Total Pageviews

Saturday, February 27, 2016

எந்த விலங்குக்கும் தொப்பையில்லை ..........................

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து


“சீ மிருகமே!”/
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே
கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்
கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை
எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்
அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்
இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு
மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
நீ மாண்டால் …
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
**
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது


” சீ மனிதனே !”


Thanks to Srinivasan Krishnamoorthy

திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:

திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:
=============================

திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம்.மணம் மலரினின்று தோன்றுவது.திரு என்பது இங்கு அடைமொழி.மணத்தை நுகர்வோன் மணமகன்.மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:
=====
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்கு தாலி என்ற பெயர் வந்தது.தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்
தாலி செய்ர்.

அருகு-மணை எடுத்தல்:
==================

தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்துக் கூறுவர். முற்காலத்தில் அருகம் புல்லை மணமக்கள் மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ
வாழ்வீர் என்று வாழ்த்துவர்.

"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம்.இதன் உட்பொருள் அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும். மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழை பெய்தால் மீண்டும் தழைத்து வளரும்.இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.

பிற்காலத்தில் அருகுதூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத்தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள்
ரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.

ஆயினும் மணமக்கள் மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

முகூர்த்தக்கால் நடுதல்:
========================

முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர்.ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல்:
========================

மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல்.அதாவது அரச மரத்தின் கிளையையும் பேய்க் கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச்செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும் மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும்,விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்து போய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச் செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:
============================

கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன.உலக வாழ்விற்கு இரு கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

திருமண வேள்வி:
==============

அத்தி,ஆல்,அரசு,மா,பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும்.மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூடத் தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக்கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள்
சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

பாலிகை இடுதல்:
=============

நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று.அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்:
==========================

இது மிகத் தொன்மையான பழக்கமாகும்.கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன் வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள் என்பதே இதன் பொருள்.

அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல்
போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.

சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:
============================

மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச் சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும் மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப் பூவுலகைக் குறிப்பதாகும்.

வெற்றிலைபாக்கு மாற்றுதல்:
=======================

மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்கு கொடுக்கின்
மகனுக்கு என இருவிட்டாரும் கூறி ஏ ழு பாக்கு கள் ஏழு வெற்றிலைகள் வைத்து மாற்றுதல் எழுவகை பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலர் முன்னிலையில் உருதியளிப்பதாகும் .

உறவின் முறை விளக்கம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~

கணவன், கொழு
ந்ன்
~~~~~~~~~~~~~~~~~~
கண் அவன் பெண்ணுக்கு கண் போன்றவள் என்பதாகும் .நம்மை நல்வழிசெல்லும் கண்ணைபோல் பெண்ணை நல்வழி படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவள் கணவன் என்பதாகும்
கொழுந்ன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும் .கோடி படர்ந்து உயர்வதற்கு கொழு கொம்பு எப்படி இன்றி அமையாததோஅதே போல் பெண்மைக்குப் பாதுகாவளுக்குரிய ஆண்மகன் என்பதாகும்

மனைவி
~~~~~~~~

மனைவி துணைவி இல்லாள் இச்சொற்கள் இல்லநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனாவாகும் மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்

சைபர் க்ரைம்-டெக்னாலஜியை மிக மிக மிகக் கவனமாகப் பயன்படுத்துவதுதான்...

உங்கள் அந்தரங்கம் ஊருக்கே வெள்ளிச்சம் திடுக்கிட வைக்கும் டெக்னாலஜி பயங்கரம் - ஒரு எச்சிரிக்கை பதிவு !

சென்னையைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தலைவிக்கு, தெரியாத எண்ணில் இருந்து தொடர் மொபைல் அழைப்பு. ‘நீங்க இன்னிக்கு ரெட் கலர் புடவையில சூப்பரா இருந்தீங்க’, ‘வெள்ளை சுடிதாரில் நீங்க தேவதை மாதிரி இருந்தீங்க’, ‘இன்னிக்கு ஏன் டல்லா இருக்கீங்க?’, ‘ஒருநாள்கூட உங்களைப் பார்க்காம என்னால் இருக்க முடியல’ என்று அந்த எண்ணில் வழிந்த ஆண் குரல் இவர் நிம்மதியைப் பறிக்க, கணவரிடம் விஷயத்தைச் சொல்லி, தம்பதி காவல் நிலையம் சென்றனர். சைபர் க்ரைம் செல்லில், அவர்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் அட்டெண்டர் அவன் என்பது தெரிய வந்தது. குற்றவாளி கைதானான். தொழில்நுட்ப வளர்ச்சியால், பெண்கள் கண்ணுக்கே தெரியாத காமக் கள்வர்களும் எளிதில் தொடர்புகொள்ளும் வெளிக்கு வருகிறார்கள்!’’

- இந்த விஷயத்தை நம்மிடம் பகிர்ந்தவர், ‘நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ்' எனும் தனியார் நிறுவனத்தின் கூடுதல் பொது இயக்குநர் அமர் பிரசாத் ரெட்டி. இங்கே, தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதுகாப்பின்மையை, இன்னும் பல உண்மைகளுடனும், உதாரணங்களுடனும் விளக்குகிறார். ஒவ்வொன்றும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அனுபவம்!

எங்கே பிரைவஸி ?

‘‘நம் எண்ணில் இருந்து இன்னொரு எண்ணுக்குப் பேசும் அழைப்போ, அனுப்பும் குறுஞ்செய்தியோ, பகிரும் புகைப்படமோ... நமக்கும் அந்த நபருக்கும் இடையே மட்டுமேயான தகவல் தொடர்பு என்று நினைத்தால், அது முட்டாள்தனம். நம் எண்ணில் இருந்து மற்றொரு எண்ணுக்குத் தொடர்புகொள்ளும் செய்தி, முதலில் சம்பந்தப்பட்ட நெட்வொர்க்கின் தரவுதளத்துக்குச் செல்கிறது. அங்கிருந்துதான் அது, அந்த எண்ணுக்குச் செல்கிறது. அந்த நெட்வொர்க்கில் பணிபுரியும் நபர் நினைத்தால், அதை உலகின் கண்களுக்குத் தெரியச் செய்யலாம். அழைப்பு, மெசேஜ், சாட் போன்ற தன் வாடிக்கையாளர்களின் நெட்வொர்க் தகவல்களை, அரசாங்கம் கேட்டால் ஒழிய, தனியாருக்கு எந்த நெட்வொர்க் நிறுவனமும் வழங்கக்கூடாது என்பதுதான் விதி. ஆனால், தவறு செய்ய நினைப்பவர்கள் யாரும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.

தொழில்நுட்பத் தகவல் திருட்டில் தடைசெய்யப்பட்ட கருவிகள் இன்று கள்ளப் புழக்கத்துக்கு வந்துவிட்டன. இதன் மூலம், இரு மொபைல் எண்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகள் தொடங்கி, அந்த மொபைல்களில் உள்ள தகவல்கள் வரை அனைத்தையும் எளிதாகத் திருட முடியும். இப்போது சொல்லுங்கள்... பிரைவஸி என்ற ஒன்று இங்கிருக்கிறதா என்ன?!

ஹைடெக் திருட்டு!

‘கீ -லாக்கர்’ என்று சொல்லக்கூடிய மிக மிகச் சிறிய வைஃபை டிவைஸ் ஒன்றை, துப்புரவுப் பணியாளர் மூலம் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ கணினியின் கீ-போர்டில் பொருத்திவிட்டார்கள் மோசடி நபர்கள். மறுநாள் காலை சி.இ.ஓ தன் கணினியை ஆன் செய்ய, அந்த அலுவலகத்துக்கு வெளியே ஒரு காருக்குள் இருந்தபடி, அவர் தன் கணினியில் டைப் செய்யும் ஒவ்வொன்றையும் தாங்கள் பொருத்திய வைஃபை டிவைஸ் உதவியோடு இங்கே தங்கள் கணினியில் பார்த்தது அந்த திருட்டுக் கும்பல். உடனே அவரது தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, ‘சார்... உங்க நெட் பேங்கிங் பாஸ்வேர்டை உடனே மாத்திடுங்க... ஃபார் செக்யூரிட்டி பர்பஸ்’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள். அவரும் உடனே வங்கி வலைதளப் பக்கத்துக்குச் சென்று யூசர்நேம், பழைய பாஸ்வேர்டு, புதிய பாஸ்வேர்டு போன்றவற்றை டைப் செய்ய.. அது அப்படியே இவர்களது கணினியில் தெரிய... அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த அனைத்துப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு தப்பிவிட்டது திருட்டுக் கும்பல். ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-வின் செக்யூரிட்டியே இந்த நிலையில் இருக்கும் போது, நம் கணினியின் செக்யூரிட்டியை என்ன வென்று சொல்ல?!

`வலை' குழந்தைகள்!

இன்று குழந்தைகளுக்காக ஆன்லைனில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிஃப்ட் காம்படிஷன், மதர் சர்ப்ரைஸ் கிஃப்ட் போன்ற அந்தப் போட்டிகளில் ஈர்க்கப்பட்டு பரிசுக்காக விளையாடும் குழந்தைகள் மூலமாகவே, அவர்கள் நண்பர்களையும் அங்கு வரவழைக்கிறார்கள். ‘அப்பா, அம்மா விவரங்கள், தொடர்பு எண்கள், ஸ்கூல், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ டைம் ஹாபி, அவுட்டிங்’ போன்ற தகவல்களை கேட்டுப் பெற்று, அவர்கள் பெற்றோரின் தொழில் சம்பந்தமான பிசினஸ் விளம்பரங்களை அவர்களுக்கு அனுப்புவது தொடங்கி, குழந்தை கடத்தல் வரை திட்டமிடப்படுகிறது என்பது அதிர்ச்சியான உண்மை.

நம் பிள்ளைகளை இணையத்தில் இருந்தும், இணையத்தால் விஷமாகிப் போன சகாக்களிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டிய நம் பொறுப்பைத்தான் அதிக மாக்கிக்கொள்ள வேண்டும்.

எச்சரித்தாலும்...

ஒரு கல்லூரிப் பெண்ணின் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் 4 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ‘இவர்கள் அனைவரையும் உனக்குத் தெரியுமா’ என்றால், அசட்டை யாக தோளை உலுக்குகிறாள். தான் நான்காயிரம் பேரால் கண்காணிக்கப்படுவதில், அதில் உள்ள அயோக்கியர் களின் எண்ணிக்கையை, அவர்கள் அவளுக்கு விளைவிக்கக்கூடிய ஆபத்தையெல்லாம் அவள் சிந்திக்கவில்லை. ‘ஜஸ்ட் ஃபார் ஃபன்’ என்கிறாள்... ஒருநாள் வீட்டில் யாருமில்லாதபோது, ‘சிங்கிள் அட் ஹோம்...’ என்று ஸ்டேட்டஸ் தட்டிய ஒரு பெண்ணை, அவள் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் இருந்த ஓர் அந்நியன் சீரழித்த கதை தெரியாமல்.

ஆளே இல்லை!

ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணைப் பற்றிய ஆபாச, அவதூறு வீடியோ பரவினால், அதை உடனடியாகத் தடுக்க புகார் அளிக்க, இந்தியாவில் ஒரு நபரைக்கூட ஃபேஸ்புக் நிறுவனம் நியமிக்கவில்லை. அயர்லாந்தில் உள்ள ஃபேஸ்புக் மையத்தில்தான் புகார் அளிக்க முடியும். அதற்கு முன்பு நம் நாட்டு நீதிமன்றத்தில் ஆர்டர் வாங்க வேண்டும். அதை அவர்கள் நாட்டு நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இதையெல்லாம் செய்துமுடிக்க குறைந்தது 15 நாட்கள் ஆகும். சில நிமிடங்களில் பல்லாயிரம், பல லட்சம் ஷேர்களை நிகழ்த்தும் நம் ‘நல்லவர்கள்’ தேசத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கையே அந்த வீடியோ வால் முடங்கிவிடும். இதை எல்லாம் உத்தேசித்துதான், ‘எங்கள் நாட்டுக்குள் ஃபேஸ்புக்கே வரக்கூடாது’ என்ற முடிவெடுத்த சீனா, இன்றுவரை ஃபேஸ்புக்கே இல்லாத நாடாக இருக்கிறது.

ஆபாச வீடியோக்கள்... அரசின் நடவடிக்கை என்ன?

வலைதளங்களைவிட, செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்கள் தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். அரசு நினைத்தால், நெட்வொர்க் நிறுவனங்களின் கடி வாளத்தை இறக்கி, ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதற்கு தடை விதிக்கலாம், தடுக்கலாம். ஆனால், அதிக மெமரி கொண்ட ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்வதன் மூலம், அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்வொர்க் நிறுவனங்கள், அதில் ஒரு பங்கை அரசுக்கும் கொடுத்து அதை ‘ஆஃப்’ மோடில் வைத்திருக்கின்றன. ஆக, நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் அரசும் மறைமுகமாக துணை போகிறது என்பதே உண்மை.''

போதிய வசதிகள் இல்லாத சைபர் க்ரைம்!

இணைய அட்டூழியங்களுக்குத் தண்டனை கொடுக்க காவல்துறையில் சைபர் க்ரைம் எனும் பிரிவு இருக்கிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்ப விவரங்கள் தெரிந்தவர்கள் இங்கே போதுமான அளவில் பணியமர்த்தப்படுவதில்லை. 7 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் தற்போது ஆயிரத்தில் மட்டும் சைபர் க்ரைம் போலீஸார் இருந்தால், பிரச்னைகளை எப்படி விரைந்து முடிக்க முடியும்?

ஆக, சமூக வலைதளங்களுக்கான கடிவாளத்தின் சாத்தியத்தன்மை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. பாதுகாப்பு எல்லைக்குள் நம்மை நிலைநிறுத்தும் பொறுப்பும், நம் கைகளிலேயே! எனவே, டெக்னாலஜியை மிக மிக மிகக் கவனமாகப் பயன்படுத்துவதுதான்... நமக்கிருக்கும் ஒரே பாதுகாப்பு!

பாதுகாப்பு டிப்ஸ்!

இ-மெயில் பாஸ்வேர்டு, டெபிட் கார்டு பாஸ்வேர்டு போன்றவற்றை பொது இடத்தில் அலைபேசியில் சொல்வது, செல்லில், மெயிலில் பதிவது வேண்டாம். எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் சிக்கலான பாஸ்வேர்டாக வைப்பதுடன், அடிக்கடி அதை மாற்ற வேண்டும்.

மொபைலில் தேவையற்ற ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம். சில ஆப்ஸ்கள் மிக எளிதில் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மொபைலில் உள்ள தகவல்களைத் திருடி அனுப்பும்.

புகைப்படங்கள் மார்ஃபிங்கால் சீரழிக்கப்படலாம் என்பதால், சமூக வலைதளங்களில் புகைப்படங் களை பதியாதீர்கள். பெர்சனல் விஷயங்கள் பற்றிய ஸ்டேட்டஸ் பதியாதீர்கள்!

மால், தியேட்டர், பொருட்காட்சி போன்ற இடங்களில், ‘குலுக்கல் பரிசு’ என்று உங்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்யச் சொல்லும்போது, தவிர்த்துவிடுங்கள்.

ஹோட்டல், மால், தியேட்டர் என்று இலவச வைஃபை இணைப்பு உள்ள இடங்களில் மிகக் கவனமாக இருங்கள். இதுபோன்ற இடங்களில் வைஃபையை ஆன் செய்தாலே போதும், உங்கள் கைபேசியில் உள்ள தகவல்கள், புகைப்படங்கள் அனைத்தும் திருடப்படலாம்.

Friday, February 26, 2016

இயற்கை முறையில் நரைமுடி மறைய !


தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர போகாது அப்படியே இருக்கும்.

அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி முடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

ஹென்னா

ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.
நெல்லிக்காய்

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

வெந்தயம்

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.

நெய்

நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்க முடியும்.

மிளகு

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

ப்ளாக் டீ

1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.
e

Thursday, February 25, 2016

அகல் விளக்கு

கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் 

1). அகல் விளக்கு = சூரியன் ஆகும்

2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்

3.) திரி = புதன்

4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு

7).ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கர =சனி

8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை);
அதாவது ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம்ஆசைகள் நம்மை அழிக்கிறது ; 

மோட்சம் கிடைக்காமல மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது.

இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

பாசம், அன்பு !

அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.

அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான்.

மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.

அதற்கு அவன் சொன்னான், இல்லை எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை என்றான். மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம் அவனிடம் இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல் என்றது. அவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. அதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.

மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. அவன் சொன்னான் என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.

அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.

இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான். வாழ்கவளமுடன்!!!

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..



 கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..

1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர்
எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில்,   தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய
பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5. எவ்வளவு பெரிய  சண்டை  என்றாலும்  உங்கள்
இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின்  குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது. தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6. மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம்
கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்.

9. கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள்.

திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித்
தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள்
சமையலுக்காக. பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல. பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய்   இருக்கும்  வீடு  சொர்க்கம்           ஆவதும்,
சொர்க்கமாய்  இருந்த  வீடு நரகம் ஆவதும் கணவன்
மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.



தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...