ஒரு இளைஞர் வேலை தேடி பல்வேறு இடங்களில் அலைந்து கொண்டிருந்தார். எங்கு தேடியும் அவருக்கு வேலையே கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் அவருக்கு சிறிய நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. சிறிது நாட்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்தார். ஆனால் அந்த நிறுவனத்தில் அவருக்கு மேலதிகாரியாக இருந்தவர் சரியான சிடுமூஞ்சி. எந்த ஒரு சிறு தவறு என்றாலும் உடனடியாக சற்றும் தயங்காமல் திட்டி விடுவார். மேலதிகாரியின் அத்தகைய குணம் அந்த இளைஞனுக்கு நாளுக்கு நாள் மன உளைச்சலை கொடுத்தது. வறுமையின் காரணமாக வேலைக்கு சென்றாலும் கூட அவரால் மேலதிகாரியின் குணத்துக்கு ஈடு கொடுத்து அந்த வேலையில் நீடிக்க முடியவில்லை.
தன் வாழ்வில் பிரச்சனை வரும்போது எல்லாம் தன்னுடைய பேராசிரியரிடம் ஆலோசனை கேட்பது அவன் வழக்கம் அந்த வகையில் இந்த விஷயத்தை தன்னுடைய பேராசிரியரிடம் ஆலோசித்தான்..
"ஐயா, எனக்கு நெடு நாட்களாக வேலையே கிடைக்கவில்லை. இப்பொழுதுதான் ஒரு வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலையில் எனக்கு மேலதிகாரியாக இருப்பவர் சரியான சிடுமூஞ்சியாக இருக்கிறார். சிறு தவறு செய்தாலும் உடனே கோபப்பட்டு வார்த்தைளை நெருப்பென கொட்டி விடுகிறார். என்னால் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அதனால் நான் வேலையை விட்டு விடலாம் என நினைக்கிறேன்," என்று கூறினார்.
இளைஞர் கூறியதைக் கேட்ட பேராசிரியர் சிறிது நேரம் அமைதி காத்தார். மெதுவாக இளைஞரிடம், "வேலையை விட்டு விடலாமா? அல்லது வேண்டாமா? என்பதை மூன்று மாதங்கள் கழித்து முடிவு செய்யலாம். அதற்கு முன் உனக்கு ஒரு வேலை கொடுக்கிறேன். நீ நாளைமுதல் அந்த மேலதிகாரியை ஒரு முறையேனும் பாராட்டி விடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி பாராட்டுவதற்காக அந்த மேலதிகாரியிடம் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களை உற்று நோக்கு. ஒரு நாளைக்கு ஒரு பாராட்டு என வைத்துக் கொள். மூன்று மாதங்கள் கழிந்த பின் மீண்டும் வந்து என்னை பார்!" என்று கூறி அந்த இளைஞனை அனுப்பி வைத்தார் துறவி.
மறுநாள் வழக்கம்போல் இளைஞன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றான். மேலதிகாரியுடன் பேசும் போது அவர் அணிந்திருந்த சட்டை நன்றாக இருந்ததால், "தங்களுடைய ஆடை தேர்வு நன்றாக இருக்கிறது" என பாராட்டினான். மறுநாள் மேலதிகாரி அந்த இளைஞனிடம் கடிதம் ஒன்றை கொடுத்து அதை டைப் செய்து எடுத்து வருமாறு கூறினார். அந்தக் கடிதத்தை டைப் செய்யும் போது அதன் ஆங்கில நடை நன்றாக இருப்பதை கவனித்த இளைஞன், அவரிடம் மீண்டும் கடிதத்தை கொடுக்கும் போது, "இக்கடிதத்தில் எழுதியுள்ள ஆங்கில நடை நன்றாக இருக்கிறது!" என பாராட்டினான். இப்படியாக தொடர்ந்து மூன்று மாதங்கள் கழிந்தன.
அந்த இளைஞன் மீண்டும் தன் பேராசிரியரே சந்தித்தபோது அவர் கேட்டார் "இப்பொழுது நீ என்ன முடிவு எடுத்திருக்கிறாய்? வேலையை ராஜினாமா செய்து விடலாமா?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞனோ, "வேண்டாம், நான் இப்பொழுது மேலதிகாரியுடைய தனிப்பட்ட உதவியாளராக பதவி உயர்வு பெற்று விட்டேன். நீங்கள் கூறுவதை நான் பின்பற்ற ஆரம்பித்ததில் இருந்து அவரிடம் இருக்கும் நேர்மறையான விஷயங்கள் மட்டுமே என்னுடைய பார்வைக்கு பட்டது. அதனால் இப்பொழுது வேலையை ராஜினாமா செய்யும் எண்ணம் எனக்கு இல்லை," என்று கூறினான்.