Total Pageviews

Friday, June 22, 2012

வீடு அழகாக இருக்க செய்ய வேண்டியவை

அனைவரும் வீடு அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அழகாக வைக்க முயற்சியும் செய்ய வேண்டும். எவ்வளவு தான் வீடு பெரியதாக இருந்தாலும் வீடு அடைத்து கொண்டு இருப்பது போல் தான் இருக்கும். அதற்கு காரணம் நாம் தான். எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதை உபயோகித்து தீர்த்த பின்னர் தூக்கி போடாமல், அழகாக இருக்கிறது என்று வீட்டிலேயே வைத்து வீட்டை அழுக்காக, அசிங்கமாக வைத்திருக்கிறோம். இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்கவும், வீட்டை அழகாக வைத்திருக்கவும் என்னென்ன பொருட்கள் வீட்டில் இருக்க கூடாது என்று வீட்டு உள் அலங்கார நிபுணர்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளனர்.


1. தினமும் படிக்க வாங்கும் நியூஸ் பேப்பரை நீண்ட நாட்கள் சேகரித்து வைக்காமல், மாதத்திற்கு ஒரு முறையாவது அதனை எடைக்கும் போடலாம், இல்லையென்றால் பழைய புக் ஸ்டோரிலும் விற்கலாம்.

2. நாம் வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில், கூல்டிரிங்ஸ் பாட்டில் போன்றவை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. ஆகவே அவற்றை ஒருமுறை பயன்படுத்தியப் பின்னர் சேகரிக்காமல், அதனை தூக்கி போட்டு விட வேண்டும்.

3. ஞாபகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி பருவத்தில் பயன்படுத்திய முதல் மொபைல் போன், ஹெட் போன் போன்றவற்றை சேகரித்து வைத்தல், மேலும் மிகவும் பிடித்த சில எலக்ட்ரானிக் பொருட்கள் சேகரித்தல் போன்றவற்றை வீடு அழகாக இருக்க வேண்டுமென்றால் தூக்கி போடத்தான் வேண்டும்.

4. ஏதேனும் பண்டிகை என்றால் நண்பர்கள் வீட்டிற்கு அனுப்பும் கிரீட்டிங் கார்டு மற்றும் கடிதங்கள் போன்றவற்றை சேகரித்து வைக்காமல், அவற்றையெல்லாம் தூக்கி போட வேண்டும். என்ன செய்வது, வீடு அழகாக இருக்க வேண்டுமென்றால் ஒரு சிலவற்றை தியாகம் செய்யத் தானே வேண்டும்.

5. ஷாப்பிங் செய்யும் போது கொடுத்த பில், பௌன்ஸ் ஆன செக், மெடிக்கல் பில் போன்றவற்றை எப்போதாவது உபயோகப்படும் என்று சேகரித்து வைத்திருப்போம். இத்தகையவற்றை தூக்கிப்போடாமல், ஒரு டிராயரில் சேகரித்து வையுங்கள்.

6. மருந்துகளை அதை உபயோகப்படுத்தும் நாள் வரை மட்டும் பயன்படுத்த வேண்டும். தீர்ந்துவிட்டால் அவற்றை தூக்கி போட்டு விடுங்கள். மேலும் மருந்துகள் வாங்கும் போது தேதியை பார்த்து வாங்க வேண்டும்.

7. ஷாம்பு பாட்டில், பேஸ்ட், நெயில் பாலிஸ் பாட்டில் போன்றவற்றை தீர்ந்தவுடன், வீட்டில் அடுக்கி வைக்காமல், தூக்கி போட்டு விடுங்கள். இதனால் வீட்டில் எந்த ஒரு தேவையில்லாத பொருளும் இருக்காது, வீடும் அழகாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Thanks to :Oneindia .com

விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.

அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான். 

அளவுக்கு அதிகமான  பணிவை  ஒரு போதும்  நம்பக் கூடாது!

தன் கையே என்றாலும், விஷம்  ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!

எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி!

 

ஜுன் 5 பசுமை தினம்

ஜுன் 5 பசுமை தினம்உலக சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலகம் முழுதுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. பூமியின் வெப்பம் தொடர்​ந்து அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்று சொல்லலாம். சுற்றுச்சூழலை பாதுகாக்​க தவறியதன் விளைவை நாம் ​நாள்தோறும் தற்போது அனுபவித்து வருகிறோம். குடிக்​கும் தண்​ணீர், சுவாசிக்​கும் காற்று, உண்ணும் உண​வு என அனைத்தும் சீர்கேடு அடைந்துள்ளன. இனி வரும் காலத்திலாவது இந்த நிலையை மாற்றிட அல்லது குறைந்த பட்சம் தடுத்திட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்வது அ​வசியமாகிறது. இதில், பள்ளி செல்லும் குழந்தை முதல் சமையல் அறையில் பரபரப்பாக இருக்​கும் இல்லத்தரசிகள் வரை அனைவருக்​குமே பங்குள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஆண்டு தோறும் ஜுன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் என்று கடைபிடிக்​கப்படுகிறது.

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!!

மாமனிதருக்கு...என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!

யார் இவர் ?



அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

இவர்களுக்கு வானம் தொட்டுவிடும் தூரம் தானோ...?!!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம்

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல

மூங்கிலிலை காடுகளே...!!
தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.
கரை தொடும் நதி...பச்சை புடவை போர்த்திய மலை...பூலோக சுவர்க்கம் இதுவன்றோ !!

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!

இயற்கையை நேசிப்போம்...!! எங்கும் பசுமை செழிக்கட்டும்...!!

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...

Thanks to Muthusamy & Kousalyaraj

விதை எப்படியோ, பழமும் அப்படியே!

பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!


 

Wednesday, June 20, 2012

ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக இதோ சில யோசனைகள்



வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரமில்லை என்பதுதான் கவலை. ஆனால் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை.  வீட்டில் வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள். 
                                                                                                                                                                                                                           தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம்.  வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம்.  வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம்.  லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் எல்லால் மருதாணி, வாழை இலை, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம்.  சிறிய தொட்டிகளில் புதினா செடி, கீரை வகைகளை ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம்.   அதிகம் சிரமம் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி நட்டு வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள்.  தினமும் அது ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடும். அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும். 

  நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்  வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்பது நமது கொள்கையாக இருக்கட்டுமே.      
   
ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதாவது ஒரு சிலர் பாடல் பாடுவது, நடனம், சமையல், நல்ல கல்வி அறிவு போன்றவை பெற்றிருப்பார்கள்.

இவர்கள் பெரிய பெரிய கல்வி நிலையங்களை எல்லாம் உருவாக்க வேண்டாம். நமக்கு கிடைக்கும் நேரத்தில் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு நமக்குத் தெரிந்த கலையை சொல்லிக் கொடுத்தாலே போதும். பிற மொழி தெரிந்திருந்தால் அதற்காக வரும் பிள்ளைகளுக்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே வகுப்பெடுத்து அவர்களுக்கும் உதவலாம். நாமும் பயனடையலாம்.

   தினந்தோறும் அல்லது முடிந்த போதெல்லாம் அருகில் உள்ள ஆசிரமம், முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் அளவளாவி வரலாம். அவர்கள் ஏங்கும் ஒரே விஷயம் உறவுகள்தான். அதையும் நீங்கள் செய்த மாதிரி இருக்கும். உங்களுக்கும் ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கும்.

Thanks to Web Dunia.
பணத்தின் மிகப் பெரிய பயன், அதை இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழ முடிவது தான்!

நம்முடைய தொழில் எதுவானாலும் அதில் நமக்குச் சில போட்டியாளர்கள் இருப்பது நல்லதுதான்.

Tuesday, June 19, 2012

பூக்களை மிதிக்காதீர்.


பூக்கள் மென்மை ஆனவை

பூக்கள் மற்றும் மாலைகள் கடவுளுக்கு மட்டுமே  சாத்தப்படுகிறது.

மரண்ம் அடைந்தவரும் கடவுளுக்கு நீகரானவரே !

இறுதி ஊர்வலங்களில் எச்சரிக்கை தேவை!
இருப்பினும் எல்லா ஊர்களிலும், இறுதி ஊர்வலங்களில் மலர் மாலைகளை மரண்ம் அடைந்த நபரின் மேலிருந்து எடுத்து வீசுகின்றனர்.

 இறந்த பிணம் நோய் கிருமிகளின் கூடாரம் என்பர்... அதுவும், இறந்தவர் நோயாளி எனில், கிருமிகள் அந்த மாலைகளில் மிக அதிகமாக இருக்கும்

அதை வீசி எறிவதால் அக்கிருமிகளால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, பிணத்தின் மீதுள்ள மாலைகளின் மீது கை வைக்காதீர்கள்

என்ன தான் நமக்கு வேண்டியவராயினும், நோய்க் கிருமிகள் நம்மை தாக்காது இருக்குமா? ஊர்வலத்தில் மாலைகளை உயரமாகத் தூக்கி வீச, மின்சார ஒயர்களில் மாட்டிக் கொண்டு மின் வெட்டுக்கு வழி வகுக்கின்றனர்

பட்டாசை கட்டுக் கட்டாக கைகளில் பிடித்து தூர வீசுவதால் தீ விபத்தும், தீக்காயங்களும் பலருக்கு ஏற்படுகின்றன. இறுதி ஊர்வலம் அமைதியாக, யாருக்கும் இடையூறு இன்றி நடக்க வேண்டும்

இந்த இழி செயல்களால், மற்றவர்கள், இறந்தவர்  தம் குடும்பத்தை அசிங்கமாகப் பேசக்கூடும். எனவே, இதிலும் கவனமாக இருக்க வேண்டும்.. 
அந்த காலத்தில் அறியாமையால் செய்த காரியங்களை  இப்போதும் செய்தல் கூடாது

சின்ன வயதில் அம்மா சொன்னது இது.

சாவு வீட்டில் எல்லாமே தீட்டு. தெருவில் இருக்கும் பூவை எல்லாம் மிதிக்க தொடக் கூடாது. அப்படி செய்தல் உடனே குளித்து விட்டுத்தான் வர வேண்டும். அது சுகாதாரத்துக்கு தான் என்று இப்போது நன்றாக தெரிகிறது.... 

By : Sithayan Sivakumar 

தடைகளைக் கூட, நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்!

மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை முடித்துக் காட்டுவதுதான், நல்ல தலைமைப் பண்பின் அடையாளம்.

உயர்பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல. அது நமக்குச் சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும்.


மது

மது  பற்றி  கவியரசு கண்ணதாசன்

 
மதுப் பழக்கம் உள்ள ஒருவனே மதுவினால் விளையும் தீமைகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடியும்.


`எனக்கு இருபதாண்டுகளாக அந்தப் பழக்கம் உண்டு' என்பது ஒன்றும் புதிய செய்தியல்ல.


அந்தத் தார்மீக ஒழுக்கக் கேட்டிற்கு நான் வக்காலத்து வாங்க வரவில்லை.


ஆனால், `சட்டத்தினால் மதுவை ஒழிக்க முடியாது' என்று நான் வாதிட்டிருக்கிறேன்.


சட்டம் போட்டு ஒன்றை மறைக்க, மறைக்க அது பற்றிய ஆசைகளே கிளர்ந்து எழும

"குடித்தால் உன் உடம்பு கெடும்.


மலத்துக்கும், சோற்றுக்கும் வித்தியாசம் தெரியாது.


காரணம் இல்லாமல் வீண் பகைகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.


நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது.


நீ நிதானமாகப் பேசினாலும் கூட, `இது குடிகாரன் பேச்சு' என்று தள்ளிவிடும்.


நீ குடிக்கும் மது, உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.


உன் வருமானம் பாழாகும்.


செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்ய முடியாது.


மதுவினால் நீ நோயுற்றால், உனக்காக யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.


குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்ட புல்லாக, பூச்சியாக நீ மாறிவிடுவாய்.


நற்குலப் பெண்கள் உன் அருகில் வரவே பயப்படுவார்கள்.


மொத்தத்தில் நீ மனிதனாகவே வாழ முடியாது"


இப்படி அவனுக்கு இடித்துக் காட்டினால், ஒரு கட்டத்தில் இந்த அனுபவம் அவனுக்கு வந்து,


மதுவைக் கைவிட்டு விடுவான்.


ஆகவே தான், இந்தியா தோன்றிய காலத்தில் இருந்து, பின் இந்து மதம் பிறந்த காலத்தில் இருந்து, மதுவுக்கு எதிராக மதம் வாதாடிப் போதித்திருக்கிறதே தவிர, அரசர்களிடம் தன் சக்தியைப் பயன்படுத்தி, அதைத் தடைசெய்யச் சொன்னதில்லை.


"மது உள்ளே போனால், மதி வெளியே போகும்."


"சாராயத்தை உள்ளே போட்டால், பூராயம் எல்லாம் வெளியே வந்துவிடும்"


"குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாக்கப் போச்சு"


"கள்ளுக் குடிச்சவனுக்குச் சொல்லுப் புத்தி ஏறாது."


இவையெல்லாம் கிராமத்துப் பழமொழிகள்.


மதுவிலக்குப் பிரச்சாரம் இந்தியாவில் பல கோணங்களில், பல விதங்களில், பல கட்டங்களில் நடைபெற்று வந்திருக்கிறது.


அப்பொழுதெல்லாம், நாட்டிலே குடிகாரர்கள் குறைவாகவே இருந்தார்கள்.


என்று மதுவிலக்குச் சட்டம் வந்ததோ, அன்றிலிருந்துதான் குடிப்பவர்கள் அதிகமானார்கள்.


ஆகவே, இந்த வகையிலும் மதம் போதித்து எழுப்பும் தார்மீகச் சக்தியை சட்டம் உருவாக்க முடியாது.


இந்து மதம், மது உண்பவர்களையே `அரக்கர்கள்' என்று அழைத்தது.
  
மதுவினால் மதியிழந்தோர் கதைகள் இந்துமத ஏடுகளில் ஏராளம், ஏராளம
குடிப்பவனுக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள்.


"நெருப்பை நெய்யால் அணைத்தேன்" என்கிறான்.


கவலைக்காகக் குடிக்க ஆரம்பித்தால், உள்ளே போய் விழுந்த மது, அந்தக் கவலையை அதிகப்படுத்துமே தவிரக் குறைக்காது.


ஒரு குடிகாரன், குடிக்க ஆரம்பிக்கும்போது எதை நினைத்துக் கொண்டு குடிக்கத் துவங்குகிறானோ, அதுதான் அவன் குடித்து முடித்துத் தூங்கும்வரை விசுவரூபம் எடுத்து நிற்கும்.


முதல் ரவுண்டு குடிக்கும் போது, `ஒருவனை உதைக்க வேண்டும்' என்று நீ நினைத்தால் மூன்றாவது ரவுண்டு முடிந்ததும், அவனைத் தேடி உன்னைப் போகச் சொல்லுமே தவிர, அந்தக் கோபத்தை அது குறைக்காது.


அதனால்தான், மேலை நாட்டார் தனியாகக் குடிப்பது இல்லை.
குடிக்க குடிக்க, வயிற்றுக்குள்ளே Fluid உற்பத்தியாகிறது.
`வயிறு மகோதரம்' போல் ஆகிவிடுகிறது.
ஈரலில் Liver Sirosis என்ற நோய் உற்பத்தியாகிறது.
   
ஆரம்ப காலத்தில், குடிகாரர்கள் நிறையச் சாப்பாடு சாப்பிடுவார்கள்.
நாள் ஆகஆக, குடி அதிகமாகி சாப்பாடு குறைந்துவிடும்.


`மரணம் வாசல் வரைக்கும் வந்துவிட்டது' என்பது இதன் பொருள்.
தண்ணீரையும் நாம் குடிக்கிறோம்; பாலையும் குடிக்கிறோம்.


ஆனால், எதையும் `குடி' என்று அழைப்பதில்லை.


இதை மட்டும் ஏன் `குடி' என்கிறோம்? இது ஒன்றுதான், உயிரைக் குடிக்கிறத மதுவினால், உண்மையிலேயே நான் போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர முடியாமல் ரயிலைத் தவற விட்டிருக்கிறேன். வாழ்க்கை ரயிலையும் தவற விட்டிருக்கிறேன்.


ஒரு இந்து, மது அருந்துவதை மதம் நியாயப்படுத்தவில்லை.


வழக்கம்போலவே அவனைத் தட்டிக் கொடுத்துத் தர்ம போதனை மூலம் திருப்புகிறது.


மதுவிலக்கை சரியாகச் செயல்படுத்த வேண்டும்


மத விரிவுரையாளர்களால் மட்டுமே இயலும்.


உங்களிடம் பணி புரிகிறவர்களை, மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள். அவர்கள்தான் உங்களுடைய மிகப் பெரிய சொத்து.

உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.



 

Sunday, June 17, 2012

மன மகிழ்ச்சியையும் ஏமாற்றமும்


பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒன்றை ஒன்றுச் சார்ந்து ஏதாவது ஒன்றின் பக்கம் தேவையுடையதாகவே வாழ்கின்றன. அவ்வாறு தேவை பூர்த்தியாகும் போது மன மகிழ்ச்சியையும்,  மனம் நிறைவு பெறாத போது ஏமாற்றம் என்ற தத்துவத்தையும் தன்னுள் நிலை நிறுத்துகிறது.

ஆம்! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் அவற்றில் சிலவற்றை அவன் பெற்றுக்கொள்கிறான், சிலவற்றைத் தவறவிடுகிறான். இவ்வாறு நிகழ்வதெல்லாம் இறைவனின் செயல் என எண்ணும்போது, இன்பம் வரும் போதும், துன்பம் வரும் போதும் அவன் அதனை உற்சாகமாக எதிர் நோக்குவான். மனித வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி நிகழ்கிறது.

தன்னை வணங்குவதற்காகவே மனிதனை படைத்த இறைவன் அவனை அறிவற்றவனாக வாழச் செய்யவில்லை மாறாக சிந்தித்துணரும் சிற்பியாக அவனை தோற்றுவித்துள்ளான். மேலும் இறைவன் மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளைப் பற்றியும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்து விட்டான்

வாழ்வில் நிகழும் ஒவ்வொரு வினாடியும் அழகானதாகவும் அலங்கோலமானதாகவும் நாம் மாற்றிக் கொள்வது நம் மனநிலையால் தான். சில நேரம் [ மன மகிழ்ச்சியின் போது] இவ்வுலகத்திலுள்ள அனைத்தும் கண் முன் அழகாகத் தோன்றும். மறுநேரம் [மனம் நிறைவு பெறாத போது] உலகமே இருண்டு ஏமாற்றமாகத் தோன்றும் இவ்வாறு நிகழும் போது மனிதன் நிலை குலைந்து தடுமாறுகிறான். அந்நிலையில்தான் இறைநம்பிக்கை என்னும் ஊன்றுகோல் அவனைத் தாங்கி நிலை நிறுத்துகின்றது.

உங்களை விட்டுத்தவறிப் போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும் அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் அதிகம் மகிழாதிருக்கவும். ஒரு மனிதன் எப்போது முழுமையடைகிறான் என்றால் அவன் தன்னைப் பக்குவப் படுத்திக்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளும்போதுதான். எந்த விதமான ஏமாற்றமும் இல்லாமல் மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்துவிட்டால், அவன் வாழ்வு சீராக அமையாது. தன் மனம் போன போக்கில் அவன் வாழ ஆரம்பித்துவிடுவான். அதனால்தான் இறைவன் மனிதன் விரும்பியவற்றில் சிலதை நிறைவேற்றியும் சிலவற்றை தடுத்தும் வைத்துக் கொள்கிறான்.

"நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது" என்பதை, இறைவன் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளான்.

அதாவது மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் மனநிலையைப் பொறுத்தே அமைகின்றது. ஆகையால் வெற்றிக் கிடைக்கும் போது மகிழும் மனம்,      தோல்வியை சந்திக்கும் போது அதனை தாங்கிக் கொள்ள தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

உலகத்தின் அலங்காரங்களை மனிதன் ரசித்துணரும் போது தன்னையே மறந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருக்கிறான். அப்போது அவன் தன்னைப் படைத்த இறைவனை மறந்து அவனுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைத் தவறவிடுகிறான். வாழ்நாள் முழுவதையும் இவ்வாறே அவன் கழித்தால், மறுமை என்ற நிரந்தர வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்த மாட்டான் என்பதை கருத்தில் கொண்டுதான் இறைவன் இவ்வுலக மயக்கத்திலிருந்து அவனைத் தட்டி எழுப்ப சிறிது ஏமாற்றத்தைக் கொடுக்கிறானே தவிர, நிரந்தரமாக அவனை ஏமாற்றத்திலேயே விடுவதில்லை.  யார் இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு எல்லாவற்றையும் இறைவன் அளிக்கிறான்.

மனிதனின் வாழ்க்கை ஒரே சீராக சென்றால், அது அவனுக்கு சுவாரசியமான வாழ்க்கையாக இருக்காது என்பதற்காகத்தான் எதிர்ப்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் இறைவன் ஏற்படுத்தியுள்ளான். ஏமாற்றமாய் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் உறுதியான அஸ்திவாரங்கள். ஆனால் இதனை அறிந்து கொள்ளாத மனிதனோ தன் எதிர்ப்பார்ப்புக்கு மாற்றமாக நடக்கும் போது தன்னையே மாய்த்துக் கொள்கிறான். சிறிது நேரத்தில் எடுத்த கோழைத்தனமான முடிவால் இவ்வுலகிலும் மறுமை வாழ்க்கையிலும் அவதியுறுவதை எண்ணி உயிர் ஊசலாடும் போது வருந்துகிறான்.

இதனையெல்லாம் அறிந்து நாம் தெளிவு பெறுவோமானால்! ஏமாற்றங்களைக் கூட சிகரங்களாக மாற்றி வெற்றி நடை போடலாம்


ருக்கிற செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்தால், நம்முடைய நாட்டின் வறுமை எப்போதும் தீராது. இந்த வறுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி, நியாயப்படியும் தர்மப்படியும் நிறைய செல்வம் சேர்ப்பதுதான்!

தயாராக இருக்கிறவர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன!

எப்போதும், எதற்காகவும் உங்களுடைய அக சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.
 

Thursday, May 24, 2012

காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான வழிமுறைகள்


பெட்ரோல் விலை உயர்வு அதிகரித்தாலும், அலுவலகம், வர்த்தக தேவைகள், சுற்றுலாக்களுக்கு காரை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, காரில் செல்லும்போது சில எளிய நடைமுறைகளை கடைபிடித்தால், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவுமுதல் ஒரேடியாக உயர்த்தப்பட்டுள்ள  நிலையில் இந்த செய்தியை மீண்டும் வழங்கினால் புதிய வாசகர்களுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் சில கூடுதல் தகவல்களுடன் தந்திருக்கிறோம்.


எரிபொருள் சிக்கனத்திற்கான சில டிரைவிங் டிப்ஸ்


1. குறைந்த தூரம் செல்வதற்கு காரை பயன்படுத்துவதை தவிருங்கள். அடுத்த தெருவிற்கு செல்வதற்கும், தேவையில்லாமலும் காரை எடுப்பதை தவிர்ந்துக் கொள்ளுங்கள். நடந்தோ அல்லது சைக்கிளில் செல்ல பழகிக் கொள்ளுங்கள். கொஞ்சம் அதிகம் தூரம் என்றால் மோட்டார்சைக்கிளை பயன்படுத்துங்கள்.

2. சாலையில் உள்ள போக்குவரத்துக்கு தக்கவாறு வேகத்தை கட்டுப்படுத்தி ஓட்டப் பழகுங்கள். அடிக்கடி கியரை மாற்றும்போதும் கூடுதல் எரிபொருள் செலவாகும். கிளட்சையும் தேவையில்லாமல் மிதிப்பதாலும் கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதை நினைவில் கொண்டு டிரைவிங் செய்யவும்.

3. நிறுவனங்கள் கூறியுள்ளபடி, வேகத்திற்கு தக்கவாறு சரியான கியரில் காரை இயக்க பழகிக்கொள்ள வேண்டும். சிலர் கார் ஓட்டுவதில் நான் சூரப்புலி என்பதை காட்டுவதற்காக வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் உடனுக்குடன் கியரை மாற்றி வேகமெடுத்து திறமையை பறைசாற்றுவர். இது தவறான டிரைவிங் என்பது மட்டுமல்ல, எரிபொருள் செலவு கூடுதல் ஆவதற்கு முக்கிய காரணமே இதுவாகத்தான் இருக்கும்.

4.நகரங்களில் டிரைவிங் செய்பவர்கள் சிக்னல்களில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்படுகையில், 25 வினாடிகளுக்கு மேல் தாமதம் ஏற்படும் என்றால் மட்டுமே எஞ்சினை ஆப் செய்யவும். 25வினாடிகளுக்குள் எஞ்சினை ஆப் செய்து, திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது எரிபொருளை மிச்சப்படுத்த முடியாது.

5.புதிய காராக இருந்தால்,தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைத்த கால அளவிலும், பழைய காராக இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சர்வீஸ் செய்து விடுவது புத்திசாலித்தனம். இதேபோன்று, அடிக்கடி எஞ்சின் செக்கப் செய்வதும் 50 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும்.

6.காரை எடுப்பதற்கு முன் டயர்களில் காற்றின் அழுத்தம் சரியான அளவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கிளம்புங்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது, டயர்களில் சரியான அளவில் காற்று பிடிப்பது நல்லது. டயர்களில் காற்றின் அழுத்தம் குறைந்தால், எஞ்சினுக்கு கூடுதல் பளு ஏற்பட்டு 5 சதவீதம் எரிபொருள் கூடுதல் செலவாகும்.

7.சுற்றுலா அல்லது வெளியூர் பயணங்கள் செல்லும்போது, தேவையில்லாத பொருட்களை கேரியர் தலையில் ஏற்றாதீர். கேரியரில் ஏற்றப்படும் பொருட்களின் எடை காரணமாக எஞ்சின் கூடுதல் சிரமத்தை ஏற்பதால் அதிக எரிபொருள் செலவாகும்.

8.நெடுஞ்சாலை பயணங்களின்போது, 60 கி.மீ., வேகத்தில் சென்றால் அதிக எரிபொருள் சிக்கனம் கிடைக்கும். அதற்கு மேல் செல்லும்போது 5 முதல் 10 சதவீதத்திற்கும் கூடுதலான எரிபொருளை எஞ்சின் விழுங்கும்.

9.தேவையில்லாமல் அடிக்கடி பிரேக் பிடிப்பது, காரை நிறுத்துவது போன்றவற்றை தவிர்ப்பதாலும், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். தவிர, அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்ப்பதால், டயர்கள் மற்றும் பிரேக்குளின் ஆயுட்காலமும் நீடிக்கும்.

10.குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசியை ஆப் செய்துவிட்டு செல்லுங்கள்.குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசி ஆன் செய்திருந்தால் எஞ்சின் கூடுதல் எரிபொருளை எடுத்துக்கொள்ளும்.

11. காரின் வேகத்தில்தான் எரிபொருள் சிக்கனத்திற்கான சூட்சுமம் அடங்கியுள்ளது. எனவே, சரியான வேகத்தில் காரை இயக்க பழகிக்கொண்டாலே போதும். அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறமுடியும்.

மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை நினைவில்கொண்டு டிரைவிங் செய்தால்,அடிக்கடி பெட்ரோல் பங்க் கியூவில் நிற்பதை நிச்சயம் தவிர்க்கலாம்.

Thanks to One India


கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு.
 

Friday, May 18, 2012

மரம் வளர்ப்போம்!; ஆனால், கருவேல மரத்தை வேரோடு அழிப்போம்!?


ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தவறாமல் தெரியும் காட்சியில், கருவேல மரங்களுக்கு முதலிடம் உண்டு. கல்லூரிகள், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துமவனைகள், கலெக்டர் அலுவலகம், கண்மாய் நீர் நிலைகள், புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் பாகுபாடின்றி படர்ந்து வளரும் உரிமை கருவேல மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டம் வறட்சி மாவட்டமாக முத்திரை குத்தப்பட்ட நாளிலிருந்து, அதற்கான முக்கிய பங்காக கருவேல மரங்களே இருந்து வருகின்றன. பயனற்ற தாவரமாக கருதப்பட்ட இவற்றை, தற்போது பணம் கொழிக்கும் பொருளாக பாவித்து வளர்க்கத்தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு இங்கு கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு வந்தாகிவிட்டது. இருந்தும் இந்த கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பை ஒருசிலரை தவிர பலரும் உணரவில்லை. இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைக்கும் மூல காரணமாக இருப்பவை இந்த கருவேல மரங்கள் தான். புவிவெப்பமயமாகி வருவதற்கு பேருதவியாக இருப்பவை இந்த கருவேல மரங்களே. அதன் பிடியில் சிக்கி தவித்து வரும் இம்மாவட்டங்கள், எப்படி மீண்டு வரப்போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஐந்தறிவு உயிரினங்களின் புறக்கணிப்பு:
கருவேல மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது, சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே, இதன் மீது எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை. ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் (ஆடு, மாடுகள் தவிர) அனைத்தும், கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன. இதை அறியாமல் மனிதர்கள் தான், தற்போது கருவேல மரங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளும் தங்களை தான் சேரும் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.
ஆமோதித்தது அறிவியல்:
கருவேல மரங்கள் குறித்த கருத்துகளை பாட்டி கதைகள் என நினைப்பவர்களுக்கு, அவற்றின் ஆபத்தை அறிவியலும் உணர்த்தியுள்ளது. கருவேல மரங்கள் ஆக்சிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் சுற்றுப்புற காற்று மண்டலம் மாசுபடுகிறது. மாசுபடுகிறது என்பதை விட நச்சு தன்மைக்கு மாறுகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு காற்றை மாசுபடுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. இவை அனைத்தும் அறிவியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட தகவலாகும். அதன் பிறகும் கருவேல மரங்கள் வளர்ச்சியை வேடிக்கை பார்த்து வருவது, நமது சந்ததிகளுக்கு நாமே தீ வைப்பதற்கும் சமமாகும். இன்றுள்ள நிலைப்படி, ராமநாதபுரத்தின் வறட்சி நிலை, இன்னும் 10 ஆண்டுகளில் இருமடங்காகும் வாய்ப்புள்ளது. இதை அனுபவசாலிகள் மட்டுமல்ல, அறிவியல் ஆய்வாளர்களும் ஆமோதித்து வருகின்றனர். இருந்தும் பொதுமக்கள் தரப்பில் இது குறித்த புரட்சி எப்போது வரப்போகிறது என்பது தான் கேள்வி.
கொடூரமும், கோரமும்:
பட்டா, புறம்போக்கு நிலங்களில் கம்பீரமாய் காட்சி தரும் கருவேல மரங்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆனால் அதன் வேர் செய்யும் வேலைகளை நாம் அறிந்திருப்பதில்லை. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அடுத்தவர் உயிரை உறிஞ்சி வாழ்பவர்களை சுயநலக்காரர்கள் என நாம் அழைக்கிறோம். நமது நீரை உறிஞ்சி வாழ்ந்து, நமக்கே உலை வைக்கும் இந்த கருவேல மரங்களை என்னவென்று அழைப்பது? நிலத்தடி நீரை முடிந்த வரை இவை உறிஞ்சி விடுவதால், பூமி தானாகவே வறண்டு விடுகிறது. இதை அறியாத நாம் வருணபகவான் மீது பழியை போட்டு, பகைத்து வருகிறோம். கருவேல மரத்தின் இந்த கொடூரம், தமிழகத்தில் தென் மாவட்டங்களில்தான் அதிகம் அரங்கேறி வருகிறது.
காற்றையும் விட்டுவைக்கவில்லை:
நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேலமரங்களின் தாகம் அத்துடன் நிறைவடைவதில்லை. தன்னை சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாததாகவும், நிலையானதாகவும் மாறிவிடுகிறது. தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் கருவேல மரங்களால் அபகரிக்கப்படுவது அதிக அளவில் உள்ளது. இதை அறியாமல் கருவேல மரங்களை நாமே வளர்த்து வருகிறோம் என்பது தான் வேதனையிலும், வேதனை. நிலம், நீர் வரிசையில் கருவேல மரங்கள் காற்றையும் விட்டு வைக்கவில்லை. பஞ்சபூதங்களையும் ஏதாவது ஒரு வகையில் பதம் பார்த்து வரும் கருவேல மரங்களுக்கு முடிவு கட்டும் நாள் விரைவில் வரவேண்டும். நம்நாட்டின் மண்ணின் தன்மையை பாதிக்க, வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த கருவேல மரங்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாகவே கருவேல மரங்களின் செயல்பாடுகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் இந்த அளவு கருவேல மரங்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் ராமநாதபுரத்தில் காணப்படுவதை போல வேறு எங்கும், இத்தனை மரங்கள் தென்பாடாது.
"வளர்ப்போம்' கோஷத்தில் மாற்றம்!:
உலகம் ஒட்டுமொத்தமாக வெப்பமயமாகி வரும் நிலையில், அதை தடுக்க மரங்களை வளர்க்க அரசு மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி உலகம் முழுவதும் மரங்களை வளர்க்க கோஷங்கள் எழுப்பபடுகிறது. இந்த நேரத்தில் கருவேல மரங்களை மட்டும் அழியுங்கள் என்று சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்துள்ளது. மரங்களுக்குரிய தன்மையை களங்கப்படுத்தும் இந்த கருவேல மரங்களால், புவியில் ஜீவராசிகள் சந்திக்கப்போகும் பிரச்னைகள் நிறைய உள்ளது. "மரம் நட விருப்பமில்லை,' என, நினைப்பவர்கள், நீங்கள் என்றால், கருவேல மரங்களை அழிப்பதற்காவது முன்வாருங்கள். தென்மாவட்டங்களில் மரம் நடுவது அவசியம் என்றாலும், அதே அளவுக்கு கருவேல மரங்களை அகற்ற வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில் "மரங்களை வளர்ப்போம் கோஷத்தில், "கருவேல மரங்களை அகற்றுவோம் என்ற, கோஷமும் இணைக்கப்பட வேண்டும்!.
வெளிநாட்டில் கெட் அவுட்:
உலக ஆட்சி, அரசியலில் முத்திரை பதித்து வரும் அமெரிக்காவில், கருவேல மரங்களை வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவிரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டிருக்கும், அதில் முதலிடம் நம்ம ஊர் கருவேல மரங்களுக்கு என்பதை நாம் இந்த நேரத்தில் அறிய வேண்டும். அமெரிக்கர்களை போல வாழ நினைப்பது மட்டும் போதாது, அவர்களின் செயலையும் கடைபிடிக்கலாமே. இங்கோ ரோட்டின் இருபுறத்திலும் கருவேல மரங்கள், வீட்டின் வேலிகளாக கருவேல மரங்கள், என, முழு புழக்கத்தில் உள்ளனர். வெளிநாடுகளில் "கெட் அவுட்' சொல்லப்பட்ட, கருவேல மரங்களுக்கு இங்கு "வெல்கம்' கூறி, நமக்கு நாமே வேட்டு வைக்கிறோம்.
கேரள குளுமைக்கு காரணம் என்ன?:
ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டவாசிகள்; கோடை சுற்றுலாவுக்கு கொடைக்கானல், ஊட்டி அல்லது கேரளாவுக்கு செல்வது வழக்கம். காரணம் அவையெல்லாம் இங்குள்ளவர்கள் பார்க்க முடியாத குளிர்ந்த பிரதேசங்கள். கேரளாவை எடுத்துக்கொண்டால், கருவேல மரங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் முழுமையாக பரப்பிய மாநிலமாகும். இதனால் அங்கு கருவேல மரங்களை காணமுடியாது. அதேபோல் தமிழகத்திலுள்ள கருவேல மரங்களை அகற்றினால், நமது மாநிலமும் கேரளவின் பொலிவுக்கு திரும்பும். கடலோர மாவட்டமாக ராமநாதபுரம் இருந்தும், போதிய மழைப்பொழிவு இல்லை என்றால், அதற்கு காரணம் கருவேல மரங்களின் தலையீடே ஆகும்.
காசு செய்யும் வேலை:
உதாசீணப்படுத்தப்பட்ட கருவேல மரங்களின் விறகுகள், விற்பனையில் நல்ல லாபத்தை தருகின்றன. இதை கருத்தில் கொண்டு பலரும் கருவேல மரங்களை வளர்க்க தொடங்கிவிட்டனர். அதற்கு ஏற்ப சூழல் இங்கு தாமாகவே அமைந்துவிட்டதால், விவசாயிகள் பலரும் கருவேல மரங்களை விரும்புகின்றனர். எந்த செலவும் இல்லாமல், எளிதில் லாபம் கிடைக்கும் வியாபாரமாக கருவேல மரங்கள் மாறிவிட்டன. லாபத்தை கணக்கிடுபவர்களுக்கு அதன் பின்னணியில் உள்ள சோகத்தை அறிவதில்லை. கரி மூட்டம் போட்டு மேலும் புகையை கிளப்பி, காற்றை மாசுபடுத்துகின்றனர். இருந்தும் கெடுத்தது போதா தென்று, இறந்தும் காற்றை மாசுபடுத்தும் வேலையை கருவேல மரம் தெளிவாக செய்கிறது. பணத்தின் மீதுள்ள மோகத்தில் நம்மவர்களும், கருவேல மரங்களை நம்பி விவசாயத்தை கைவிட்டனர். இன்று பல விளைநிலங்களில் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆண்டு கணக்கில் வளரச்செய்து, அறுவடைக்கு காத்திருக்கும் பக்குவத்திற்கு இங்குள்ளவர்கள் பழகிவிட்டனர். ­­­
வளம் காண அணுகுங்கள் வனத்துறையை...:
தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் கிடைக்கும் இந்த மரக்கன்றுகளை, அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வளர்த்தால் நிச்சயம் இப்பகுதி பசுமையாக மாறும். ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வகையில் வளரும் தன்மையுடைய மரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்டோர், தங்கள் பகுதியின் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தேவையான மரக்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம். பிற மாவட்டங்களில் எத்தனையோ பேர் இத்திட்டத்தை பின்பற்றி, மரங்களை வளர்த்து வருகின்றனர். நம்மாவட்டத்தில் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது. இனியாவது பிரயோஜனம் உள்ள மரங்களை தேர்வு செய்து நட, மாவட்டவாசிகளும், விவசாயிகளும் முன்வர வேண்டும்.
கருவேல மரங்கள் சார்ந்த தொழிலுக்கு தேவை தடை:
தென் மாவட்டங்களில் கருவேல மரங்கள் சார்ந்த பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. இவை நாம் பெருமைப்பட வேண்டிய விசயம் அல்ல. விறகு கரி, விறகு, வேர் கட்டை, தூர் கட்டை, வேலி கம்புகள் என கருவேல மரங்களின் பாகங்களை பிரித்து விற்பணை செய்கின்றனர். தனிநபர் லாபத்திற்காக ஒட்டு மொத்த மாவட்டமே பழியாவதை தடுக்க வேண்டும். அதற்காக இது போன்ற கருவேல மரங்களை சார்ந்த தொழிலுக்கு மாவட்டத்தில் அனுமதி மறுக்க வேண்டும். உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் இது போன்ற தொழிலை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து வந்து, இங்கு முகாமிட்டு, மாவட்டத்தின் வறட்சிக்கு வழிகாட்டும் விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். வெப்பமயமாவதால் குறிப்பிட்ட ஆண்டுகளில் உலகம் பெரிய இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ராமநாதபுரத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போது, முன்கூட்டியே இங்கு பாதிப்புகள் வரலாம், என்பதால், இங்கு இது போன்ற கெடுபிடிகள் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் குரல் இல்லை...: வறட்சி, பின்தங்கிய மாவட்டம் என தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், எதனால் இந்நிலையில் உள்ளது என்பதை அரசுக்கு தெரிவிப்பதில்லை. முழுக்க கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள தம்மாவட்டத்தை, சீரமைக்க எந்த குரலும் தரவில்லை. மாறாக கண்மாய்களில் விளைந்த கருவேல மரங்களை ஏலம் எடுப்பது, மற்றும் விற்பதில் தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு நாட்டம் செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் மாவட்டத்தில் கருவேல மரங்கள் வளர்வதை தான் மக்கள் பிரதிநிதிகள் விரும்புகின்றனர். நம்மை நாமே காக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பொதுமக்களே இவற்றை ஒழிக்க முன்வர வேண்டும்.
ஆளுக்கு ஒரு கருவேல மரத்தை வெட்டி அழிப்போம்!,
பயனுள்ள இதர பல நல்ல மரக்க்கன்றுகளை  நடுவோம்!.
நன்றி: கருவேல மரம் தொடர்பான இந்த ஆச்சரியமான தகவலை அறிய உதவிய செய்தித்தாள்கள், புத்தகங்கள், இ-மெயில் மற்றும் இணைய தளங்களுக்கு நன்றி.
. சரவணன்
கல்பாக்கம்
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...