செலவுகளுக்கு அஞ்சி குழந்தை பெறுவதை தவிர்க்கும் தம்பதிகள் அதிகரித்து வருவது ஏன்?

இந்திய சமூகத்தில் திருமணங்களுக்கு எந்தளவு முக்கியப் பங்கு உண்டோ, அதைவிட அதிக முக்கியத்துவம் 'குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்' என்பதைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. திருமணம் என்பதே குழந்தைகள் பெறத்தான் என்ற எண்ணம் பிரதானமாக இருக்கும் சமூகங்களுக்கு, DINK (டிங்க்) எனும் விஷயம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
Double Income No Kids என்பதன் சுருக்கமே 'டிங்க்', ஒரு குடும்பத்தில் இரண்டு வருமானங்கள் இருந்தாலும் அல்லது கணவன்- மனைவி என இருவரும் வேலை செய்தாலும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடுவது அல்லது பெற்றுக் கொள்ளவே வேண்டாம் என்ற முடிவை எடுப்பதுதான் 'டிங்க்'.
இவ்வாறு வாழும் தம்பதிகளிடையே செலவழிக்கக்கூடிய வருமானம் (Disposable Income), அதாவது வரிகள் மற்றும் அத்தியாவசிய செலவுகள் கழிந்த பிறகு, கையில் மீதமிருக்கும் வருமானம் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் இதை விரும்புகிறார்கள் என சில ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பாக, மில்லனியல் (1980 முதல் 1990களின் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள்) மற்றும் ஜென் Z (1997 முதல் 2012 வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள்) தலைமுறையைச் சேர்ந்த 23% பேருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை என ஒரு ஆய்வு கூறுகிறது.
உளவியல் தாக்கங்கள் என்ன?

மதுரையைச் சேர்ந்த பிரியா 2000களின் தொடக்கத்திலேயே இந்த 'டிங்க்' வாழ்க்கை முறையைப் பின்பற்றியவர்.
"நானும் எனது கணவரும் காதலிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே, குழந்தை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தோம். மதுரைதான் பூர்வீகம் என்றாலும், நாங்கள் இருவரும் படித்தது, அதன் பிறகு வேலை செய்தது வெளிநாட்டில் என்பதால் இருவருக்குமே அந்த மனநிலை இருந்தது.
ஆனால், 40 வயதைக் கடந்த பிறகு, வாழ்வில் ஒரு வெறுமையை உணரத் தொடங்கினோம். சொந்த ஊருக்குத் திரும்பினோம். ஆனாலும் அந்த வெறுமையைக் கடக்க முடியவில்லை. அதன் பிறகுதான், ஒரு பெண் குழந்தையை சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கலாம் என்ற முடிவை எடுத்தோம். இப்போது குழந்தையின் சிரிப்பைப் பார்க்கும்போது, இந்த முடிவை முன்னரே ஏன் எடுக்கவில்லை என்று அடிக்கடி யோசிக்கிறேன்," என்கிறார் பிரியா.
இந்தக்
கட்டுரையின் முன்பகுதியில் குறிப்பிட்ட பியூ ஆய்வு மையத்தின் ஆய்வில்
கலந்துகொண்ட 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில், 26% பேர் 'முதுமையில்
தங்களை யார் கவனித்துக் கொள்வார்கள் என்பது பற்றிய கவலை' தங்களுக்கு
இருப்பதையும், 19% பேர் தங்களுக்கு தனிமை குறித்த பயம் இருப்பதையும்
ஒப்புக்கொண்டனர்.
'டிங்க்' வாழ்க்கை முறையின் இத்தகைய உளவியல் பாதிப்புகள் குறித்துப் பேசிய கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் மருத்துவர் பூர்ண சந்திரிகா, தன்னிடம் மனநல ஆலோசனைக்கு வரும் சில தம்பதிகளில், "கணவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இருக்கும், ஆனால் மனைவிக்கு இருக்காது. சில நேரம் இதற்கு நேர்மாறாகவும் இருக்கும்" என்று கூறினார்.
"அதற்கு வேலை, தற்போதைய பொருளாதாரச் சூழலை அப்படியே பராமரிக்க வேண்டும் என்ற கவலை போன்ற பல காரணங்களை அவர்கள் சொல்வார்கள். சிலர் இதற்காகவே விவாகரத்து வரை கூடச் செல்வார்கள்" என்கிறார்.
அதே நேரம், பிள்ளைகளைப் பெற்று வெளிநாட்டிற்கு படிப்பு அல்லது வேலைக்காக அனுப்பிவிட்டு, தன்னிடம் மனநல ஆலோசனைக்காக வரும் பெற்றோர்களும் உண்டு என்கிறார் அவர்.
"எனக்குத் தெரிந்து ஒருவர், நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறார். ஆனால் அவருடைய மகன், வேலைக்காக அமெரிக்கா சென்றவர் 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்தியா வருகிறார்.
இவரோ ஒரு ஓய்வு பெற்றவர்களுக்கான சமூகத்தில் (Retirement society) வசிக்கிறார். எனவே இதில் சரி தவறு எனக் கிடையாது. முழுக்க முழுக்க ஒருவரின் தனிப்பட்ட விருப்பமே" என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.
No comments:
Post a Comment