Total Pageviews

Friday, March 7, 2025

வேலை !

 

ஒரு இளைஞர் வேலை தேடி பல்வேறு இடங்களில் அலைந்து கொண்டிருந்தார். எங்கு தேடியும் அவருக்கு வேலையே கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் அவருக்கு சிறிய நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. சிறிது நாட்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்தார். ஆனால் அந்த நிறுவனத்தில் அவருக்கு மேலதிகாரியாக இருந்தவர் சரியான சிடுமூஞ்சி. எந்த ஒரு சிறு தவறு என்றாலும் உடனடியாக சற்றும் தயங்காமல் திட்டி விடுவார். மேலதிகாரியின் அத்தகைய குணம் அந்த இளைஞனுக்கு நாளுக்கு நாள் மன உளைச்சலை கொடுத்தது. வறுமையின் காரணமாக வேலைக்கு சென்றாலும் கூட அவரால் மேலதிகாரியின் குணத்துக்கு ஈடு கொடுத்து அந்த வேலையில் நீடிக்க முடியவில்லை.

தன் வாழ்வில் பிரச்சனை வரும்போது எல்லாம் தன்னுடைய பேராசிரியரிடம் ஆலோசனை கேட்பது அவன் வழக்கம் அந்த வகையில் இந்த விஷயத்தை தன்னுடைய பேராசிரியரிடம் ஆலோசித்தான்..

"ஐயா, எனக்கு நெடு நாட்களாக வேலையே கிடைக்கவில்லை. இப்பொழுதுதான் ஒரு வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலையில் எனக்கு மேலதிகாரியாக இருப்பவர் சரியான சிடுமூஞ்சியாக இருக்கிறார். சிறு தவறு செய்தாலும் உடனே கோபப்பட்டு வார்த்தைளை நெருப்பென கொட்டி விடுகிறார். என்னால் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அதனால் நான் வேலையை விட்டு விடலாம் என நினைக்கிறேன்," என்று கூறினார்.

இளைஞர் கூறியதைக் கேட்ட பேராசிரியர் சிறிது நேரம் அமைதி காத்தார். மெதுவாக இளைஞரிடம், "வேலையை விட்டு விடலாமா? அல்லது வேண்டாமா? என்பதை மூன்று மாதங்கள் கழித்து முடிவு செய்யலாம். அதற்கு முன் உனக்கு ஒரு வேலை கொடுக்கிறேன். நீ நாளைமுதல் அந்த மேலதிகாரியை ஒரு முறையேனும் பாராட்டி விடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி பாராட்டுவதற்காக அந்த மேலதிகாரியிடம் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களை உற்று நோக்கு. ஒரு நாளைக்கு ஒரு பாராட்டு என வைத்துக் கொள். மூன்று மாதங்கள் கழிந்த பின் மீண்டும் வந்து என்னை பார்!" என்று கூறி அந்த இளைஞனை அனுப்பி வைத்தார் துறவி.

மறுநாள் வழக்கம்போல் இளைஞன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றான். மேலதிகாரியுடன் பேசும் போது அவர் அணிந்திருந்த சட்டை நன்றாக இருந்ததால், "தங்களுடைய ஆடை தேர்வு நன்றாக இருக்கிறது" என பாராட்டினான். மறுநாள் மேலதிகாரி அந்த இளைஞனிடம் கடிதம் ஒன்றை கொடுத்து அதை டைப் செய்து எடுத்து வருமாறு கூறினார். அந்தக் கடிதத்தை டைப் செய்யும் போது அதன் ஆங்கில நடை நன்றாக இருப்பதை கவனித்த இளைஞன், அவரிடம் மீண்டும் கடிதத்தை கொடுக்கும் போது, "இக்கடிதத்தில் எழுதியுள்ள ஆங்கில நடை நன்றாக இருக்கிறது!" என பாராட்டினான். இப்படியாக தொடர்ந்து மூன்று மாதங்கள் கழிந்தன.

அந்த இளைஞன் மீண்டும் தன் பேராசிரியரே சந்தித்தபோது அவர் கேட்டார் "இப்பொழுது நீ என்ன முடிவு எடுத்திருக்கிறாய்? வேலையை ராஜினாமா செய்து விடலாமா?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞனோ, "வேண்டாம், நான் இப்பொழுது மேலதிகாரியுடைய தனிப்பட்ட உதவியாளராக பதவி உயர்வு பெற்று விட்டேன். நீங்கள் கூறுவதை நான் பின்பற்ற ஆரம்பித்ததில் இருந்து அவரிடம் இருக்கும் நேர்மறையான விஷயங்கள் மட்டுமே என்னுடைய பார்வைக்கு பட்டது. அதனால் இப்பொழுது வேலையை ராஜினாமா செய்யும் எண்ணம் எனக்கு இல்லை," என்று கூறினான்.

Thursday, March 6, 2025

எங்கே நிம்மதி ! நம் மனதில் தான் உள்ளது !

 

வாழ்நாள் முழுவதும், மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்க வேண்டும்  என்று நினைத்தான், ஒருவன். அதற்கு என்ன வழி என்று, நண்பர்களிடம் கேட்டான்.

'பணம் இருந்தால், மகிழ்ச்சி வரும். அதனால், பணம் சம்பாதிக்கிற வழியைப் பாரு...' என்றனர்.

இவனும், பாடுபட்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான். கொஞ்ச நாளிலே அவனிடம் நிறைய செல்வம் சேர்ந்து விட்டது. அப்போதும், அவனுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. திரும்பவும் நண்பர்களிடம் யோசனை கேட்டான்.

'பணம் சம்பாதித்தால் போதாது. தாராளமா செலவு செய்யணும்...' என்று, ஆலோசனை தந்தனர், நண்பர்கள்.

இவனும், விருப்பப்பட்டதை எல்லாம் வாங்கிக் குவித்தான்; ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட்டான்; பல ஊர்களுக்கு சென்று வந்தான். இறுதியாக, திருமணம் செய்தும் பார்த்தான். அப்போதும், நிம்மதி இல்லை.

கடைசியில், ஒரு முனிவரிடம் யோசனை கேட்டான். சற்று நேரம் யோசித்தவர், 'துறவறத்தில் தான் உனக்கு நிம்மதி கிடைக்கும். ஆனால், அதற்கு எல்லாவற்றையும் துறக்கணும்...' என்றார்.

அவனும் சரி என்று, தன்னிடமிருந்த செல்வம் அனைத்தையும் மூட்டையாக கட்டி எடுத்து வந்து, முனிவர் காலடியில் வைத்து, 'எனக்கு, மகிழ்ச்சியும், மன அமைதியும் கிடைக்கச் செய்ய வேண்டும்...' என்று, வேண்டினான்.

திடீரென்று, காலடியில் கிடந்த பண மூட்டையை துாக்கிக் கொண்டு ஓடினார், முனிவர். உடனே, இவனும் அவரை துரத்திச் சென்றான்.

சந்து, பொந்தெல்லாம் மூச்சு இரைக்க ஓடியவர், புறப்பட்ட இடத்துக்கே வந்து நின்றார். துரத்தி வந்தவனும், அங்கு வந்து சேர்ந்தான்.

'என்ன, பயந்து விட்டாயா... இந்தா உன் மூட்டை...' என்று, திருப்பி கொடுத்தார், முனிவர்.

அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.

'இதோ பாருப்பா... நீ இங்க வர்றதுக்கு முன்பும், இந்த செல்வம் உன்னிடம் தான் இருந்தது. ஆனால், அப்போது உனக்கு மகிழ்ச்சியும், மன நிம்மதியும் இல்லை. இப்போதும் அது உன்னிடம் தான் இருக்கிறது. முன்பு இருந்ததை விட, இப்போது அதிக மகிழ்ச்சியும், நிம்மதியும் உன்னிடம் இருக்கிறது அல்லவா!

'இதிலிருந்து என்ன தெரிகிறது... மகிழ்ச்சியோ, நிம்மதியோ வெளியில் இல்லை. நம் மனதில் தான் உள்ளது...' என்று கூறி, அவனை அனுப்பி வைத்தார்.

நிம்மதி எங்கு உள்ளது என்று, நமக்கும் புரிந்ததல்லவா!

பி. என். பி.,


வேலை !

  ஒரு இளைஞர் வேலை தேடி பல்வேறு இடங்களில் அலைந்து கொண்டிருந்தார். எங்கு தேடியும் அவருக்கு வேலையே கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் அவரு...