஆபத்து உள்ளது. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் இரண்டு ஆண்டாக மழை பெய்யாததால், அணை வறண்டு வருகிறது. வருஷநாடு பகுதியில் மழை பெய்யாததால் வைகை அணைக்கு நீர் வரத்து இல்லாமல் அணை குட்டை போல் காட்சியளிக்கிறது.
 குடிநீர் தேவைக்கு மட்டும் 48.79 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்

பட்டுள்ளது. இதில், 25 அடி வரை அணையில் சகதி இருக்கிறது. இதன்படி, தண்ணீர் அளவு வெறும் 22.79 அடி மட்டுமே. இந்த குறைந்த தண்ணீரை வைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.நீர்நிலைகள் வற்றியதால் மின் உற்பத்திக்கு வழியில்லை. விவசாயத்திற்கு மின்சாரம் வழங்க முடியவில்லை. நிலத்தடிநீரை அதிகபட்சமாக உறிஞ்சிய மாவட்டங்களை "கருப்புக்கோடு' என பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிய மாவட்டங்களில், மதுரை வாடிப்பட்டி ஒன்றியம் முதலிடத்தில் உள்ளது. குளிர்பான கம்பெனிகள், மினரல் வாட்டர் கம்பெனிகள்

காரணமாக, நிலத்தடி நீர் தரையில் இருந்து 1000 அடி ஆழத்திற்கும் மேல் சென்று விட்டதாகவும், இதனால் குடிநீருக்கு பயங்கர தட்டுப்பாடு ஏற்படும், என பொதுப்பணித்துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.

எங்கே செல்கிறது நிலத்தடி நீர்மட்டம்

முன்பு எப்போதும் இல்லாத அளவு, மதுரை மாவட்டத்தில் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. தண்ணீர் வளம் மிக்க, மதுரை விரிவாக்க
பகுதிகளில் வீடுகளில், 20 நிமிடங்களில், 500 லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி நிரம்பி விடும். தற்போது 45 நிமிடத்திற்கும் மேலாகிறது. மழை காலங்களில் நிரம்பும் கண்மாய், குளங்களில் அடுத்த கோடைவரை தண்ணீர் இருக்கும்.

  பருவமழை பொய்த்ததால், அவை வறண்டு கிடக்கின்றன. சில கண்மாய், குளங்களில் இருந்த தண்ணீரை மீன்பிடி ஏலம் எடுத்தவர்கள், வெளியேற்றியதால் வீடுகளில் போர்வெல் நீர்  மட்டமும் பல அடி ஆழத்திற்கு கீழ் சென்று விட்டது.பொதுப்பணித் துறையில் நிலத்தடி நீர் மட்டம், ஆண்டுதோறும் போர்வெல் மூலம் கணக்கிடப்படுகிறது. 2012 ஜனவரியில் மதுரையில் 69 போர்வெல்களில்  நிலத்தடி நீர் 3.5 மீட்டருக்குள் (ஒரு மீட்டர் 3 அடி, 20 செ.மீ.,) இருந்தது. இந்த ஜனவரியில் 9.2 மீட்டருக்கு சென்று விட்டது. சுமார் 6 மீட்டர் வரை நிலத்தடி நீர் இறங்கியுள்ளது. கோடை மழை இல்லாத பட்சத்தில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் அதல பாதாளத்திற்கு செல்லும் என பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. கண்மாய், குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களை காக்க தவறியதன் விளைவு, இந்த வறட்சியை சந்திக்க வேண்டியுள்ளது.

வைகை ஆற்றுப்படுகையில் குடிநீர் தட்டுப்பாடு

பெரியாறு அணை கட்டுவதற்கு முன் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் வானம் பார்த்த பூமியாக இருந்தன. பெரியாறு அணை வருகைக்கு பின், இரு போகம் விளையும் பூமியானது. மழை இல்லாததால் இம்மாவட்டங்களில் விவசாய பணிகள் முற்றிலும் நடக்கவில்லை.




மதுரை,: நிலத்தடி நீர் பாதாளத்தில் இறங்கி மாசு அதிகரித்து வருகிறது



நிலத்தடி நீர் பாதாளத்தில் இறங்கி மாசு அதிகரித்து வருவதாக ஆய்வு நடத்திய நிபுணர் குழு மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை நகரிலும் சுற்றுப்பகுதியிலும் நிலத்தடி நீரின் தன்மை குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்தி மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளனர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் விவரம் வருமாறு: மதுரை நகரில் நிலத்தடி நீர் 300 முதல் 700 அடி வரை இறங்கி உள்ளது.

பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 59 நிலத்தடி நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 48 மாதிரிகள் குடிக்க உகந்ததாக இல்லை. நிலத்தடி நீரின் தன்மை மாறி மாசுபாடு அதிகரித்து கொண்டே போகிறது. சுமாரான நிலையில் இருந்து உப்புத் தன்மைக்கு மாறி உள்ளது. நகரின் மத்திய பகுதியில் வைகை ஆறு சென்றாலும், ஆற்றுக்குள் ஊரும் ஊற்று நீரும் மாசுபட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆற்றில் பாதாள சாக்கடை நீர் கலக்கிறது
.
பாதாள சாக்கடை முழுமையாக நிறைவேறிய பகுதிகளில் நிலத்தடி நீரில் நோய் தாக்கும் நுண்ணுயிர் கிருமிகள் குறைவாக உள்ளன. பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகம் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை இயங்க வேண்டும். பாதாள சாக்கடை நீர் ஆற்றில் கலக்காமல் தடுக்கப்படுவது முக்கியமாகும். நீர் நிலைகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

மதுரை நகரிலும் சுற்றிலும் 38 கண்மாய்கள் இருந்துள்ளன. இதில் பல கண்மாய்கள் அழிக்கப்பட்டு அரசு அலுவலகம், மாநகராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நீதிமன்ற கட்டிடங்களாக மாறி விட்டன. பல்வேறு கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி சீரழிந்துள்ளன.

வண்டியூர், மாடக்குளம், செல்லூர், கொடிக்குளம், தென்பரங்குன்றம் உள்ளிட்ட சில கண்மாய்கள் தப்பி உள்ளன. அதுவும் மண்மேடாகி நீர் கொள்ளளவு குறைந்துள்ளது. இதை சீரமைத்து மழை காலங்களில் கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களை காக்க தவறினால் நிலத்தடி நீர் அதல பாதாளத்தில் இறங்கி, மக்கள் அனைத்து தேவைகளுக்கும் குடிநீரை பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதன் மூலம் குடிநீர் தேவை அதிகரித்து தட்டுப்பாடு கூடுதலாகும். அதை சமாளிக்க முடியாமல் மாநகராட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்படும். இந்த ஆபத்தை தடுக்க முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். .




Thanks to Dinakaran

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...