Total Pageviews

Thursday, September 5, 2024

முதுமை + தனிமை= கொடுமை !

முதுமை + தனிமை= கொடுமை ! 


 

பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!

 வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்... 

 இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை... இங்குதான் என் மகள் படிப்பாள்... இங்குதான் விளையாடுவாள்... என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்... என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து.... 

என்ன சமைப்பது?... என்ன சாப்பிடுவது?... அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்.. 

பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது... தனிமை... வெறுமை... அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்... பயணம் ஒரு கொடுமை... 

லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்... சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது... ஓலாவும், ஊபரும்... நமக்கு தேவைப்படும் நேரத்தில், பீக் hour சார்ஜ் போட்டு களைப்படைய செய்கின்றனர்... 

நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்.... இன்று சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது... 

 எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்... வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன! 

இவை வேண்டாமென ஒதுங்கி... பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்... பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்... என்றால்... 

அந்த நேரம் அவர்கள்... ஏதோ ஒரு மாலில்... ஏதோ ஒரு ஓட்டலில்... ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்... பிசியாக இருப்பார்கள்... "ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்... "இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்... 

நாலு நாள் கழித்து... "எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்... நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்... அவர்கள் டைமிற்கு... நம் தூக்க நேரம்... பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்! 

நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்..., அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது. மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்... பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்... அவன் வெளியே விளையாடறான்... அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்... அவன் டியூஷன் போயிருக்கான்... யோகா போயிருக்கான்... என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்... 

எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்... முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு... ஓடி விடும்... 

என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?... 

 நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்... அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!... எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?

 இந்த அரசியல்களும்... இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!... என் சொந்த வீடே... எனக்கு அனாதை இல்லமாகிப் போனது...

 ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...! மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்... "எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது... ( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...) "எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா..." ( மனதுக்குள் ஏதோ...) வாழ்கிறேன்!

No comments:

Post a Comment

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...