Total Pageviews

Tuesday, August 23, 2022

வாழ்க்கை என்பது என்ன!

 kannadasan(1).jpgKannadhas.jpg

கவியரசர் கண்ணதாசன் அனுபவித்து எழுதிய இக்கவிதையைப் படித்தால் நிச்சயம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வரும். ரசித்துப் படிப்பதோடு நின்றுவிடாமல் அனுபவித்து வாழவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்!
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!


அறிவின் வருவது யாதெனக் கேட்டேன்!
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!


மனையாள் சுகம் எனில் யாதெனக் கேட்டேன்!
மணந்து பாரென இறைவன் பணித்தான்!


பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்!
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!


முதுமை என்பது யாதெனக் கேட்டேன்!
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!


இறப்பின் பின்னது யாதெனக் கேட்டேன்!
இறந்து பாரென இறைவன் பணித்தான்!


அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்!


ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
அனுபவம் என்பதே நான் தான் என்றான் !

 

வாழ்க்கையில் எவருக்கும் எப்பொழுதும் வெற்றி கிடைப்பதில்லை. அதே போல் தோல்வி யாரையும் தொடர்ந்து தழுவுவதில்லை. வெற்றி-தோல்வி, ஏற்றம்-இறக்கம், இன்பம்-துன்பம், வளமை-வறுமை இப்படி எல்லாமே மாறி மாறித்தான் வரும். ஒரு செயலைச் செய்யத் திட்டமிடுகிறோம். சில நேரங்களில் வெற்றியும், சில நேரங்களில் தோல்வியும் கிடைக்கிறது. ஆனால் இரண்டு நிலைகளிலும் நமது மனம் அமைதியாக இருக்க வேண்டும். வெற்றி கிடைத்தால் மமதையில் எழுவதும், தோல்வி ஏற்பட்டால் துவண்டு விழுவதும் சரியல்ல.

நல்லது நடந்தால் சந்தோஷப்படுகிறோம். இல்லை என்றால் வருந்துகிறோம். இரண்டையும் அனுபவிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் நமக்குத் தான் உசத்தியானது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. நினைத்தது கிடைத்தால் சரி. இல்லையென்றால் கோபமோ, பொறாமையோ, வெறுப்போ, கோபமோ, தாழ்வு மனப்பான்மையோ அளவிற்கு மீறிய வருத்தமோ கொள்வது தவறு. அதை மாற்றிக் கொண்டால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். வாழ்க்கை என்பது பல சம்பவங்களின் தொகுப்பு ! இதில் பல்வேறு உணர்ச்சிகளுக்கும் இடம் உண்டு.

ஒவ்வொன்றையும் ஒவ்வோர் அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் உண்ணும் உணவுகளில் பல்வேறு சுவைகளை நாம் அறிவோம். கசப்பும் உண்டு. இனிப்பும் உண்டு. துவர்ப்பும் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. கசப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இவையெல்லாம் ஒரு சுவையிலிருந்து மற்றதை வேறுபடுத்திக் காட்டவே. ஒவ்வொரு சுவையையும் ருசித்துப் புசிக்க வேண்டும்

 சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தீதும், நன்றும் பிறர் தர வாரா!. எந்த நேரத்திலும் நிதானம் தவறினால் பாதிப்பு மற்றவர்களுக்கு அல்ல. நமக்குத் தான். நம் மகிழ்ச்சிக்கு என்றும் குறை வைக்கக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நம் மகிழ்ச்சி மற்றவர்களுக்குக் கெடுதலை விளைவிக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விடிந்தது முதல் நாள் முடியும் வரை பிரச்னைகளுக்கு இடையேதான் வாழ்க்கையே ஓடுகிறது. பெரும்பாலான நேரங்களில் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுவிடுகிறோம். சில நேரங்களில் நம்மால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறோம். அப்போது என்ன செய்யலாம்? குழம்பலாம். ஆனால் குழம்பிக் கொண்டே இருக்கக் கூடாது. தெளிவு ஏற்படாத பட்சத்தில் நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் மாயத்திரையை விட்டு விலகி வெளியே வரவேண்டும். தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருக்கலாம். இதுவே சாலச் சிறந்தது. தீர்வு காணமுடியாத இக்கட்டான நேரங்களில் கீதையின் சாராம்சத்தை நினைவு கூர்ந்தால் அமைதிக்கும், ஆனந்தத்திற்கும் உத்தரவாதம் உண்டு;.

நடந்தது நன்றாகவே நடந்தது. நடப்பது நன்றாகவே நடக்கிறது. நடக்கப் போவது நன்றாகவே நடக்கும்!

பிரச்னைகளின் முடிவில் நமக்குச் சாதகமான முடிவு கிடைக்கவில்லையென்றால் மனக் கசப்பு ஏற்படுகிறது. அதாவது மற்றவர்கள் நம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வில்லை யென்றால் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தமிழ்த் திரைப்படம் என்றால் பழிக்குப் பழி. ஆனால் இதற்குச் சரியான வழி மறப்போம், மன்னிப்போம் என்ற தாரக மந்திரமே.

எந்தவொரு செயலையும் இயந்திரம் போல் செய்தால், செய்யும் காரியத்தின் மீதோ அதன் தொடர்புடையவர் மீதோ வெறுப்பு வந்துவிடுவதை அனுபவபூர்வமாகச் சிலர் உணர்ந்திருக்கலாம். அவ்வப்போது வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இந்தச் சலிப்பு உணர்வைத் தவிர்க்கலாம். மீசையில் மாற்றங்களைச் செய்யலாம். தலையலங்காரத்தில் மாற்றங்கள் செய்யலாம். புதுவகை ஆடைகளை அணியலாம். நிச்சயம் வித்தியாசமான உணர்வு ஏற்படும். வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றி வைக்கலாம். நிலாச்சோறு உண்ணலாம். வசிக்கும் அறையில் தூங்கலாம். சிலருக்கு இதெல்லாம் பைத்தியக்காரத் தனமாகக் கூடத் தோன்றக் கூடும். முயற்சி செய்யுங்கள்.

மகிழ்ச்சியில் திளைப்பதும், துன்பத்தில் துவள்வதும் உங்களிடம்தான் உள்ளது. கடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர்காலத்தை நிச்சயமாகக் கூற முடியாது. நாம் இருப்பது நிகழ்காலத்தில். ஆகவே ஒவ்வொரு நிமிடமும், இல்லை.. இல்லை, ஒவ்வொரு வினாடியும் ஆனந்தமாக வாழப் பழகிக் கொள்ளவேண்டும். அது எப்படி ஆனந்தமாக வாழப்பழகுவது? நமக்குள் நாமே சொல்லிக் கொள்ளவேண்டும். “ஒவ்வொரு வினாடியும் நான் மகிழ்ச்சியில் இருக்க விரும்புகிறேன்”, என்பதை ஆழ்மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்;. அப்புறம் பாருங்கள் துன்பம், கோபம், சோதனை, வெறுப்பு, பொறாமை, பேராசை இவையெல்லாம் உங்களைக் கண்டாலே தலைதெறிக்க ஓடிவிடும்.

மனக்குதிரை எதை எதையோ நினைத்துப் புயலாகப் பறக்கும் போது, கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி நிகழ்காலத்துக்கு அழைத்து வந்து அந்த நேரத்தில் செய்து கொண்டிருக்கும் காரியத்தில் முழு கவனத்தை வைத்தால் நிம்மதி நிச்சயம்என்பது கௌதமபுத்தரின் பொன்மொழி.

ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மகிழ்ச்சியோடு ஈடுபட வேண்டும். அதுதான் முக்கியம்;. வேலை இல்லையென்றாலும் சின்னச் சின்ன வேலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். வேலைக்கா பஞ்சம். எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் தூசி வந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. எங்கிருந்து தான் இந்தத் தூசி வருகிறதோ என்று நாம் தினம் தினம் அங்கலாய்த்துக்; கொண்டு தானிருக்கப் போகிறோம். ஆனால் அதோடு நிற்காமல் தூசி சென்றடையும் தொiலைக்காட்சி, ஜன்னல் ஓரங்களை, பயன்படுத்தாத நாற்காலிகளை, காற்றாடிகளை, குளியலறைக் கண்ணாடிகளை ஈரத் துணியால் துடைத்து அழகு பார்க்கலாம். இந்தக் காரியத்தை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். அதைச் செய்வதற்கு ஓய்வு எடுப்பதே மேல் என்று நினைக்கலாம். ஓய்வு எடுப்பதில் தவறில்லை. கடினமாக உழைத்தால் ஓய்வு தேவைப்படும். அல்லது அடுத்து வரப் போகும் சிரமமான வேலைக்கு ஊக்கமாக இருக்கும் என்றால் ஓய்வு எடுக்கலாம்.   

 

 உண்ணும் போது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் சாப்பிடுவோர் உண்டு. வேலையை நினைத்துக் கொண்டு அப்போதைய கஷ்டங்களை அசைபோட்டுக் கொண்டு சுவையை அனுபவிக்க மறந்துவிடுவோரும் உண்டு. சாலையில் நடந்து போகும்போதும், பேருந்து நிறுத்தங்களிலோ, ரயில் நிறுத்தங்களிலோ காத்திருக்கும் போதும், பயணம் செய்யும் போதும்; நம்மில் பலர் பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியிருக்கிறோம். பச்சைப்பசேல் என்றிருக்கும் செடிகொடிகளைக் கண்டும் காணாதவாறு போய்க் கொண்டிருக்கின்றோம்.

பறவைகள் எழுப்பும் ஒலியும், வண்டுகளின் ரீங்காரமும் நம் காது மடல்களைத் தடவிக் காற்றில் கரைந்து விடுகின்றன. இலவசமான இந்த இசை நாதங்கள் நம்மை வந்தடையத் தயாராய் இருந்தாலும். உள்வாங்கி ரசிக்கும் நிலையில் நாம் இல்லை. இயற்கையின் அழகைக் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நம் மனதில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. காரணம் நம் மனம் அதில் இல்லை. மனத்தில் அன்றைய தினத்தில் அடுத்து வரப்போகின்ற, செய்யப்போகின்ற காரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தக் காரியங்களால் நம் மனம் நிரம்பியிருப்பதால் கண் பார்த்தாலும் கண்ட காட்சிகளை மனதில் பதிவு செய்ய இடமில்லை. இயற்கை நமக்கு அளித்திருக்கும் இந்த இலவச இன்பங்களை அனுபவிக்க எத்தனையோ வாய்ப்பிருந்தும் இப்படித்தான் கோட்டை விடுகிறோம்.

 

ஆனந்தமாக இருக்கப் பல காரணங்கள் இருக்கும் போது ஏதோ ஒன்றை நினைத்து மகிழ்ச்சியான தருணங்களைத் தவறவிடுவது தவறு. ஒருவர் உற்சாகமாக இருக்கிறார் என்றால் அவர் இருக்கும் இடமே மகிழ்ச்சியாக இருக்கும். அதே சமயம் கூட்டத்தில் ஒருவர் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தால், மகிழ்ச்சியாக இருக்கின்ற மற்றவர்களுக்கும் அந்த நோய் பரவி அவர்களையும் பாதிக்கும். அனைத்தையும் அனுபவித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வது சரியான முறையில் வாழ்வதற்கு மட்டுமல்ல. தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு. அனுபவம் என்பது அனைவரும் அனுபவித்துப் பார்க்கவேண்டிய ஒன்று. சுவையை எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியாதோ அப்படித்தான் அனுபவத்தையும் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாது.

 




மனம் !

 


மனதைத் தயார் செய்திடலாம் .

கட்டுப்படுத்த முடியாத மனதை விட மோசமான எதிரி யாரும் இல்லை மனிதருக்கு.

கரைகளைத் தாண்டும் முதலைகளும், கட்டுப்பாடுகளைத் தாண்டும் மனங்களும் தங்கள் பலத்தை இழக்கின்றன.

மனம் இயங்கும் போது இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி மகிழ்ச்சி, இகழ்ச்சி இவற்றை வழங்குகிறது.

மனம் இயக்கமற்று இருக்கும் போது தெளிவு, ஞானம், பேரானந்தம் ஞானத்தையும் கடந்த நிலை ஏற்படுகிறது.

விழுவதற்கு உங்கள் கால்கள் முடிவு செய்தால்,  எழுந்து ஒடுவதற்கு உங்கள் மனதை தயார் செய்யுங்கள்.

விழுவது உங்கள் கால்களாக இருந்தால். எழுந்து
ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்.

ஆயிரம் ரூபாயில் ஆனந்தம் கண்டவனும் உண்டு.

பத்தாயிரம் ரூபாய் பத்தாது என்று சொன்னவனும் உண்டு.

நீங்கள் எடுக்கும் முடிவில் தான் எல்லாம் உள்ளது.

நொடிகளும், நிமிடங்களும் முக்கியமாகும்.
வாழ்வின் போராட்டங்களை எதிர் கொள்பவர்களுக்கு. 

அமைதியும் நிறைவும் தவழும்.

1.அன்புதான்

2.பாராட்டுதான்

3.இருப்பதை நினைத்து   சந்தோஷப்படுவதுதான்

நன்றி ஏன் சொல்ல வேண்டும்.

1. பெற்றுள்ளதை உணர்வதற்காக!

2. இன்னும் தேவையானதைப் பெறுவதற்காக!

3. இருக்கும் நல்லதைத் தக்க வைப்பதற்காக!

நன்றியை எப்படி எல்லாம் வெளிப்படுத்தலாம்!

1. மனப் பூர்வமாக/உணர்வு பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.

2. நல்ல வார்த்தைகளாலும், நல்ல செயல்களாலும் வெளிப்படுத்தலாம்.

3. நன்றி உணர்வையும் உங்களையும் பிரிக்க முடியாதபடி, நீங்கள் பெறப்போகும் ஒன்றிற்கு, பெற்றுவிட்ட உணர்வோடு வெளிப்படுத்தலாம்.

நன்றியை எதற்கு எதற்கெல்லாம் சொல்லலாம்.

1. பிறந்ததிலிருந்து இதுநாள்வரை வளமோடு வைத்திருக்க உதவும் இயற்கைக்கும், மனிதர்களுக்கும்!

2. நம் உயிரை வைத்திருக்கும் ஆரோக்கியமான உடலுக்கும், உடலிலுள்ள உறுப்புகளுக்கும் !

3. இதுநாள் வரை பெற்ற ஆசீர்வாதங்களுக்கும்,  இனி பிரபஞ்சப் பேராற்றல் தரப்போகும் நன்மைகளுக்கும்!

🔸 நன்றியுணர்வோடு இருப்பதால்
என்ன பலன்கள் கிடைக்கும்

1. முதலில் அமைதியும், திருப்தியும் கிடைக்கும்

2. நீங்கள் தேவையானதாக நினைப்பதைவிட, உங்களுக்குத் தேவையானது எதுவோ அதுவெல்லாம் கிடைக்கும்!

3. . வாழ்வின் வளங்கள் அனைத்தும் பெற்றதான மனம் உணர்கின்ற வாய்ப்பு கிடைக்கும்.

Positive Thinking என்றால் என்ன? செயலிலும் நேர்மை, எண்ணங்களிலும் நேர்மை !

 


நேர்மறை எண்ணம்.

எதையும் Negatie ஆக  யோசிக்காமல், இருப்பது.

செயலிலும் நேர்மை, எண்ணங்களிலும் நேர்மை!

சுயநலம் மட்டும் கருதாமல் சமூக நலம் காக்கும் எண்ணங்களும் இந்த catagoryயே என்றேன்.

புரியவில்லையே"என்றார்.

சில வித்தியாசமான examples சொல்கிறேன். எளிதாக புரியலாம்.

1) பறவையை பிடித்து கூட்டில் அடைப்பதை விட, மரம் ஒன்று நட்டால் எண்ணற்ற பறவைகள் கூடுகட்டுமே என்று யோசித்து செயலில் இறங்குதல்.

2) ஒருவருக்கு உதவும் போது பணம் மட்டும் இல்லாமல், அவரே உழைத்து வாழ்க்கையை சிறப்பாக நடத்த வழி உள்ளதா என்று யோசித்தல்.

3) நம்மை காயப்படுத்துவர்களை திருப்பி எப்படி அடிக்கலாம் என்று யோசிக்காமல், ஒதுங்கி கொண்டு, நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடல்.

4) இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் ok. இதிலிருந்து என்ன பாடம் கற்றோம் என்று ஆராய்தல்.

5) வெற்றி மேல் வெற்றி வரும் போது, ஆணவத்தோடு என் முயற்சி என்று எண்ணாமல், இறைவனும் நம்மோடு பயணிக்கிறார் என்று அமைதி காத்தல்.

6) உடல் நலமில்லாத வரை காணும் போது, அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று மனதார எண்ணுதல்.

7) நம்மை சுற்றி இருப்போர், நமக்கு கடமைகளில் உதவுவோர், நமக்கு நல்லது நினைப்போர், அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துதல்.

8) தெருவில் செல்லும் போது, நம்மை கடக்கும், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் etc etc வாழ்த்துதல்!

9) ஹோட்டலுக்கு செல்கிறோம். உணவு அருந்தி விட்டு புறப்படும் போது பரிமாறியவர்க்கு டிப்ஸ் உடன், புன்னகையோடு Thank you சொல்லி பாருங்கள். அவர் அகமும் முகமும் மலரும்.

10) வீட்டில் நமக்கு உதவியாக இருக்கும் Servantsயும், நம்மை நம்பி வருகிறார்கள் என்று கனிவோடு நடத்துதல்.

சொல்லிக் கொண்டே போகலாம்." என்றேன்.

புரிந்தது " என்றார் நண்பர்.


Friday, August 5, 2022

இரத்த சோகை என்றால் என்ன? Anemia [ Tamil ]

 இரத்த சோகை என்றால் என்ன?

இரத்த சோகை என்பது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவுபடுவதே. ஹீமோகுளோபின் என்பது, திசுக்களுக்கு ஒக்சிஜனைக் கொண்டுசெல்லும், இரத்தச் சிவப்பு அணுக்களிலுள்ள (RBC) இரும்புச் சத்து நிறைந்த புரதமாகும்.

ஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குறைவுபடும்போது இரத்த சோகை ஏற்படுகிறது. அதாவது உடலில் போதியளவு ஒக்சிஜன் வழங்கப்படாதிருக்கும் நிலையாகும். இது உடல் வெளிறுதல், களைப்பு அல்லது சோர்வு, மற்றும் உடற் பலவீனத்தை ஏற்படுத்தலாம்.

இரத்த சோகை ஒரு குறுகிய காலத்துக்கு அல்லது ஒரு நீண்ட காலத்துக்கு நீடிக்கலாம். தீவிரம் குறைந்த நிலைமைகளில், உணவு முறையில் ஒரு எளிமையான மாற்றம் தான் சிகிச்சையாக அளிக்கப்படுகிறது. தீவிரம் கூடிய நிலைகளுக்கு மருத்துவச் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

இரத்த சோகைக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

இரத்த சோகைக்கான அறிகுறிகள் அதன் கடுமை, ஹீமோகுளோபின் எவ்வளவு விரைவாகக் குறைகிறது மற்றும் அதற்கான காரணம் என்ன என்பனவற்றை பொறுத்திருக்கிறது. ஒரு பிள்ளையின் உடல் எவ்வளவு நன்றாக ஹீமோகுளோபினின் தாழ்ந்த நிலையைச் சமாளிக்கின்றது என்பதிலும் தங்கியுள்ளது. அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு ஹீமோகுளோபின் தான் காரணமாக இருப்பதால், தோல் வெளிறுதல்
  • உடலில் ஒக்சிஜனின் அளவு குறைக்கப்பட்டதால், உடலில் சக்தி குறைவுபடுதல்
  • உடலில் ஒக்சிஜனின் அளவு குறைந்ததால், உடற்பயிற்சி செய்தபின் அல்லது விளையாடிய பின் விரைவான சுவாசம்

இரத்த சோகைக்கான காரணங்கள் மற்றும் அதன் வகைகள்

இரத்த சோகையில் அநேக வகைகள் இருக்கின்றன. பொதுவாக, காரணங்களின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஊட்டச் சத்து இரத்த சோகைகள்

இரத்த சோகை வகைகளுள் மிகவும் பொதுவானது, இரும்புச் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையாகும். இது உணவில் இரும்புச் சத்து குறைவதால் ஏற்படுகிறது. ஹீமோகுளோபின் தயாரிப்பதற்கு இரும்புச் சத்து தேவை. தாய்ப்பால், இரும்புச் சத்தால் பலப்படுத்தப்படாத பசுப்பால் ஃபோர்முலாக்கள், அல்லது முழுப் பசுப்பால் மாத்திரம் குடிக்கும் குழந்தைகளுக்கு 6 மாதங்களின் பின்னர், இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. உங்கள் குழந்தை இன்னமும் திட உணவு உண்ணத் தொடங்காவிட்டால் குழந்தைகளின் ஃபோர்முலாக்கள் இரும்புச் சத்தால் செறிவூட்டப்பட்டதாயிருக்கவேண்டும்.

முழுமையாக முதிர்ச்சியடைந்த குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆரோக்கியமுள்ள தாய்மார்கள், இரும்புச் சத்து நிறைந்த திட உணவுகள் பரிந்துரை செய்யப்படும் வரையில், 6 மாதங்களுக்குத் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான இரும்புச் சத்தைக் கொண்டிருப்பார்கள். தாய்ப்பாலிலுள்ள இரும்புச் சத்து நன்கு உறிஞ்சப்படும். 6 மாதங்களில் திட உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கும்படி சிபாரிசு செய்யப்படுகிறது. இது தாய்ப்பாலூட்டுதல் மாத்திரமல்ல, ஆனால் சிபாரிசு செய்யப்படும் சமயத்தில் இரும்புச் சத்து நிறைந்த திட உணவுகள் அறிமுகப்படுத்தப்படாவிட்டால், இரத்த சோகையை ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

உணவில் ஃபோலிக் அசிட், விட்டமின் பி 12, அல்லது விட்டமின் ஈ குறைவு படும்போது விட்டமின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை உண்டாகிறது. ஹீமோகுளோபின் தயாரிப்பதற்கு உடலுக்கு, இந்த எல்லா ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன.


நோயினால் ஏற்படும் இரத்த சோகைகள்

அரிவாள்செல் இரத்த சோகை என்பது சிவப்பு அணுக்களை உருக்குலையச் செய்யும் பரம்பரை வியாதியாகும். இந்த உயிரணுக்கள், சாதாரண இரத்தச் சிவப்பு அணுக்களைப்போல உடல் முழுவதும் நன்கு நீந்திச் செல்ல முடியாது. இதனால் உடலுக்கு குறைந்தளவு ஒகிசிஜனே கிடைக்கின்றது.

சிறுநீரகம் செயற்படாமல் போதல், புற்றுநோய், மற்றும் க்ரோன்ஸ் நோய் என்பனவற்றாலும் தீராத இரத்த சோகை ஏற்படலாம். எலும்பு மஜ்ஜை நோய் மற்றும் லூபஸ் நோய் போன்ற தன்னுடல் தாக்கும் நோயினாலும் இரத்த சோகை ஏற்படலாம்.

அப்ளாஸ்டிக் இரத்த சோகை என்பது ஒரு அரிதான மற்றும் கடுமையான நோய். இது உடல் போதிய அளவு புதிய இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். ஒரு பிள்ளை இந்த இரத்த சோகை நோயுடன் பிறந்திருக்கலாம் அல்லது ஒரு வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் ஏற்படலாம் அல்லது ஒரு மருந்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சிலவேளைகளில் இது இரத்தப் புற்றுநோயின் தொடக்க அறிகுறியாகும்.

ஹீமொலிட்டிக் இரத்த சோகை பெரும்பாலும் ஒரு மரபுவழி நோய். இது அதிகளவில் இரத்தச் சிவப்பு அணுக்களை அசாதாரணமுறையில் அழிக்கும்.

இரத்த சோகைக்கான வேறு காரணங்கள்

  • கடுமையான அல்லது தீராத இரத்தக் கசிவினால் இரத்த சோகை ஏற்படும். தீராத இரத்த இழப்பினால் ஏற்படும் இரத்த சோகை, இரப்பைக் குடற் பாதையில் மிகவும் சாதாரணமாகச் சம்பவிக்கும். இது பசுப்பாலிலுள்ள புரதச் சத்தின் ஒவ்வாமையினால் பெரும்பாலும் சம்பவிக்கும்.
  • தைரோயிட் இயக்குநீர் அல்லது டெஸ்டோஸ்டிரோன் இயக்குநீரின் தாழ்ந்த அளவுகள்.
  • குறிப்பிட்ட சில மருந்துகளின் பக்கவிளைவுகள்.

இரத்த சோகைக்கான ஆபத்தான காரணிகள்

இரத்த சோகையை விருத்தி செய்வதற்கான உயர்ந்த ஆபத்திலிருக்கும் சில பிள்ளைகளின் பிரிவுகள் இருக்கின்றன. உயர்ந்த ஆபத்துக்குக் காரணமாகக்கூடிய காரணிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • குறைமாதப் பிரசவம் மற்றும் பிறப்பின்போது எடை குறைவாக இருத்தல்
  • முன்னேற்றமடைந்துவரும் உலகிலிருந்து சமீபத்தில் குடியேற்றம் செய்தல்
  • வறுமை
  • உடற்பருமன் அல்லது தவறான உணவுப் பழக்கங்கள்

இரத்த சோகையின் நீண்ட காலப் பாதிப்புகள்

பிள்ளைகளிலுள்ள சிகிச்சை செய்யப்படாத இரத்த சோகை அவர்களின் வளர்ச்சியில் ஒரு கடுமையான பாதிப்பைக் கொண்டுவரலாம். இரத்த சோகை மூளை விருத்தியடைவது மற்றும் செயற்படுவதைப் பாதிக்கலாம். பெரும்பாலும் இது, கூர்ந்து கவனிப்பதில் பிரச்சினைகள், வாசிக்கும் திறனில் தாமதம், மற்றும் மோசமான பள்ளிக்கூடச் செயற்திறன்கள் என்பனவற்றை விளைவிக்கும்.

இரத்த சோகையைக் குறித்து உங்கள் பிள்ளையின் மருத்துவர் என்ன செய்யலாம்

உங்கள் பிள்ளையின் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவைத் தெரிவிக்கும் ஒரு எளிமையான இரத்தப் பரிசோதனையை உங்கள் மருத்துவர் செய்வார். இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, அளவு, மற்றும் வடிவம் என்பன இரத்த சோகையின் வகையைக் காண்பிக்கும். ஒரு சில இரத்தத் துளிகளினால் ஹீமோகுளோபினின் அளவை விரைவாக அளந்துவிடலாம். இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை இரத்தத்தின் மொத்தக் கனவளவுடன் ஒப்பிட்டும் அளவிடலாம். இந்தப் பரிசோதனை ஹிமட்டோக்றிட் என அழைக்கப்படும்.

உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு உடற் பரிசோதனையையும் செய்வார். உங்கள் பிள்ளையின் சக்தியின் அளவுகள், பொதுவான உடல்நலம் , உணவுகள், மற்றும் குடும்ப வரலாறு என்பனவற்றைப் பற்றியும் கேட்பார்.

இரத்த சோகைக்கான சிகிச்சைகள்

சிகிச்சை, உங்கள் பிள்ளையின் இரத்த சோகை எ​வ்வளவு கடுமையானது மற்றும் அதற்குக் காரணம் என்ன என்பனவற்றைச் சார்ந்திருக்கிறது. பொதுவான சிகிச்சைகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • இரும்புச் சத்தைக் கொடுக்கக்கூடிய மருந்துகள் மற்றும் சப்ளிமென்டுகள்.
  • குழந்தைகளின் இரும்புச் சத்து​ நிறைந்த ஃபோர்மூலா.
  • பாலைக் குறைத்து இரும்புச் சத்தைக் கூட்டுதல் போன்ற உணவு முறையில் மாற்றங்கள். இறைச்சி மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்றவை, இரும்புச் சத்து நிறைந்த உணவுகளுக்குள் உட்படுகின்றன. இறைச்சி சாப்பிடாத பிள்ளைகள் கேல், ஸ்பினாச், கொலாட் க்றீன்ஸ் மற்றும் ஆட்டிச்சோக்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளை அதிகமாக உண்ணவேண்டும்.
  • ஃபோலிக் அசிட் மற்றும் விட்டமின் பி 12 சப்ளிமென்டுகள்.

கடுமையான நோயொன்றினால் உண்டாகும் இரத்த சோகை பின்வருவனவற்றை தேவைப்படுத்தலாம்:

  • சிலகுறிப்பிட்ட வகையான இரத்த சோகைக்கு இரத்தம் ஏற்றப்படும். இவை ஹைப்போபிளாஸ்டிக் இரத்த சோகை, தாலஸ்ஸமியா, மற்றும் ஹீமோகுளோபினோபதீஸ் என்பனவற்றை உட்படுத்தும். அடிக்கடி இரத்தம் ஏற்றுவதனால் உடலில் இரும்பின் அளவு அதிகரித்து விஷம் சார்ந்த பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்தலாம். இரத்தமேற்றுதல்களுடன் உடலிலிருந்து இரும்புச் சத்தை அகற்றும் மருந்துகள் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கப்படலாம்.
  • தொற்று நோயை எதிர்க்கக்கூடிய மருந்துகளினால் சிகிச்சை.
  • எலும்பு மஜ்ஜையை அதிகளவு இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்யச் வைப்பதற்கான சிகிச்சை.
  • மண்ணீரலை அகற்றுதல். பிறப்பு சார்ந்த ஸ்ஃபெரொசைற்றோசிஸ் மற்றும் பிறப்பு சார்ந்த எலிப்ற்றோசிற்றோசிஸ் போன்ற சில நிலைமைகள், மண்ணீரலைக்கொண்டு அதிகளவு இரத்தச் சிவப்பணுக்களை அழிக்கச் செய்கின்றன.
  • ​ அரிவாள்செல் இரத்த சோகை, தலஸ்ஸெமியா, மற்றும் அப்ளாஸ்டிக் இரத்த சோகை போன்ற கடுமையான நிலைமைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை ஒரு தெரிவாக இருக்கலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்

பின்வரும் நிலைமைகளில் உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழைக்கவும்:

  • உங்கள் பிள்ளை அடிக்கடி வெளிறி, களைப்படைந்து மற்றும் விரைவாகச் சுவாசிக்கிறான்.
  • உங்கள் பிள்ளைக்கு இரத்த சோகை இருக்கலாம் என நீங்கள் சந்தேகிக்கிறீர்கள்.

முக்கிய குறிப்புகள்

  • மிகவும் பொதுவாக, இரத்தத்தில் போதியளவு இரும்புச் சத்து இல்லாதிருப்பதால் இரத்த சோகை ஏற்படுகிறது.
  • உங்கள் பிள்ளை அடிக்கடி களைப்படைந்து, பெலவீனமாக மற்றும் வெளிறி இருந்தால் இரத்த சோகைக்காக உங்கள் மருத்துவரைச் சந்திக்கவும்.
  • உங்கள் குழந்தை இன்னும் திட உணவுகள் உண்ணத் தொடங்காவிட்டால் குழந்தை ஃபோர்மூலாக்கள் இரும்பு சத்தால் நிறைந்திருக்கவேண்டும்.
  • இறைச்சி மற்றும் பச்சைக் காய்கறிகள் உட்பட, இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.​​

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...