Total Pageviews

Tuesday, February 25, 2020

கையூட்டு அல்லது ஊழல் லஞ்சம் பெருக காரணங்கள் என்ன? அதை எப்படி ஓழிப்பது !

கையூட்டு அல்லது ஊழல் லஞ்சம் பெருக காரணங்கள் என்ன? அதை எப்படி ஓழிப்பது !

எந்த ஓரு காரியமும் நேர்வழியில் லஞ்ச லாவண்யம் இன்றி செய்ய முடியாமல் போகும் போது தேவையான காரியங்களை நிறை வேற்ற கையூட்டு கொடுக்க வேண்டி உள்ளது. உதாரணமாக ஒருவர் வீடு கட்ட நினைக்கின்றார் என்றால் மாநகராட்சியிடமிருந்து வீடு கட்டுவதற்க்கான அனுமதி பெற வேண்டி உள்ளது. யாராவது ஒருவர் கையூட்டு கொடுக்காமல் அனுமதி பெற்றவர் உண்டா? இல்லை என்பதே பலரின் பதிலாகும். வீட்டிற்க்கு மின் இணைப்பு பெற யாராவது ஒருவர் கையூட்டு கொடுக்காமல் அனுமதி பெற்றவர் உண்டா? என்றால் இல்லை என்பதே பலரின் பதிலாகும்.

 "முன்பெல்லாம் கடமையை மீறுவதற்குத்தான் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது, கடமையைச் செய்யவே லஞ்சம் தரவேண்டிய அவலநிலை ஏற்பட்டதுதான் மிகவும் வேதனையான விஷயம். இப்படி சமூகத்தில் அடி ஆழம்வரை ஊடுருவிய ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், ஒரு நாளில் சாத்தியமில்லை. அதற்கான முன்னெடுப்புகளைத் தனிநபர்கள் தொடங்கி, அரசாங்கம் வரை இணைந்து செயல்படுத்தினால்தான் சாத்தியம்"

.எனவே மக்கள் நேர்வழியில் செல்வதைவிட குறுக்கு வழியையே, அதாவது லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிப்பதையே விரும்புகிறார்கள், அது ஏன்? விரும்புவதை விரும்பிய நேரத்தில் பெறுவதற்கு இதுவே சுலபமான வழி அல்லது இது தான் ஒரே வழி என்பதாக தோன்றலாம். சில சமயங்களில், லஞ்சம் கொடுப்பது ‘லாக்-அப்’பிலிருந்து வெளிவருவதற்கு ஓர் எளிய வழியாக இருக்கலாம். அரசியல்வாதிகளே, போலீஸ்காரர்களே, நீதிபதிகளே லஞ்சம் வாங்குவதை கண்டு கொள்ளாமல் இருக்கும்போது அல்லது அவர்களே அப்படி செய்யும்போது, அதை கவனிப்பவர்களும் அதே வழியைத்தான் பின்பற்றுகிறார்கள்.

லஞ்சமும் ஊழலும் பெருக பெருக நாளடைவில் அதுவே சகஜமான ஒன்றாகி வாழ்க்கையின் பாகமாகிவிடுகிறது. மிகக் குறைந்த வருமானம் வாங்கும் மக்கள் லஞ்சம் வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைக்கிறார்கள். நாலு பேருக்கு மத்தியில் “கௌரவமான” வாழ்க்கை நடத்த வேண்டுமானால், லஞ்சத்திற்குள்தான் தஞ்சம் புக வேண்டும் என்று நினைக்கிறார்கள். கறாராக லஞ்சம் வாங்குகிறவர்களாக இருந்தாலும் சரி ஏதாவது சலுகை பெற லஞ்சம் கொடுப்பவர்களாக இருந்தாலும்சரி, இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் போவதால் பெரும்பாலானோர் அதை எதிர்க்க தயாராக இல்லை.

இரண்டு பலமான சக்திகள் ஊழல் என்ற உலைக்கு தீமூட்டுகின்றன. சுயநலமும் பேராசையுமே அந்த சக்திகள். ஊழல் செய்யும் மக்கள் தங்களுடைய ஊழலால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதைக் குறித்து கடுகளவுகூட கவலைப்படுவதில்லை. ஏன்? சுயநலமே காரணம். லஞ்சம் கொடுப்பதால் தாங்கள் நன்மையடைகிறார்கள் என்பதன் காரணமாக தாங்கள் செய்வது சரியென கருதுகிறார்கள். பொருளாதார நன்மைகள் பல கிடைப்பதால் ஊழல் புரிபவர்கள் இன்னும் பேராசைமிக்க பெருச்சாளிகளாய் மாறிவிடுகிறார்கள்.ஆனால் அது ஊழலையோ சட்டவிரோதமான காரியங்களையோ எப்போதும் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது.

இப்படிப்பட்ட ஊழலாலும் அதனால் ஏற்படும் பொருளாதார சீரழிவாலும் பெருமளவில் பாதிக்கப்படுவோர் ஏழை எளியவர்களே. ஏனென்றால் இவர்கள்தான் யாருக்குமே லஞ்சம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். ‘ஊழல் என்பது ஏழைகளை ஒடுக்குவதற்கான ஒருவழி’ என தி இக்கானமிஸ்ட் சுருக்கமாக குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட ஒடுக்குமுறையை ஒழிக்க முடியுமா? அல்லது ஊழல் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றா? இக்கேள்விக்கு விடை காண முதலில் ஊழலுக்கான சில அடிப்படை காரணங்களை நாம் கண்டு உணர வேண்டும்.

பல வலுவான சட்டங்கள் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. அதோடு, புதிய சட்டங்களையும் இயற்ற வேண்டும். ஓர் அதிகாரி லஞ்சம் பெற்றதாக நிரூபிக்கப்பட்டால், அவரை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். சட்டங்கள் கடுமையாக இல்லாததால், ஏற்கெனவே லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டவர்கள் கூட மீண்டும் மீண்டும் வாங்கும் நிலையே இருக்கிறது.

ஒவ்வொருவரும், தங்களுக்கு எந்தச் சான்றிதழ் வாங்கினாலும் அதை அவசரகதியில் அணுகாமல், உரியகாலத்துக்கு முன்னரே தொடங்க வேண்டும். உதாரணத்துக்கு, பள்ளியில் சேர்க்க பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால், முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நேரத்தில் போய் சான்றிதழ் வாங்க நின்றால், நம் அவசரத்தைப் பயன்படுத்தி, லஞ்சம் கேட்பது அதிகாரிகளுக்கு சுலபமாகிவிடும். அதோடு, பிறப்புச் சான்றிதழ் தொடங்கி, மின் இணைப்புவரை ஒவ்வொரு சேவைக்கும் எவ்வளவு கட்டணம், எவ்வளவு நாள்களில் கிடைக்கும் என்பதைப் பற்றி தகவல்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். இது, கூடுதல் கட்டணங்கள் கொடுப்பதையும், இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் உதவும்.

மக்கள் நியாயமான வழியில் நடந்தாலே அவர்களுக்குரிய காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம்தான் ஏற்படுத்த வேண்டும். ஊழல்வாதிகளில் மீது உரிய நடவடிக்கை எடுத்தல், நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருத்தல் என அரசு, ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலே 80 சதவிகித ஊழல் கட்டுக்குள் வந்துவிடும்.

அதிகாரத்தால் மட்டும் ஊழல் நடப்பதில்லை. ஊழலற்ற தேசமாக மாற வேண்டுமானால், பொதுமக்களின் மனப்பான்மை மாற வேண்டும். அதுதான் அடிப்படை. எந்தவொரு பணிக்கும் லஞ்சம் கொடுக்க மாட்டோம். வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகள் கட்டுப்படுத்தும் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டளிக்க மாட்டோம் என்றும் உறுதியுடன் நாம் செயல்பட்டால் லஞ்சம், ஊழலை ஒழிக்கலாம்".

1 comment:

  1. Where ignorance is bliss it's folly to be wise. நான் மட்டும் தராமல் இருந்தால் எனக்குதான் நஷ்டம் என்பார்கள்.

    ReplyDelete

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...