Total Pageviews

Friday, February 22, 2013

வாகன ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்திருக்க வேண்டடிய விஷயங்கள்



வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Thanks to tamilinfoway.com

பெட்ரோல், டீசல் சேமிக்க சிறந்த 10 வழிகள்



தினமும் உயரும் பெட்ரோல், டீசல்  விலை கார், பைக் வாங்க நினைபவர்களுக்கு கவலையாகவும் கார், பைக் வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் என மருத்துவர் ஆரூடம் சொன்னது போல இருக்கும் என்பது உண்மைதானே....

பெட்ரோல், டீசல்

எரிபொருளை எவ்வாறு சேமிக்கலாம் என சில முக்கிய குறிப்புகளை கவனிப்போம். முன்னணி ஆட்டோமொபைல் வல்லுனர்கள் பரிந்துரைக்கும் டிப்ஸ் தெரிந்து கொள்வோம்.

பெட்ரோல் டீசல் சேமிக்க டிப்ஸ்

1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும்.நிறுவனத்தார் கொடுத்த காற்றழுத்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும்.

2. புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

3. காலை நேரங்களில் மட்டும் எரிபொருளினை நிரப்ப முயற்சியுங்கள். எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி(specific gravity) காலை நேரங்களில் அதிகமாக இருக்கும்.

4. எரிபொருள் கலனில் எப்பொழுதும் அறை பங்கிற்க்கு மேல் எரிபொருள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் எரிபொருள் சரியான அழுத்ததில் செல்ல பெரிதும் உதவும்.

5. வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். சரியான கால இடைவெளியில் பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவர்க்கலாம். வாகனத்தின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.

6. எக்காரணம் கொண்டு தயாரிப்பாளர் பரிந்துரைக்காத எரிபொருள்,அடிட்டீவஸ் பயன்படுத்தாதீர்கள்.

7. வாகனத்தை இயக்கும் பொழுது தேவையான அளவே அக்ஸிலேட்ர்களை கொடுங்கள். திடீரென அதிகப்படியான அக்ஸிலேட்ர் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. பிரேக் பிடிப்பதில் கவனம் கொள்ளுங்கள் அக்ஸிலேட்டர் கொடுத்தவுடன் உடனடியாக பிரேக் கொடுக்காதீர்.

சிக்னல்களில் திடீரென வேகம் எடுக்காதீர்கள். சீரான வேகத்திலே வாகனத்தை இயக்குங்கள்.

8. அதிவேகம் மிகுந்த ஆபத்தானவை அதேபோல எரிபொருளும் அதிகம் தேவைப்படும். டாப் க்யரிலும் மெதுவாக செல்வது எரிபொருளை சேமிக்க உதவும்.சராசரியாக 50-60 கீமி வேகத்தில் பயணிக்க முயலுங்கள்.

9. 2 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தால் வாகனத்தை அனைத்து விடுங்கள்.

10. க்ளட்ச் மீது க்யர் மாற்றும்பொழுது மட்டுமே காலினை பயன்படுத்தவும்.

தொடர்ந்து நிலையான வேகத்தை பயன்படுத்துங்கள்.

Tuesday, February 19, 2013

மது, இலவசங்கள், சினிமா, படிக்கும்போது செல்போன் தேவையில்லை.




இளம் தலைமுறையினருக்கு எவ்வளவோ கடமைகள், பொறுப்பு இருக்கிறது. காதல் மட்டும்தான் உலகமா? காதல் நாடகத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். இதை அரங்கேற்றி கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கிறது. முதலில் படித்து வேலை பார்க்கட்டும். அதன்பிறகு காதல் வந்தால் காதலியுங்கள் - டாக்டர் ராமதாஸ்



மக்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்து வருகிறோம். மது, இலவசங்கள், சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது. இதை சொல்வதால் சினிமாவுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. மக்களை நல்வழிப்படுத்தும் தரமான சினிமாவை கொடுங்கள்.



நாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல. அறியா பருவத்தில் நடக்கும் காதல் நாடகத்தைதான் எதிர்க்கிறோம். இதற்குதான் சிலர் கூச்சல் போடுகிறார்கள். செல்போனும், சினிமாவும் தான் மாணவர்களை கெடுக்கிறது. படிக்கும்போது செல்போன் தேவையில்லை. பெற்றோர்கள் இதை அனுமதிக்காதீர்கள். ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இப்போது அந்த நிலை இல்லை. நன்றாக படியுங்கள்.




Monday, February 18, 2013

விவாகரத்தை தவிர்க்க சில வழிமுறைகள்:

இந்த உலகில் எந்த ஒரு உறவுமே நிலையாக நிலைப்பதில்லை. இதற்கு காரணம் ஒவ்வொருவரின் மனநிலையும் வித்தியாசமானதாக இருப்பது தான்.

மனிதன் என்றால் வித்தியாசம் இருக்கும் தான். ஆனால் அதே சமயம் புரிந்து கொள்ளுதலும்,
 விட்டுக் கொடுத்து நடப்பதும் நிச்சயம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

அத்தகைய மனநிலை இல்லாவிட்டால், அனைத்து உறவுகளுமே பாதியிலேயே பிரிந்துவிடும். மேலும் இந்த நிலைமை திருமணமானவர்களுக்கு கூட உள்ளது. இதற்கு இருவரிடமும் சரியான புரிதலும், மனப்பக்குவமும் இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி இன்றைய காலத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள், திருமணத்தை ஒரு விளையாட்டாகவே நினைப்பதால் தான், அந்த உறவுக்கு முடிவை தேடிக்கொள்கின்றனர். இந்த உலகில் இருக்கும் உறவுமுறைகளிலேயே கணவன்-மனைவி உறவு தான் மிகவும் சிறந்தது. இத்தகைய உறவை வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களே உண்மையான அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த உறவில் அனைத்து உறவுகளுமே அடங்கும். எனவே இத்தகைய அருமையான திருமண உறவிற்கு முறிவு என்னும் பெயரில் இருக்கும் விவாகரத்து ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு சில டிப்ஸ்களை பட்டியலிட்டுள்ளோம்.

அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

*கணவன்-மனைவி இருவருக்குள் சண்டை வருவது சாதாரணம் தான். ஆனால் அந்த பிரச்சனை உடனே தீர்ந்துவிட வேண்டும். இல்லையெனில் அந்த பிரச்சனையே இருவருக்கும் இடையில் பெரும் பிரிவை ஏற்படுத்தும். அதற்கு முதலில் அந்த பிரச்சனையைப் பற்றி இருவரும் பொறுமையாக பேச வேண்டும். இந்த நேரத்தில் ஈகோவை மனதில் கொண்டு நடந்தால், பின் இருவரும் வாழ்நாள் முழுவதும் பிரிய வேண்டி வரும்.

*சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. சண்டைகள் வந்தால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கான வழிமுறைகளையும் யோசித்து, அவற்றை தீர்ப்பதற்கு முயல வேண்டும். இவ்வாறு தீர்வு கண்டால், நிச்சயம் விவாகரத்தை தவிர்க்க முடியும்.

 *விவாகரத்து நிச்சயம் வேண்டும் என்று நினைக்கும் தருவாயில், அதனை தடுப்பதற்கு நடந்த சண்டையை மறந்து, இருவரும் சந்தோஷமாக இருந்த தருணங்களை நினைத்து பார்த்தால், கண்டிப்பாக விவாகரத்தை தவிர்க்கலாம்.

*தவறு செய்வதால் தான், சண்டைகள் வருகின்றன. இந்த உலகில் தவறு செய்யாதவர்களே இருக்கமாட்டார்கள். மேலும் தவறு செய்தவர்கள், தவறை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால், நிச்சயம் அந்த உறவு மிகவும் அழகாக இருக்கும். எனவே தவறு யார் மீது இருந்தாலும், அப்போது ஈகோ பார்க்காமல், மன்னிப்பு கேட்க வேண்டும்.

*நடைமுறை மற்றும் பழக்கவழக்கங்களை சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். அதைவிட்டு எப்போதுமே ஒரே மாதிரி செயல்பட்டால், பின் இருவருக்கும் இடையில் எந்த நேரமும் சண்டை வந்து கொண்டே இருக்கும். ஆகவே ஒருசில மாற்றங்கள் கூட விவாகரத்தை தடுக்கும்.

*திருமண வாழ்வில் சரியான புரிதல் மற்றும் நம்பிக்கை தான் மிகவும் முக்கியமானது. அந்த சரியான புரிதல் மட்டும் இல்லாவிட்டால், அது இறுதியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும். பின் எந்த நேரமும் சண்டை வருவதோடு, இறுதியில் விவாகரத்து வரை சென்று விடும். எனவே எதுவானாலும் மனதில் கொண்டு செயல்படாமல், அதனை பேசி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதன் மூலம், பிரிதலை தடுக்கலாம். 

ஆனால் அது சற்று தாமதமாகிவிட்டாலும், பின் விவாகரத்து தான் முடிவு. இவை அனைத்தையும் மனதில் கொண்டு செயல்பட்டால், விவாகரத்து ஏற்படுவதைத் தடுத்து, சந்தோஷமான திருமண வாழ்வை மேற்கொள்ளலாம்.

Thanks to One India.com

Friday, February 8, 2013

திருநங்கையர் வாழ்வு



திருநங்கையர்களுக்கு தமிழக அரசு தக்க உரிமையும், பாதுகாப்பும் வழங்கி வந்தாலும், தனி நபர் அளவில் செய்யும் முயற்சிகளே அவர்களை மற்றவர்களுடன் சரிசமமாக வாழ வைக்க உதவுகிறது என்பதை உமா மகேஸ்வரியும், சமூக சேவகர் மெரோலின் சகாய ராணியும் நிரூபித்துள்ளனர்.

சமூகமும்,  குடும்பத்தாரும், அரசும் திருநங்கையர் சமூக அந்தஸ்துடன் வாழ்தலுக்கான உரிமைகளை  அளிக்கவேண்டும்.

அரவாணியர் அல்லது திருநங்கையர் என்று சமீப காலமாக சற்று மரியாதையுடன் விளிக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்நிலை ஒன்றும், கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரக் கல்லாக இல்லை. பெரும்பான்மை மக்கள், அவர்களை இன்னும் கேலிப் பொருளாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவுமே அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள். தெருவில் நடந்து செல்லும் அவர்களை, வினோதமாக வேடிக்கைப் பார்க்கும் வழக்கம் இன்னமும் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் தவிர, மற்றெங்கும் அவர்கள் மதிக்கப்படுவதாகக் காணோம். அங்கும் கூட அவர்களின் வாழ்நிலை, ஏதோ சில உரிமைகளைப் பெற்றிருக்கிறதே தவிர, அடி மட்டத்திலிருந்து மேலெழும்பி நிமிரவில்லை. இதே நிலைதான் நாடு முழுவதும் இருக்கிறது.

தமிழகம் தாண்டி மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் ஏதோ அவர்களுக்குக் கொஞ்சம் அந்தஸ்த்து கிடைத்திருப்பது தெரிகிறது. அவ்வளவு தான்!

உடலமைப்பால் ஆணாகவும் மன உணர்வால் பெண்ணாகவும் தங்களைப் பாவித்துக் கொள்ளும் அவர்கள், தங்கள் உணர்வுகளை அங்கீகரியுங்கள் என்று விடுக்கும் கோரிக்கைகள், அர்த்தமுள்ளவை. சமூக அந்தஸ்துடன் வாழ்தலுக்கான தங்களின் உரிமைகளைப் பெற அவர்கள் நடத்தும் போராட்டங்கள் எண்ணற்றவையாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை ஈடேறாத முடிவுகளையே தந்திருக்கின்றன.

இருந்தும் அவர்கள், தங்களின் சமூக அங்கீகரிப்புக்கானப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அதற்கான மன உறுதி, சாதாரணமானதல்ல! மருத்துவர் ஊசி குத்தும்போது கண்களை இறுக மூடி, பற்களைக் கடித்துக்கொண்டு இருப்போமே.. அப்படியானதல்ல, அவர்களின் மனத்திண்மை. அது. அவர்களின் உள்ளத்திலிருந்து கிளர்ந்து வந்தது!

அவர்களை அரவணைக்காமல் எள்ளி நகையாடுவது, அவர்களுக்கு எத்தனை வேதனையைத் தரும் என்பதை அவர்களால் மட்டுமே உணர முடியும். பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டும், சமூக அங்கீகாரம் கிடைக்காமலும், கடை கடையாகப் பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழிலை வேறு வழியில்லாமல் செய்து வருவதும், அவர்களின் விருப்பத்தின் பேரில் அல்ல. வாழ்வதற்க்கானத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே!

அதனால் அவர்கள் படும் மனஅவஸ்தை, சொல்லி மாளாது. சட்டமும் நீதியும் தண்டிக்குமே என்று அச்சத்துடன் பயந்து பயந்து வாழும் அவலவாழ்க்கையைக் காட்டிலும் காவல் துறையும், சமூக விரோதிகளும் செய்யும் துன்புறுத்தல், அவர்களை மேலும் பாடாய்ப் படுத்தி வருகிறது.

சமீப காலமாக, திருநங்கைய்ரில் பலர் கடைகளில் கைத்தட்டிப் பிச்சைக் கேட்பதில்லை. மாறாக, கைத் தொழில்களைக் கற்றுக்கொண்டு, சமூகத்தின் மேம்பாட்டிற்க்கு உறுதுணையாகி வருகிறார்கள். சிலர் பூ, காய்கறி, மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். இது, அவர்களின் மனமாற்றத்தையும் சமூகம் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையையும் காட்டுகிறது.

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கையர். ரேவதி தொகுத்திருக்கும் 'உணர்வும் உருவமும்' நூலின் முன்னுரையில், சுபா சாக்கோ எழுதியிருப்பதைப் பார்ப்போம். 'ஒருவரை பராமரித்துப் பாதுகாக்க வேண்டிய குடும்பம். ஊக்குவித்து வளர்க்க வேண்டிய பள்ளிக்கூடம். ஆதரவாகச் சூழ்ந்திருக்க வேண்டிய நெருக்கமான உறவுகள். மனதுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய மதம். நீதிக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தொண்டு நிறுவனங்கள். பாரபட்சமின்றி செயல்படுவதாகக் காட்டிக் கொள்ளும்அரசு: அரவாணிகளைப் பொறுத்தவரை, இவை அனைத்துமே வன்மமும் பாரபட்சமான நடவடிக்கைகளும் நிகழும் களமாகவே இருந்து வந்துள்ளன' என்கிறார்.

தன்னுரையில் ரேவதி குமுறுவதைக் கேட்போம் : 'அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுந்தானா? அரவாணிகளுக்கு இல்லையா? நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் தானே? எங்களுக்கும் ஓட்டுரிமை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், சொத்துரிமை, ரேஷன் அட்டை ஆகியவை வேண்டும். ஆணாகப் பிறந்த நான், ஆணாக இருந்தால் மட்டுந்தான் இந்த அடிப்படை உரிமைகள் கிடைக்கும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது? என்னுடைய பாலினத்தை மாற்றிக் கொள்ள எனக்கு உரிமை இல்லையா? ஏன் என் உணர்வுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?'

பணம் சம்பாதிக்கும் வேட்கையுடனோ... கொழுப்பெடுத்துப் போயோ... பாலினத்தை மாற்றிக் கொண்டவரில்லை, இந்தத் தோழி!

மன உணர்வுகளின் புரிதல் அவரை வழிநடத்தி, அதன் அடிப்படையில், "என் பயணம் இது தான்!" என்ற திண்மையான முடிவுடன் களத்திற்கு வந்து போராட முடிவெடுத்தவர்.


சமூகத்தால் பல விதங்களில் ஒதுக்கப்பட்டும், அடக்கி ஒடுக்கப்பட்டும் வாழ்ந்து வரும் திருநங்கையர்களுக்கு கௌரவமாக வாழ சென்னையில் உள்ள 'ஃபீச்சர்ஸ்' என்ற அழகு நிலைய உரிமையாளர் உமா மகேஸ்வரி செய்துள்ள முயற்சிகளின் பலனாக 17 திருநங்கையர்கள் அழகுக் கலை நிபுணர்களாக உருவெடுத்துள்ளனர்.

திருநங்கையர்களுக்கு அழகுக் கலை பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் சிறப்பு சேர்க்கவும், அவர்கள் வயிற்றுப்பாட்டிற்காக கீழ்நிலையான சில காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க விழிப்புணர்வு முகாமும் நடத்தப்படுகிறது.

மேற்கூறிய லட்சியத்தை நிறைவேற்ற 45 நாட்கள் அழகுக் கலை பயிற்சி முகாமைத் துவங்கி அதனை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்கள். இதில் சுமார் 17 திருநங்கையர்கள் வெற்றிகரமாக பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். 17 திருநங்கையர்களுக்கும் நடிகர் விக்னேஷ் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

இளைஞனாகும் பருவ பிள்ளைகளை கையாள்வது எப்படி?



வளங்களில் சிறந்தது மனித வளம். பருவங்களில் வியப்புக்குரியது பதின் பருவம் என்ற விடலைப் பருவம். எதையும் செய்து பார்க்கிற பருவம். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத பருவம். 14 முதல் 21 வயதுள்ள விடலைப் பருவம், ஒரு குழந்தை இளைஞனாகும் காலம். வாழ்க்கையில் முதன்முதலில் ஹார்மோன்களோடு போராட வேண்டிய கால கட்டம். ஒரு குழந்தையாகவும் திரிய முடியாமல், பெரியவன் என்ற சமூக அங்கீகாரமும் கிடைக்காமல் திரிசங்கு சொர்க்கத்தில் நின்று திண்டாடும் ஒரு சூழல். பிறந்தது முதல் பதினான்கு வயது வரை சுதந்திரப் பறவையாகத் திரிந்தது ஒரு காலம். இந்தச் சுதந்திரம் விடலைப் பருவத்தில் மறுக்கப்படுவதால் அல்லது மறுக்கப் படுவதாக நினைத்துக் கொள்வதால் இந்த இளைஞர்கள் இழந்து விட்டதாக நினைக்கும் மகிழ்ச்சியை 14 முதல் 21 வயதுக்குள் பூர்த்தி செய்ய மன ரீதியாகத் துடிக்கிறார்கள்.

விடலைப் பருவத்தினரை ஈர்க்க எங்கும் தீய சக்திகள் சமூகத்தில் நிறைந் துள்ளன. அவற்றுள் பெரும்பங்கு வகிப்பது டி.வி., என்கிற சின்னத் திரை. இது அறிவியலின் அற்புதமான கண்டுபிடிப்புதான். ஆனால் இதில் காட்டப்படும் பாலியல் ஈர்ப்புகள், பாலியல் வக்கிரங்கள், கொலை, கொள்ளை, தீவிரவாதச் செய்திகள், பிரபலங்களின் குடி, புகைப் பழக்க வழக்கங்கள் இவ்வறியா பருவத்தினரிடம் நாமும் இப்படிச் செய்தால் என்ன என்ற புது உணர்வைத் தூண்டுகிறது.

விடலைப் பருவமோ ஒரு வித விவரம் புரியாத பருவம். ஓடும் பாம்பை மிதிக்கும் பருவம். இனம் புரியாத ஆவல்கள், பரபரப்புகள், குழப்பங்கள் நிறைந்தது. மாணவர்களைக் கவரும் சினிமா மோகம், இசை மோகம், பாலியல் மோகம், அரசியல் மோகம், விளையாட்டு மோகம் அவர்களைக் கவர்ந்து இழுப்பதால் படிப்பு மறந்து சினிமா, டி.வி., விளையாட்டரங்கம் இவற்றில் புதைந்து கிடக்கச் செய்கிறது. இளைஞர்கள் ஒரு சினிமா நடிகர், நடிகை, அரசியல்வாதியை அறிந்த அளவுக்கு விஞ்ஞானியையோ, தொழில் நிபுணரையோ அறிந்திருப்பதில்லை. டி.வி. பார்ப்பது தவறல்ல. படிக்கும் பொறுப்பை விட்டுவிட்டு டி.வி. பார்ப்பதுதான் தவறு. பெற்றோர்கள் ஒவ்வொன் றுக்கும் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி, ஒரு திட்டமிட்ட வாழ்க்கையை அமைத்துத் தர முன்வர வேண்டும்.

விடலைப் பருவத்தினர் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். பொதுவாக உணர்ச்சிகள் தோற்றுவிக்கும் விளைவுகள் பயமும் கோபமும். இவர்கள் பயத்தை வெளியே காட்டுவதில்லை. ஆனால் கோபத்தைக் காட்டிவிடுவார்கள். விடலைப் பருவத்தினரின் கோபத்துக்கு, தங்கள் நண்பர்களைப் போலத் தங்களால் ஆடம்பரமாகவும் வசதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிய வில்லையே என்ற எண்ணம்தான் காரணம். இந்த ஆதங்கம் கோபமாக வெளிப்படுகிறது. இப்பருவத்தில் இவ்வாறு விரும்புவது தவறல்ல. பெற்றோ ரும் தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்கள் குழந்தைகளின் விருப்பத்தை நிறை வேற்றவே உழைக்கின்றனர். தங்களது பிள்ளைகள் படிப்பிலும் விளையாட் டிலும் ஒழுக்கத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் பெற்றோரின் ஆசை. எனவே நீங்கள் உங்கள் படிப்பில் முதன்மை கவனம் செலுத்தி தேர்ச்சி பெறுங்கள். வாய்ப்புகளும் வசதிகளும் உங்களைத் தேடி வரும்.

விடலைப் பருவத்தில் பெற்றோராலும் ஆசிரியர்களாலும் நல்லொழுக்கங்கள் புகுத்தப்படல் வேண்டும். நற்பண்புகள் கற்றுத்தரப்பட வேண்டும். உங்கள் மகன் நண்பர்களோடு சேர்ந்து, சிகரெட் புகைத்துவிட்டு வருகிறான். உங்களால் இதைத் தாங்க முடியவில்லை. உன்னால் இந்த வீட்டின் புனிதமே கெட்டுப் போய்விட்டது என்று முகம் சிவக்க அவனிடம் எகிறுகிறீர்கள். உடனே அவன் சிகரெட் புகைப்பதை விட்டு விடப் போகிறானா? இல்லை. ஏதோ ஓர் இருட்டு மூலையில் ரகசியமாக நின்று சிகரெட் பிடித்துவிட்டு, வாயில் பாக்கை மென்று கொண்டு வருவான்.

நீங்கள் சிகரெட் பிடிப்பது தவறு என்று கற்றுத் தரப் பார்த்தீர்கள். அதற்கு மாறாக, கள்ளத்தனத்தையும் பொய்களையும் கற்றுத் தந்து விட்டீர்கள். அதைத் திருத்த வேண்டுமென்ற ஆர்வத்தில் நீங்கள் அவனை மிரட்டலாம். அதிகாரத் தால் கொஞ்சம் காலத்துக்கு இழுத்துப் பிடிக்கலாம். ஆனால் உங்களின் உண்மையான அக்கறை அவனுக்குப் புரியாமலேயே போய்விடும்.

மகனிடம் அன்பை காட்டப் பழகி விட்டீர்களானால், உங்கள் நண்பனாக அவன் மாறியிருப்பான். நீங்கள் சொல்வதைத் தனது நன்மைக்காகவே என்பதைப் புரிந்து கொண்டிருப்பான். எது நல்லது, எது கெட்டது என்று பகுத்து உணரும் புத்திசாலித்தனமும் வந்திருக்கும். சிகரெட்டில் உள்ள நச்சுப் பொருள்கள் மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய், கண்பார்வைக் குறைவு, நுரையீரல் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியது. இந்தச் செய்தி அவன் மனத்தில் ஆழப் பதியும். சிகரெட் பழக்கத்தை விட முயற்சிப்பான்.

குழந்தையை அடித்து வளர்ப்பது அருவருப்பான செயல். உண்மையில் அந்தக் குழந்தையால் எதிர்க்க முடியாது என்பதுதானே உங்கள் கைகளை உயர்த்து வதற்கான காரணம். நிராயுத பாணியுடன் வாள் வீசுவது வீரமும் அல்ல. விவேகமும் அல்ல.

ஒரு பூச்செடி நன்றாக வளர வேண்டுமானால் அதன் அருகிலேயே உட்கார்ந்து அதை நோண்டிக் கொண்டே இருப்பீர்களா? மாட்டீர்கள். தேவையான உரத்தைப் போட்டு, தண்ணீர் ஊற்றி, அதைத் தானாக வளர விடுவீர்கள். அது தானாய் பூத்துக் காய்க்கும். அப்படி அதற்குத் தேவையான பாதுகாப்பை அளித்துவிட்டு, உங்கள் எண்ணங்களை அதன் மீது திணிக்காமல் இருங்கள். அதுபோதும். உங்களுக்குப் பிறந்த குழந்தையும் உங்களைப் போலவே வளர வேண்டு மென்று எதிர்பார்ப்பது தவறு. நீங்கள் செய்த தவறுகளை அதுவும் செய்ய வேண்டுமா? நீங்கள் செய்யத் துணியாத காரியங்களைச் செய்து பார்க்கும் வல்லமையைப் பெறட்டுமே. அப்படி அடுத்தடுத்த தலைமுறைகள் செய்தால் தான் உலகில் புதுமைகள் பிறக்கும். புகழ் குவியும். உலகம் வளர்ச்சியுறும்.

உங்கள் அன்பும் அரவணைப்பும் உண்மையான கவனிப்பும்தான் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வழங்க வேண்டியது. ஆதிக்கம் அல்ல. அப்படி வளரும் குழந்தை தவறான பாதைக்கு ஒரு நாளும் போகாது. சந்தர்ப்ப சூழ்நிலையில் அப்படிப் போனாலும் திருந்தி உங்களிடமே திரும்பி வரும்.

பேராசிரியர் டாக்டர் பி.கி.சிவராமன்
தஞ்சை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர்

குழந்தை வளர்ப்பு:விடலைப் பருவத்து பிரசினைகள்



பதினாறு வயதில் பெண்களுக்கு ஏற்படும் கவலைகள் அதிகம். குட்டையான பெண்கள், தான் உயரமாக இல்லை மிகவும் குள்ளம் என்பது எப்போதும் அவர்களின் மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கும் விஷயம். அடுத்தது முகப்பருக்கள். நாளடைவில் கவலைகளில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்து அவளைப்பற்றிய ஒரு தாழ்ந்த சுயமதிப்பீட்டுக்கு அவள் ஆளாகிறாள். இது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. விளைவு, படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கத் தொடங்குகிறார்கள். இதுவே பெண்களின் பெரிய பிரச்சினையாகும்.

விடலைப் பருவத்திலிருப்பவர்களின் பிரச்னைகள் என்று வந்தால் ...
வளரும் பருவம், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பரவசமும் ஏற்படும் காலம். அத்துடன் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட. இதனால் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் காணப்படும். குறிப்பாக இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டு பெரும்பாலும் கூச்சப்படுகிறார்கள். சிறிது தயக்கமும் அடைகிறார்கள். முகப்பரு, மாதவிடாய் பிரசினைகள், களைப்பு, பூப்படைதல், உடல் பருமன், நடத்தை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்ற விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் குவிந்துவிடுகின்றன. பாலியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேசுவதற்கு ஒரு விசேஷ வழிகாட்டியின் உதவி தேவைப்படும் பருவம் இது. அந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது குழப்பங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. குறுக்கு வழியில் பணம் பறிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்கள் தரும் தவறான விளம்பரங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.

விடலைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நலப் பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும் வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொள்ளும் போது பிரசினைகளைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியும்.

குறைவாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் ரத்தசோகை. தாழ்வு மனப்பான்மை, படிப்பில் பின்னடைவு, அதிகப்படியான சோர்வு, மன அழுத்தம், தனிமையை விரும்புதல், சாப்பாட்டில் சமச்சீரின்மை ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். உடல் மட்டும் ஒரு மனிதனுக்கு முக்கியமில்லை. அறிவு, கடும் உழைப்பு, விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என புரியவைக்க வேண்டும்.

அழகு என்பது நம்மிடம் இல்லை. பார்ப்பவர்களின் கண்ணில் தான் இருக்கிறது. ஒருவருக்கு அழகற்றதாகத் தெரியும் ஒருவர், இன்னொருவருக்கு அழகாய்த் தெரிவதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.

உயரமாக இல்லை, குள்ளமாக இருக்கிறோம் என்ற கவலை அவர்களே வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு மரபுரீதியாக, உணவு பற்றாக்குறையால், ஹார்மோன் கோளாறுகளால்... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் தள்ளிப்போகும் வளர்ச்சி என்று சிலருக்கு ஆகும். சில வருடங்களுக்குப் பிறகு வேகமாக வளர்ந்து சராசரி உயரத்தை அவர்கள் அடைந்து விடுவார்கள். ஆனால் இது தெரியாததால், மனக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். மனச் சோர்வும் ஏற்படுகிறது.

பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர்கள். இது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம். சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்கள், சமூக, கலாசார மாறுதல்கள், உடல் மாற்றங்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுடன் சுதந்திரமாக பேச வேண்டும். இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் கூச்சம் அடைகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள். நாமும் நம் பருவத்தில் பாதி நேரம் கண்ணாடிக்கு முன் நின்று, நம்மை நாமே ரசிப்பதிலேயே செலவிட்டவர்கள்தானே என்ற உண்மையே நினைத்துக் கொண்டாலே போதும் தயக்கம் விலகிவிடும்.

Thanks to Kodal.com

விடலைப் பருவ பிள்ளைகளை கையாள்வது எப்படி?

குழந்தை வளர்ப்பு செயல்பாட்டில், விடலைப் பருவம் என்பது ஒரு மிக முக்கியப் பருவம். 

எது சரி? மற்றும் எது தவறு? என்று ஆராய ஆரம்பிக்கும் பருவம். உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கும் பருவம். இத்தகையப் பருவத்தில், பெற்றோர்-பிள்ளைகள் உறவுகளில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தங்களின் பிள்ளைகள் எந்த நிலையிலும் வழிமாறி விடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் ஆசை. ஆனால், பிள்ளைகளை கையாள்வதில் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே, மிக முக்கிய பருவமான விடலைப் பருவத்தில், பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பாக சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

* உங்களின் விடலைப் பருவ பிள்ளை, என்ன சொல்ல வருகிறது என்பதை கனிவோடு கேட்கப் பழக வேண்டும். ஏனெனில், ஒரு குழந்தை சிறுவயதில் இருக்கும்போது பெற்றோர்களிடம் ஏறக்குறைய அனைத்து விஷயங்களையும் கூறிவிடும். ஆனால் அதே பிள்ளை, விடலைப் பருவத்திற்கு வந்தவுடன், பல விஷயங்களை பெற்றோரிடம் சொல்வதற்கு தயங்குகிறது. எத்தகைய விஷயங்களுக்கு நீங்கள் எப்படி உங்களின் விடலைப் பருவ பிள்ளைகளிடம் நடந்துகொள்கிறீர்கள் என்பதை அவர்கள் அனுமானித்து, அதன்படி, உங்களுடனான உறவுநிலையில் ஒரு வரைமுறையை வகுத்துக் கொள்கிறார்கள்.

* ஒவ்வொரு நாளிலும், குழந்தையுடன் செலவிடுவதற்கென்றே வீட்டில் ஒரு நேரம் வகுத்துக் கொள்வது ஒரு சிறந்த வழி. குழந்தைகள் படிக்கும்போது, நீங்கள் சிறிதுநேரம் அவர்களின் உடன் அமர்ந்து படிக்கலாம். பாடப்புத்தகம் அல்லாத சில சிறந்த புத்தகங்களை, குழந்தைகளுக்குப் படிக்க கொடுத்து, அதன் கருத்தாக்கம் பற்றி அவர்களுடன் கலந்துரையாடலாம்.அதுபோன்ற கலந்துரையாடலில், உங்களின் கருத்தை திணிப்பதை தவிர்த்து, அவர்களின் கருத்தை ஆர்வமுடன் கேளுங்கள்.

* பொதுவாக இரவு நேரத்தில் உணவருந்தும்போது, குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது ஒரு நல்ல ஆரோக்கிய சூழல். இந்தப் பழக்கமானது, உங்களுக்கும், உங்களின் விடலைப் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். ஏனெனில், அத்தகைய சூழலில், குழந்தைகள் தங்களின் மனதில் உள்ளதை பெற்றோரிடம் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஆனால், அந்த சந்தர்ப்பத்தை, பெற்றறோர்கள் தங்களின் கருத்துக்களை திணிப்பதற்கான போதனைக் களமாக ஆக்கிவிடக்கூடாது. பிள்ளைகளைப் பேசவிட வேண்டும்.

* வெறுமனே அமர்ந்து கொண்டு ஏதாவது பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், ஏதேனும் ஒரு வேலையை நீங்களும், உங்களின் விடலைப் பருவ பிள்ளையும் இணைந்து செய்து கொண்டே பேசலாம். வீட்டை சரிப்படுத்துதல், வெளியில் கடைக்கு செல்லுதல் போன்ற பணிகளை செய்துகொண்டே பிள்ளைகளுடன் கலந்துரையாடுவது, சூழ்நிலையை எளிதாக்கும்.

* பல ஆய்வு முடிவுகளின்படி, ஒரு வீட்டில் தந்தையைவிட, தாய்தான் குழந்தைகள் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அதிகளவில் துணைபுரிகிறார். தந்தை ஒரு அதிகார மற்றும் கட்டளை மையமாகவே பார்க்கப்படுகிறார். ஆனால் தற்போதைய சூழ்நிலைகளில், பல தந்தைகளும் தங்களின் பிள்ளைகளிடம் நெருங்கி வருகிறார்கள்.

* சில விடலைப் பிள்ளைகளிடம் ஒரு வேலையை செய்யச் சொன்னால், அவர்கள், அதற்கு முற்றிலும் எதிர்பதமாகவே செய்வார்கள். ஏனெனில், அவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில்தான், பெற்றோர்கள் தெளிவாக செயல்பட வேண்டும். உங்களின் முடிவுகளை பிள்ளைகளின் மீது திணிக்காமல், அவர்களுடன் ஆலோசித்தே எந்த திட்டமிடுதலையும் மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் சிந்தனையை முதிர்ச்சியானதாக மாற்றும்.

* தொடர்ச்சியான மற்றும் பின்வருபவைகள் பற்றி சிந்திக்கும் மூளையின் பகுதியானது, விடலைப் பருவத்தில்தான் வளர்ச்சியடைகிறது. விடலைப் பிள்ளைகளுக்கு, சரியான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம், தங்களின் புதுமையான செயல்களின் மூலம் நம்மை அவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்கள்.

* உங்களின் விடலைப் பிள்ளையை எப்படி வழிநடத்துவது என்பதில் உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தால், உங்கள் பிள்ளையின் முன்பாக வெளிப்படையாக நீங்கள் விவாதம் செய்ய வேண்டாம்.

* பல இல்லங்களில், பெற்றோரிடையே, தாங்கள் சொல்வதைத்தான் தங்களின் பிள்ளை கேட்க வேண்டும் என்ற ஒரு பிடிவாதம் இருக்கும். இதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதால், அவர்கள் இந்த சூழலை எதிர்மறையாக கையாள நினைப்பார்கள்.

* தாயும்-தந்தையும், ஒருவரின் அக்கறையில் மற்றொருவர் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன்பாக நீங்கள் ஒற்றுமையுணர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், உங்களின் விடலைப் பிள்ளையுடனான உங்களின் உறவு வலுப்படும்.

* என்னதான் உங்களின் அரவணைப்பிலேயே உங்களின் குழந்தை வளர்ந்திருந்தாலும், அவர்கள் விடலைப் பருவத்தை எட்டியவுடன், தாங்கள் பெரிய மனிதர்கள் என்பதை உணர்கிறார்கள். எனவே அவர்களின் தனிமை உணர்வுக்கு பெற்றோர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் முன்னுரிமை எடுத்துக்கொண்டு, தலையிட்டு, அவர்களை சங்கடப்படுத்தக்கூடாது. தேவையான உதவிகளை தவறாமல் செய்ய வேண்டும். அதேசமயம், அவர்களுக்கு தெரியாத வண்ணம் சரியான முறையில் கண்காணிக்கவும் வேண்டும்.

Thanks to Dinamalar.com

நீ ஏழையாக பிறந்தது தவறில்லை. ஏழையாகவே வாழ்வதுதான் மாபெரும் தவறு. - பில்கேட்ஸ்.


1 கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவன். - பிரெஞ்சு பழமொழி.

2 மனிதனுக்கு நல்லது செய்வதுதான், நாம் கடவுளுக்கு செய்யும் மிகச் சிறந்த தொண்டாகும். - பிராங்களின்.

3 அழகு, பெண்ணிற்கு பெருமை சேர்க்கிறது. கற்பு அவளுக்கு அளவற்ற மதிப்பை தருகிறது. அடக்கம் அப்பெண்ணை தெய்வமாக்குகிறது. - ஷேக்ஸ்பியர்

4 உண்மை ஒளிவுமறைவு இல்லாத வெளிப்படையையே விரும்புகிறது.

 5 எங்கே உண்மை இருக்கிறதோ; அங்கே தன்னலம் இருப்பதில்லை.

 6 உண்மை பரபரக்காது; அது அமைதியான நெஞ்சுடையது.
 7 உண்மைக்கு ஒப்பானது எதுவும் இல்லை. ===ஷேக்ஸ்பியர்

8 நியாயமான வழியில் நிறைய பணம் சேர்ப்பதில் தவறில்லை. ஆனால், அதில் ஒரு பங்கை நல்ல விஷயங்களுக்கு கொடுங்கள்.'' - `இன்போசிஸ்' நாராயணமூர்த்தி.

9 நீ ஏழையாக பிறந்தது தவறில்லை. ஏழையாகவே வாழ்வதுதான் மாபெரும் தவறு. - பில்கேட்ஸ்.

 10 பொறுத்தார் பூமி ஆள்வார்.

 11 வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும்.
  
12 சிறு தீயே பெரு நெருப்பாகும்.

 13 காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

 14 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

15 ஜால்ராக்களுக்கு செவி சாய்க்காது, காதுகளுக்கு கசப்பான வார்த்தைகளையும் கேட்க கற்று கொடுக்கவும். சரிவு ஏற்படாது சுதாரித்துக் கொள்ளலாம். 

16 உலகம் ஒரு கண்ணாடி. உனது முகத்தையே திருப்பிக் காட்டும். எதைக் கொடுக்கிறோமோ அதையே பெறுவோம்.

17 பிரச்சினைகள் இன்றி வாய்ப்புகள் இல்லை. தடைகள் இன்றி திறமைக்கு வேலையில்லை.


 
 

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...