'புளியோதரை மிக்ஸ் விற்று கோடிகள்ல சம்பாதிக்க முடியுமா?’னு கேட்டா பலர் சிரிப்பாங்க. ஆனா, அதே புளியோதரை மிக்ஸை பிராண்டா மாற்றினா என்ன நடக்கும் தெரியுமா?
வீட்டில் ஒரு தூக்குவாளியில் ஆரம்பிச்ச விற்பனை இன்று ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்யும் நிறுவனமா வளர்ந்திருக்கு. பிசினஸ்ங்கிறது நாம என்ன பொருளை விற்கிறோம்கிறதுல மட்டுமல்ல. எப்படி விற்கிறோம், யாரிடம் விற்கிறோம்ங்கிறதுலேயும் இருக்கு. எந்தப் பொருளாக இருந்தாலும் தரமான பொருளாக இருந்தால் மக்கள் நிச்சயம் நம்மைத் தேடி வருவாங்க. இதற்கு நாங்க உதாரணம்” என்று மகிழ்ச்சிப் பொங்க பேச ஆரம்பிக்கிறார்கள் ‘புளிக்காய்ச்சல் டாட் காம்’ நிறுவனத்தின் நிறுவனர்கள் வினோத் மற்றும் சுபா.
வினோத் மற்றும் சுபா இருவரும் ஐடி நிறுவன ஊழியர்கள். வினோத்தின் அப்பா உணவு பிசினஸ் செய்து வந்தவர். தந்தை மறைவுக்குப் பின் அவர் நினைவாக உணவு சார்ந்து இயங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை, நங்கநல்லூரில் வீட்டில் ஒரு தூக்குவாளியில் வைத்து புளிக்காய்ச்சல் விற்கும் பயணத்தை தன் மனைவியுடன் சேர்ந்து தொடங்கினார். தற்போது, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஸ்நாக்ஸ் வகைகள், ரெடி மிக்ஸ் பொடி வகைகள், ஸ்வீட் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய முயற்சியை இன்று ஆண்டுக்கு 8 கோடி டர்ன்ஓவர் செய்யும் நிறுவனமாக வளர்ந்திருக் கிறார்கள். பிசினஸில் தங்களின் ஆரம்பம் முதல் முன்னேற்றம் வரை அனைத்தையும் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.
“எங்களுக்கு சொந்த ஊர் பாலக்காடு. ஆனா, பொறந்ததுல இருந்தே சென்னையிலதான் இருக்கோம். எங்க அப்பா கேட்டரிங் பிசினஸ் பண்ணிட்டு இருந்தார். கேட்டரிங்க்கு அம்மாவும் அப்பாவும் சேர்ந்து சமைப்பாங்க. சமையல் பிசினஸை பொறுத்தவரை உழைப்பைக் கொட்டிக் கொடுக்கணும். 24 மணி நேரமும் வேலை இருந்துட்டே இருக்கும்.
சுவையை சரியாக மெயின்டெயின் பண்ணணும், பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருளையும் தரமானதாகப் பார்த்துத் தேர்வு செய்யணும். கூடுதலா போட்டி அதிகம். இத்தனைக்கும் நடுவுல எங்க அப்பா, என்னையும், தம்பியையும் படிக்க வெச்சாரு.
‘சமையல் தொழில்ல இருக்கும் கஷ்டம் என்னோட போகட்டும். இந்தத் தொழில் பக்கமே வரக்கூடாது’னு சொல்லி வளர்த்தாரு. ஆனா, அவரு உயிரோடு இருக்கும்போது திறமையை எப்படி பிசினஸாக்குறதுனு எங்களுக்குத் தெரியல. அவர் பட்ட கஷ்டமெல்லாம் நினைச்சா வருத்தமா இருக்கு.
அப்பாவின் இழப்பும்... வாழ்க்கையை மாற்றிய முடிவும்!
நானும் மனைவியும் ஐடி நிறுவனத்துல வேலை பார்த்துட்டு இருந்தாங்க. எல்லாம் நல்லபடியா போயிட்டு இருந்த நேரத்துல அப்பாவோட மரணம் எங்களுக்கு பெரிய இழப்பா இருந்துச்சு. அப்பா இறந்ததுக்கு அப்புறம்கூட, அவருடைய வாடிக்கையாளர்கள்கிட்ட இருந்து ரெகுலரா போன் வந்துட்டே இருந்துச்சு. அதனால, அப்பாவோட பிசினஸை தம்பி கையில எடுத்தான்.
அப்பாவின் இழப்புல இருந்து மீண்டு வர்றதுக்குள்ள என் மனைவிக்கு, உடல்நலப் பிரச்னை ஏற்பட்டுச்சு. அதனால வேலையை விட்டுட்டு வீட்ல இருந்தாங்க. உடல் ரீதியான வலி ஒரு பக்கம், வேலையை விட்டது ஒரு பக்கம்னு அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸா இருந்தாங்க. அவங்களோட கவனத்தை திசை திருப்ப ஏதாவது பிசினஸ் ஆரம்பிச்சுக் கொடுக்கலாம்னு தோணுச்சு.
சமையல் சார்ந்த விஷயங்களில் ஏற்கெனவே அனுபவம் இருந்ததால, அந்த ஐடியாக்களை யோசிச்சோம். இப்போ இருக்கும் அவசர உலகத்துக்கு ஏற்ற மாதிரி ரெடி மிக்ஸ் ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு.
10,000 ரூபாய் முதலீடு... ஒரு தூக்குவாளியில் தொடங்கிய பிசினஸ்!
அம்மா புளிக்காய்ச்சல் விற்கலாம்னு ஐடியா கொடுத்தாங்க. அம்மாகிட்ட ரெசிப்பி கேட்டு வாங்கினோம். 10,000 முதலீடு பண்ணி, தம்பியோட கிச்சன்லேயே புளிக்காய்ச்சல் தயார் பண்ணினோம் அதை தூக்கு வாளியில வெச்சு என் மனைவி வீட்டிலேயே விற்பனை பண்ண ஆரம்பிச்சாங்க” என்று பிசினஸ் தொடங்கியது பற்றி வினோத் பகிர, நிறுவனம் தொடங்கியது பற்றி பேச ஆரம்பித்தார் சுபா.
வீட்டு வாசலில் தொடங்கிய விற்பனை... இணையம் வரை விரிந்த சந்தை!
“நாள்கள் நகர நகர, கணவன் - மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போகும் வீடுகளில் இருந்து ரெடிமிக்ஸ் ஐயிட்டங்கள் கேட்க ஆரம்பிச்சாங்க. அக்கம்பக்கம் வீடுகள் தாண்டி வெளியூர்களில் இருந்தும் ஆர்டர் வர ஆரம்பிச்சது. அதனால பேக்கிங்கும் தேவைப்பட்டுச்சு. பாக்ஸ்ல போட்டு விற்பனை பண்ண ஆரம்பிச்சோம்.
ஒரு சில மாசத்துல பிசினஸ் பிக்அப் ஆக ஆரம்பிச்சது. அதனால மாமனார் பேர்ல ‘நங்கநல்லூர் நாராயணன் ஸ்டோர்ஸ்’னு வீட்டு பக்கத்துல ஒரு சின்ன கடையை ஆரம்பிச்சோம். குழம்பு தாண்டி ரெடி மிக்ஸ் பொடிகள், குழம்பு பேஸ்ட் வகைகளை விற்பனை பண்ண ஆரம்பிச்சோம். கடை ஆரம்பிச்ச பிறகு செலவுகள் அதிகமாச்சு. ஆனா, நங்கநல்லூர் தாண்டி எங்க பொருளை விற்க முடியல. தீர்வு தேடினோம்...ஆன்லைன் பிசினஸை ஆரம்பிச்சோம்” என்ற சுபாவைத் தொடர்ந்து தங்களுடைய பிசினஸை ஆன்லைன் பிளாட்ஃபார்மில் நகர்த்தியது பற்றிச் சொன்னார் வினோத்.
ஒரு ரெசிப்பி... ஒரு பிராண்டாக மாறிய கதை!
“ஆன்லைன் பிசினஸ் ஆரம்பிக்கும்போதே மக்களை ஈர்க்கும் விதமா பேர் இருக்கணும்னு நினைச்சோம். எங்களோட பிரதான ரெசிப்பி புளிகாய்ச்சல்ங்கிறதால அதையே பிராண்ட் பெயரா வெச்சு ட்டோம். உணவுக்கான தரச்சான்றிதழ், ஜி.எஸ்.டி எண் எல்லாத்தையும் வாங்கி முறைப்படி பிராண்டாக இயங்க ஆரம்பிச்சோம். பிசினஸை வளர்க்க அரசாங்க லோன்களை வாங்கினோம்” என்றவர் தங்களின் மார்க்கெட் டெக்னிக் பற்றி பேச ஆரம்பித்தார்.
75 வயது மாமாதான் எங்களுடைய முதல் இன்ஃப்ளூயன்ஸர்!
“இது பாரம்பர்ய உணவோட சம்பந்தப்பட்ட பிராண்ட்ங்கிறதால பெரியவங்க யாராவது வீடியோல பேசுனா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனால, எங்க மாமாவை வெச்சு வீடியோஸ் பண்ண ஆரம்பிச்சோம். அவருக்கு 75 வயசு. அவர் பொறுமையா பேசுற வீடியோக்கள் மக்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சுது. நல்ல ரீச் கிடைச்சுது. நாங்களே வீடியோ எடுத்து, எங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு பண்ண ஆரம்பிச்சோம். அப்புறம் இணைய தளம் மூலமாகவும் விற்பனையைத் தொடங்கினோம். இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங்கையும் கையில எடுத்தோம். நல்ல ரீச் இருந்ததால் அடுத்தடுத்து ஸ்நாக்ஸ் வகைகளை அறிமுகம் பண்ணிணோம். இப்போ ஊறுகாய், வத்தல் பொடி வகைகள், இனிப்புகள், சாத பேஸ்ட்கள், ரெடிமிக்ஸ் பொடி வகைகள்னு 100-க்கும் அதிகமான பொருள்கள் இருக்கு.
இப்போ பிசினஸ் ஆரம்பிச்சு மூணு வருஷங்கள் ஆகுது. முதல் வருஷமே தீபாவளி ஆர்டர்கள் எடுத்தோம். அளவுக்கு அதிகமா ஆர்டர்கள் வந்தப்போ சமாளிக்க முடியாம திணறினோம். ஆனா, இப்போ எவ்வளவு ஆர்டர்கள் வரும் என்பதை கணிச்சு பொருள்கள் தயாரிக்க ஆரம்பிச்சுட்டோம். 30 பேர் வேலைக்கு இருக்காங்க. சின்ன கிச்சன்ல ஆரம்பிச்ச பிசினஸ் இப்போ 2000 சதுரடி இடத்துல இயங்குது.
ரெசிப்பிகளுக்கு ஒரு நிலைத்ததன்மை கொண்டு வந்துட்டோம். இப்போ வரை இயந்திர பயன்பாடுகள் இல்லாமல் கைகளில்தான் உருவாக்குறோம். தேங்காய் எண்ணெய் உணவுகள்தான் எங்களுடைய யுஎஸ்பி” என்ற வினோத்தை தொடர்ந்து, தாங்கல் சந்தித்த சவால்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார் சுபா.
“பொருள்களை நீண்ட நாள் கெடாமல் இருக்கத்தான் நிறைய மெனக்கிட வேண்டி இருந்துச்சு. நாங்க பிசினஸ் ஆரம்பிச்ச சில மாதங் களிலேயே வெளிநாட்டு ஆர்டர்கள் எல்லாம் வந்துச்சு. ஆனா, இங்க இருந்து கொரியர் அனுப்பி பொருள் அவங்க கைக்கு கிடைக்கிறதுக்குள்ள அது கெட்டுப்போயிடும். இல்ல அடுத்த ஒரு சில நாள்ல கெட்டுப் போயிடும். இதுதான் எங்களுடைய பெரிய சவாலாக இருந்துச்சு. எண்ணெய் பயன்பாடு அதிகமா இருந்தா பொருள் சீக்கிரமா கெட்டுப்போகாதுனு, அதிக எண்ணெய் பயன்படுத்த ஆரம்பிச்சோம். பிறகு, ஆக்ஸிஜன் இல்லாத நவீன பேக்கிங் முறையைக் கொண்டு வந்து ஒரு மாசம் வரை எங்களுடைய உணவுப் பொருள் கெடாமல் இருக்கும் டெக்னிக்கைக் கண்டு பிடிச்சுருக்கோம். தினம் தினம் எங்க பிசினஸ் சார்ந்து புதுப்புது தகவல்களை நாங்க தெரிஞ்சுக்கிட்டு அதை பிசினஸ்ல நடைமுறைப்படுத்தவும் செய்றோம்.
தினமும் ரூ.3 லட்சம் விற்பனை!
ரெசிப்பி உருவாக்குறது, சமையல் மேற்பார்வையெல்லாம் எங்க மாமியார் பொறுப்பு. பேக்கிங், கணக்கு வழக்குகளை என் கணவர் பார்த்துக்குறாங்க, மார்க்கெட்டிங்கை நான் கவனிச்சுக்கிறேன்.
இப்போ நங்கநல்லூர், மடிப்பாக்கம், பெங்களூரில் கடை இருக்கு. எட்டுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்புறோம். கிளைகளும் கேட்டுட்டு இருக்காங்க. ஆரம்பத்துல ஒரு நாளைக்கு 2,000 ரூபாய்க்கு விற்பனை ஆனாலே பெரிய விஷயமாக இருந்துச்சு. இப்போ ஒரு நாளைக்கு மூணு லட்சம் ரூபாய் வரை விற்பனை பண்றோம்.
பொருள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை... தரத்தையும் நம்பிக்கையையும் விற்கத் தெரிஞ்சா, சந்தை நம்மைத் தேடி வரும் என்பதை மெய்பித்து உள்ளோம்” என்று விடைபெறுகிறார்கள் புளிகாய்ச்சல் நிறுவனத்தின் நிறுவனர்கள்.
இந்தப் புளியில், லாபத்தின் தித்திப்பு!
No comments:
Post a Comment