Velmurugan P
சென்னை: ஒரு 10, 15 வருடம் முன்பு அல்லது அந்த காலத்து வீடுகளில் வசிக்கும் பலர் பத்திரம் மட்டுமே ஆதாரம் என்று வசித்து வருகிறார்கள். தாத்தாவின் பெயரில் உள்ள வீடு இருக்கிறது அல்லது பாட்டி பெயரில் வீடு இருக்கிறது ஆனால் இன்று வரை பட்டா வாங்கவே இல்லை. ஆனால் பாட்டி, தாத்தா உயிருடன் இல்லை என்றால் சற்றே சிக்கல் வரலாம். என்னென்ன சிக்கல்கள் வரலாம். ஏன் பட்டா முக்கியம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அந்த காலத்தில் பலர் பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள், பத்திரப்பதிவு மட்டுமே செய்துவிட்டு வீட்டு வரி, குழாய் வரி, மின் இணைப்பு என எல்லாமே வாங்கியிருப்பார்கள். ஆனால் இன்றைக்கு பட்டா இல்லை என்றால் நிறைய சிக்கல்கள் வருகிறது. ஒரு வீட்டை விற்க வேண்டும் என்றால், அந்த வீட்டிற்கு பட்டா வேண்டும். பட்டா வாங்க முடியாது என்றால், அந்த நிலத்தை யாரும் வாங்க முன்வருவது இல்லை.
பஞ்சமி நிலம், கள்ளர் ஜாதி நிலம், வண்ணார் நிலம், பூமி தான நிலம், மேய்க்கால் புறம்போக்கு, சாலை ஆக்கிரமிப்பு, நீர் வழி ஆக்கிரமிப்பு, வனப்பகுதி நிலம், கோயில் நிலம் என என பல்வேறு வகை நிலங்களில் வீடுகளை அந்த காலத்தில் வாங்கியவர்கள் பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள். இந்த நிலங்களுக்கு அன்றைய சூழலில் விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டத்தில் வாங்கியவர்கள் தப்பிவிட்டார்கள். ஆனால் இன்றைக்கு அவர்கள் பட்டா வாங்குவது ஏறக்குறைய சாத்தியமே இல்லை. இதில் சாதி வாரியாக இலவசமாக கொடுத்த நிலங்களை வேண்டுமானால், அந்தந்த சாதியினருக்கு விற்றுவிட முடியும்.. மற்ற நிலங்களை விற்கவே முடியாது என்பதே எதார்த்தம்.
இது ஒரு சிக்கல் என்றால், இன்னொரு நடைமுறை சிக்கல் இருக்கிறது.. ஒரு மூதாதையர் பெயரில் ஒரு சொத்து இருக்கும். அந்த சொத்து, இன்று வரை பட்டா பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே இருக்கும். அந்த மூதாதையரின் மகன் அல்லது மகளின் பேரன், பேத்திகள் இப்போது போய் சொத்தை விற்கலாம் என்று நினைத்தால், வாரிசு சான்றிதழ் கேட்பார்கள். தாத்தா, அப்பா என வரிசையாக வேண்டும்.. அதனை வாங்குவதற்கு பெரிய அலைச்சல் ஏற்படும். வாங்கிவிடலாம் என்றாலும், அதற்குமுறையான ஆவணங்களை சமர்பித்து கடினமான நிலையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
அதேபோல் இன்னொரு நடைமுறை சிக்கல் உள்ளது.. பட்டா இல்லாவிட்டால், விற்க முடியாது என்பதால் பலரும்பட்டா வாங்கிய பின்னரே நிலத்தை வாங்க முன் வருவார்கள். பட்டா இல்லாத நிலங்களுக்கு அல்லது வீடுகளுக்கு எந்த வங்கியும் கடன் கொடுக்காது. எனவே வீடு கட்ட முடியாது. ஏற்கனவே கட்டிய வீட்டை இடித்து கட்ட வேண்டும் என்றால் அந்த வீட்டிற்கு பட்டா வாங்கியிருக்க வேண்டும். ஆகவே உங்கள் அப்பா, தாத்தாக்கள் வீடுகளுக்கு பத்திரப்பதிவு மட்டும் செய்துவிட்டு பட்டா வாங்காமல் விட்டிருக்கிறார்களா என்று பாருங்கள். பட்டா வாங்காமல் விட்டுவிட்டார்கள், அவர்கள் உயிருடன் உள்ள காலத்திலேயே வாங்கிவிட்டால் எளிதாக இருக்கும். இல்லாவிட்டால் தேவையற்ற மனஉளைச்சல் மற்றும் அலைச்சலை சந்திக்க நேரிடலாம்.
அதேபோல பல ஆண்டுகளாக பட்டா வாங்காமல் விட்டிருக்கும் நிலத்திற்கு பட்டா வாங்க போகும் போது , பக்கத்து வீட்டின் நில உரிமையாளருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சில அடிகள் சேர்த்து பட்டா வழங்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. நாளடைவில் நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டு, அதன்பிறகு தெரியவந்தால், உங்களுக்கு தேவையற்ற சிக்கல்கள் வரும். எனவே பட்டா வாங்காமல் இருந்தால் வாங்கிவிடுங்கள். முடிந்த வரை சரியான முறையில் உயில் எழுதி, அதனை முறையாக பதிவு செய்து வந்தால், எந்த காலத்திலும் சிக்கல் வராது.
No comments:
Post a Comment